வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

முழுமையான வாழ்க்கை வாழ வேண்டும்

நீரோடும், மழையோடும்,செடி கொடியோடும்,

குருவிகளோடும், அணிலோடும், இசையோடும், உறக்கத்தோடும், உடலோடும், உயிரோடும், நிறைவுடன், நன்றியுடன், சத்தியத்துடன், உண்மையுடன்,
ஒரு முழுமையான வாழ்கை முடிந்த பின்........முடித்துக் கொள்ளவேண்டும் இவ் உலக வாழ்க்கையை  .....
**எங்கேயோ பார்த்து ரசித்திட்ட கவிதை இது. என் உணர்வினைப் பிரதிபலிப்பதாக உணர்கிறேன்.(மீண்டும் மீண்டும் பிறக்காமல்
என்கிற வார்த்தையை  இதோடு
சேர்த்துக்கொள்வேன்).. ... 

சத்தியமானது தன்னை வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு மனிதர்கள் மூலம் வித்தியாசமான காலகட்டங்களில் வெளிப்படுத்திக் காட்டிக் கொண்டேயிருக்கிறது. ஆன்மீகத் தேடலிலுள்ள ஆன்மாவானது அதை இனங்காண இறைசக்தியின் துணை அவசியம் தேவை. குருவைத் தேடி இந்த உலகம் முழுவதும் தேடினாலும்  நம் கண்களுக்கு குருவானவர் புலப்படமாட்டார்...
மாறாக நாம் அனைத்து தகுதிகளையும் அடைந்து நாம் குருவுக்காக காத்திருப்பின் அவர் நம் முன், நம்மை தேடி வருவார். இதுவே நான்  உணர்ந்த உண்மை. இறை இன்பத்தை விளக்கத் தமிழும் இடம் தர முடியாது.
மனிதப்பிறவி என்பதே இறைவனின் ஆற்றலை உணர்ந்து, அவனது அருளில் கரைந்து அவனுக்குள் ஐக்கியமாகி, முக்தி அடைவது தான். முக்திக்கு முன்னால் பணம், பதவி, பகட்டு என்பவைகள் வெறும் தூசுக்கு சமம். ஆனால் இந்த உலகத்தில் வாழும் வரைக்கும் அதன் தேவைக‌ளும் தவிர்க்க முடியாதது.

பிறந்த கணத்தில் இருந்து துவங்கும் மனித வாழ்வின் பயணம் இறுதி மூச்சு வரையில் தொடர்கிறது. இந்த பயணத்தில் நாம் தேர்ந்தெடுக்கும் பாதையே நமக்கான வினைகளையும் அதன் எதிர்வினைகளையும் தீர்மானிக்கிறது. 

இதுவரை சாதித்தது என்னவென்று பார்த்தால் பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை.
வெற்றிகளின் மூலம் கிடைக்கும் பரிசுகளை விட தோல்விகளின் மூலம் கற்றுக்கொள்ளும் பாடங்களின் மதிப்பு விலைமதிப்பில்லாதது. வெற்றி என்பது ஒரு பயணம் மட்டுமே ஆனால் அதுவே முடிவல்ல....... சோதனைகளை சகித்துக்கொள்கிற மனுஷன் பாக்கியவான்....   என்னை  நானே தொலைத்து   விட்டுத்  தேடிய போது, என‌க்குக் கிடைத்த  அரிய பொக்கிஷம்  இந்த அனுபவம்.
பெற்றோர்களின் அரவணைப்பு  இல்லாத எல்லாக்  குழந்தைகளும்  அனாதைகள் என்றால், இதில் நானும் ஒன்று.
 சித்தர்கள்  விளையாடும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. 
பாசம் என்பது எவ்வளவு கொடியது என்பது பாசத்தில் இருந்து விடுபடும் ஒருவனுக்கு தான் தெரியும் . எல்லாவற்றையும் கடந்து தான் வரவேண்டும் என்பது சித்தர்களின் கொள்கையாக கூட இருக்கத் தோன்றுமோ என்று மனம் கூறுகிறது. 
 
"உயிர்" என்ற தத்துவத்தை உணர்ந்தவனுக்கு இவ்வுலகில் வாழும் அனைத்து உயிர்களும் சமம் தான். இதில் அவனுக்கு எந்தவொரு பேதமும் இல்லை.

எனது சொல்லாலும் செயலாலும் யாரையும் துன்புறுத்தக் கூடாது என்பதற்காக நான் எடுத்துக் கொண்ட வழி - "தீதும் நன்றும் பிறர் தர வாரா", "வலிகளை ஏற்றுக் கொள், இதுவும் கடந்து போகும்" என்பது.

அடிப்படைத் தேவைக்கு கூட வசதியும், வாய்ப்பும் இல்லாமல் அல்லாடும் அப்பாவி ஜீவன்கள், பசிக்கும் பட்டினிக்கும் உணவுக்கும், உடம்பை மறைக்க ஆடைக்கும், வெயிலுக்கும், மழைக்கும் ஒதுங்க ஒரு குடிசை வேண்டுமென்று நியாயமாக விரும்புகிறார்கள். அவர்களுக்கு அது கிடைக்கவில்லை. உடல் முழுவதும் எண்ணெயை பூசிக்கொண்டு உருண்டாலும், ஓட்டுவது தான் ஒட்டுமென்று அறிவுக்கு தெரியும். ஆனால் ஆசை? அறிவை வேலை செய்ய விடுவது இல்லை. எந்த வகையிலாவது பணத்தை தேடு என்று சரீரம் என்ற குதிரையை சாட்டையால் சொடுக்கிய வண்ணமே இருக்கிறது. மனிதன் அறிவைத்தேடி ஓடுகிறானோ இல்லையோ, அன்பைத்தேடி அலைகிறானோ இல்லையோ, பணத்தைத் தேடி நித்தம் நித்தம் அலைபாய்ந்து கொண்டே இருக்கிறான். ஓயாமல் உழைக்கிறான், உறங்காமல் பாடுபடுகிறான். உலகே மாயை, வாழ்வே மாயை என்று சந்நியாசம் சென்றவருக்குக் கூட ஏதோ ஒரு காரணத்துக்காக இந்தக் காலத்தில் பணம் தேவைப்படுகிறது.
இரண்டிற்கும் நடுவில் ஊசலாடும் நடுத்தர உயிர்களும், இந்த பூமியில் எண்ணில் அடங்காமல் இருக்கின்றன.
உப்புக்கும், சீனிக்கும், செப்புக் காசுக்கும் அலைந்து  கொண்டிருந்தால் ஆத்திகன் கூட நாத்திகன் ஆகிவிடுவான் என்பது மகாகவி பாரதியின் சத்திய வாக்கு. இந்தப் பெரிய பாதாளத்தைத் தாண்டி வெளியில் வந்தால் தான், அவர்கள் இறைவன் என்ற மகா சமுத்திரத்தை உணர முடியும். எனவே அவர்களை வறுமைக் கடலைத் தாண்ட வைக்க வேண்டிய கடமை நமக்குண்டு.  சுவாமி விவேகானந்தர் கூட, பசித்தவன் முன்னால் "வேதம் படிக்காதே! சாதம் படை" என்று சொன்னார். 

 மனிதப்பிறவி என்பதே இறைவனின் ஆற்றலை உணர்ந்து, அவனது அருளில் கரைந்து அவனுக்குள் ஐக்கியமாகி, முக்தி அடைவது தான். முக்திக்கு முன்னால் பணம், பதவி, பகட்டு என்பவைகள் வெறும் தூசுக்கு சமம். ஆனால் இந்த உலகத்தில் வாழும் வரைக்கும் அதன் தேவையும் தவிர்க்க முடியாதது..
இன்று என்பது உங்கள் கைகளில் உள்ளது. அதை அழகாக நிறைவுடன் செலவு செய்யுங்கள். அழகாகச்  செய்யுங்கள்.. கடனே என்று அல்ல. மறுபடியம் சில விசயங்களைச் செய்ய வாய்ப்புக்  கிடைக்காமலே போய் விடலாம். யார் அறிவார்? அதிலும் நல்லதை செய்யும் வாய்ப்பும்,  சக்தியும் இருக்கும் போதே செய்து விடுங்கள். பலன் தருகிறதோ இல்லையோ  செய்யுங்கள் (Just do it) ....செய்வதை ரசியுங்கள்.... ..(love and do it ).. ஒரு அரிசியானாலும் எறும்புக்கு உணவு என்று சிந்தியுங்கள். உணவை எப்போதுமே வீணாக்காதீர்கள்.. பசியோடு யார் இருந்தாலும் உணவளியுங்கள். அவர்களை உள்ளன்போடு நேசியுங்கள். யார் அறிவார் எங்கள் பிறப்புகளில் ஏதேனும் ஒன்றாய் அது அமைந்தால்?  நம்மில் யாராவது அதைப் பற்றி சிந்திப்பவர்களா? உணவோ, உடையோ, எது அத்தியாவசியப் பொருளோ? உங்களுக்கு தேவையற்ற குப்பையாக தோன்றும் ஒன்று, இன்னொருவருக்கு பொக்கிஷமாக இருக்கக் கூடும்.. அதனால் எப்போதும் அதை இன்னொருவர் உபயோகிக்க அனுமதியுங்கள்...  குடி நீரை விரயம் செய்யாதீர்கள். குப்பைகளை முறைப்படி கழியுங்கள்.  நாம் த‌வ‌றாக‌ க‌ழிக்கும் குப்பைக‌ளை த‌ர‌ம் பிரித்து வேலை செய்ப‌வ‌ர்க‌ளுக்கு இன்னமும் அதிக‌ வேலை ஆகிடும். இன்னொரு ஜீவ‌ன் அந்த‌ வேலையை செய்வ‌தை,வேறு யாரோ என்று நினைக்காதீர்க‌ள். எங்க‌ள் பிற‌ப்புக‌ளில் ஒன்றாக‌ அது அமைய‌ நேரிட்டால்? ந‌ம்மில் யாராவ‌து அதை சிந்தித்துப் பார்க்கிற‌வ‌ர்க‌ளாயின் 
அங்கே எங்களாலும் அந்த‌ உண‌ர்வை உண‌ர்ந்திட‌ முடியும்.

இயற்கையை இயன்றவரை சுத்தமாக வைத்திருங்கள்.. யாதொரு பொருளையும் வீணாக்காமல், அதை அவசியம் தேவைப் படுபவருக்கு கொடுங்கள்.. குப்பையில் போடுவதை முயன்றவரை தவிருங்கள்.. இயற்கையும் நீங்கள் கொடுப்பதைத் தான் உங்களுக்கு திரும்பக் கொடுக்கும் என்பதை எப்போதும் மறவாதீர்கள்.

கடவுள்... ப்ரபஞ்சம்... இயற்கை... பரிணாமம்...
இவைகளுக்கிடையில் நடக்கும் பரிணாம விந்தைகளை பார்த்து அதிசயித்ததை உங்களுக்காக சொல்ல நினைக்கிறேன்.! 

நாம் வாழும் இந்த "உலக நலனுக்காக" எனும் சிந்தையில் ஒன்றிணைந்து மரம் வளர்ப்போம் வாருங்கள்!!! 
ஒரு மரம் பூமியிலிருந்து ஒரு சத்தை எடுத்து, இன்னொரு சத்தைப் பூமிக்குக் கொடுக்கும். இந்த மரம் கொடுக்கும் சத்தை உண்டு செழிக்கும் இன்னொரு மரம் வேறொரு சத்தைப் பூமிக்கு கொடுக்கும். இப்படியே இந்த சங்கிலி பலவேறு ஜாதி மரங்களுக்கும் தொடரும். காடு செழித்திருப்பதன் தத்துவமும் இதுதான். எல்லா மர வகைகளும் ஒரே இடத்தில் இருக்கும் போது எல்லா மரங்களுக்கும் சரிசமமாக,  சத்துப் பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.  இதே தத்துவம் தான் ம‌னித‌ ச‌முதாய‌ம் மேம்ப‌ட‌வும் பெரிதும் உத‌வும்.  

உலகில் பெருகி வரும் மக்கள் தொகையின் காரணமாக, ந‌ம் தேவைகளும் பெருகிவிட்டன.  இதற்காக எந்த வரைமுறையும் இல்லாமல் இயற்கை ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. இப்படியே தொடர்ந்தால், வரும் நமது சந்ததிகளுக்கு நாம் எதை விட்டுவிட்டுப் போகப் போகிறோம்? எனும் கேள்வி எழுகிறது. நமது சந்ததியினர், "ஏன் சுவாசிக்கும் காற்று நஞ்சாக இருக்கிறது?, ஏன் குடிக்கத் தண்ணீர் இல்லை?, ஏன் மழை இல்லை?" என்று நிச்சயம் கேட்பார்கள். இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நம் எல்லோருக்கும்  இருக்கிறது. இப்போதே நாம் சுவாசிக்கும் காற்று, உண்ணும் உணவு, குடிக்கும் தண்ணீர் உட்பட அனைத்தும் மாசுபட்டுள்ளன. மாசுபட்டுவரும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, இய‌ற்கையை அழிக்காம‌ல் இருப்ப‌துவும், குப்பைக‌ளை முறைப்ப‌டி க‌ழிப்ப‌துவும், மரங்களை வளர்ப்பதுவும் தான் இன்றைக்கு நம் முன்னுள்ள ஒரே வழி.

*தலைமுடியை தெருவில் போடாதீர்கள், பறவையின் காலில் சிக்கினால் அதனால் பறக்க முடியாது இரைதேட முடியாமல் இறந்து போகும். 
*Gum சாப்பிட்டால், வெளியில் போடாதீர்கள். 
குருவிகள்  ஏதோ உணவென்று சாப்பிட்டால் இறந்து விடும்". 

எமது செயற்பாடுகள் 
இன்னொருவருக்கு இடையூறாகாமல் பார்த்துக்கொள்ளுவோமாக.
"தனது சொந்த ஆத்மாவை இழந்து உலகத்தையே வென்றாலும் மனிதனுக்கு கிடைக்கப் போகும் லாபம் தான் என்ன"?
உலகத்தவர் பார்வையில் பெரும் தனம் தேடியவன், புகழ் அடைந்தவன், அதிகாரங்களை அடையப் பெற்றவன் வெற்றி பெற்றவன். ஆனால் ஞானிகள் இந்த கருத்தின் அடிப்படையையே தவறு என்று கருதுகின்றனர்.

வாழ்க்கையை வெற்றியடையச் செய்வதை விட, உண்மையை கற்பது என்கிற பயணத்தில் போக விரும்புங்கள் ... இந்தக் க‌ன‌வெனும் மாயையில் இருந்து தயவு செய்து உங்களை மீட்டு எடுத்திட வேண்டும் என்று விரும்புங்கள்...

அருளுலகிலும், பொருளுலகிலும் ஒளியேற்ற அருளாட்சி அமைப்போம்!
ஏக்கங்களையும், தேக்கங்களையும் போக்க சமுதாய மாற்றம் செய்வோம்!

மனித வாழ்வே, மிக‌ப் புனிதமான‌ வாழ்வு!

எங்கும், எதிலும்
அன்பை, அமைதியை
நிறைவை, நிம்மதியை
இனிமையை, மகிழ்வை
அற வழியில் காண்போம்!.!

நற்பவி!நற்பவி!நற்பவி!

வாழ்க வளமுடன்!

திங்கள், 30 நவம்பர், 2020

தத்துவ கிறுக்கன் (கிறுக்கி)



இறைவன் என்பவன் மனிதனுடைய கற்பனைக்கு அப்பாற்பட்டவன் , ஞானம் (தன்னை அறிதல் ) மிகப்பெரிய விஷயம் , என்றும் அதற்கு குரு , தியானம் , துறவறம் , மனதை ஒருமுகபடுதல் , மந்திரம் இவை அனைத்தும் மிகவும் அவசியம் என்ற நம் மக்களின் தவறான எண்ணமே காரணம் , மேலும் ஞானம் அடைய நீண்ட காலம் ஆகும் , நமது வாழ்கையையே அர்ப்பணிக்க வேண்டும் என்று நினைகின்றனர் ..,
ஆனால் மேற்கூறியவை அனைத்தும் சமாதி நிலையை அடைவதற்கானவையே,  ஞானம் பெற கண் சிம்மிட்டும் நேரம் கூடத் தேவையில்லை, விஞ்ஞானத்தில் இருந்து கூட ஞானம் பெறலாம்". 
நினைத்துப் பாருங்கள்....பூமியின் பரப்பளவு (510,066,000 sq km) , பூமியை விட 109 மடங்கு பெரியது சூரியன் , சூரியனை விடப் பல பல மடங்கு பெரியது நட்சத்திரம் , எவ்வுளவு நட்சத்திரங்கள் என்று இன்னமும் கணக்குப் போட முடியவில்லை . நம் பூமியைப் போலவே பல ஆயிரம் கிரகங்களும் , சூரியன்களும்; பால் வெளியில் உள்ளன .., பல கோடி ஒளி  ஆண்டுகள் கடந்து இன்னும் ., பிரபஞ்சத்தின் அளவு கோள் நீள்கிறது என்கிறது விஞ்ஞானம் " 

நினைத்துப் பாருங்கள்.. இவ்வுளவு பெரிய பிரபஞ்சத்தில் ஒரு புள்ளி கூட இல்லை நமது பூமி. அதில் ஒரு மூலையில் நாம், நம்மை பாதுகாக்கப்  பெற்றோர் நண்பர்கள், உறவினர்கள், குடும்பத்திற்கு வீடு , நமது வீட்டைப்  பாதுகாக்க நாய் , தெருவைப் பாதுகாக்கச்  சங்கம் , காவல் , நமது மாநிலத்தை பாதுகாக முதலமைச்சர், அமைச்சர்கள், நாட்டுக்கு பிரதமர் , அப்பப்பா !!!!!! தலையே சுற்றுகிறது ..,இதைப் படிக்கும் போது வாழ்கையே ஒன்றும் இல்லை என்று ஒரு எண்ணம் வரும். அந்த எண்ணத்தை மனதில் நிறுத்த வேண்டும் ., திரும்பத்  திரும்ப நினைக்க வேண்டும் , நினைத்துக் கொண்டே சித்தர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.  அப்பொழுது தான் ஆன்மாவின் சுட்சுமம் உங்களுக்கும் புரியும். மனம் வெறுக்கும் ., அப்பொழுது மனம் வெற்றிடம் ஆகும் . அந்த வெற்றிடத்தில் ஆன்மாவின் ஜோதி பிரகாசிக்கும் .., சமாதி நிலை தானாகவே  அமையும் ..,
இப்படிக்கு

வாலாம்பிகை (சித்தர்களின் தெய்வம்)

அன்னை வாலாம்பிகை பற்றி எழுத வேண்டும் என்ற எண்ணம்  எனக்குள் பல நாட்களாக இருந்து வந்தது. இவள் சித்தர்களுக்கு முழு முதற் கடவுள். இவளைக் கொண்டே அறுபத்து நான்கு  கலைகளையும் சித்தர்கள் அறிந்தனர். இவளைத் திரிபுரை என்றும் , வாலை என்றும் , பத்து வயதானவள் என்றும், பதினாறு வயதாள் என்றும், கனியென்றும்,பச்சை நிறத்தாளென்றும் ,சக்கரத்தாளென்றும் , வாமியென்றும், தேவியென்றும், மாயையென்றும், புவனையென்றும், அன்னையென்றும், ஆவுடையாளென்றும், தாரையென்றும் , அமுதக் கலசமென்றும், தாயென்றும் உண்ணாமுலையென்றும் ,கோவுடையாளென்றும் , அண்ட பேரண்டங்களைக் கட்டிக் காக்கின்ற அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி என்றும் அழைப்பார்கள். வைத்தீஸ்வரனான ஈஸ்வரனே இவள் தயவில்தான் மண்ணையே மருந்தாகக் கொண்டு வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியம் புரிந்து வருகிறான். 
இவளை அறிய ஏழு பிறப்பில் புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்கிறார்கள்  நம் சித்தர்கள். இவளால் தர இயலாதது எதுவும் இல்லை. இவளைப் பூசை செய்யும் செய்யும் முறையைப் பற்றி சட்டை முனி கூறுவதைப் பாருங்கள்.
சட்டை முனி ஞானம் -4  பூசை செய்யும் முறை
காணப்பா பூசை செய்யும் முறையைக் கேளாய்
 கைம் முறையாய்ச் சுவடி வைத்துப் பூசை செய்வார்
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து
புகழாக பூசை செய்வார் பெண்ணை வைத்தும்
நாளப்பா சக்கரத்தை பூசை செய்வார்
நம்முடைய பூசையென்ன மேருப் போலே
ஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தே
உத்தமனே பூசை செய்வார் சித்தர்தானே! பாடல் (1)
தானென்ற மேருவைத்தான் பூசை செய்வார்
சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேனென்ற மேருவுக்கு தீட்சை வேண்டும்
சிறுபிள்ளையாமொருவன் தீண்டப் போகா
வானென்ற மேருவைத்தான் பூசை செய்தோர்
வாய்திறந்தே உபதேசம் சொன்னாராகில்
கோனென்ற வாத சித்தி கவன சித்தி
கொள்ளையிட்டான் அவன் சீடன் கூறினானே! பாடல் (2)
கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தைக் கேளாய்
குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய்
மாறியதோர் திரிபுரையெட் டெழுத்தைக் கேளாய்
மைந்தனே இவளை நீ பூசைபண்ண
தேறியதோர் புவனைதனின் எழுத்தைக் கேளாய்
திறமாக புவனையை நீ பூசை பண்ணு
ஆறியதோர் யாமளை யாறெழுத்தைக் கேளாய்
அவளுடைய பதம் போற்றி பூசை பண்ணே! பாடல் (3)
பண்ணிய பின் யாமளையை ஐந்தெழுத்தைக்  கேளாய்
பண்பாக தீட்சையைந்தும் முடிந்தபின்பு
வன்னியதோர் வாசியென்ற யோகத்துக்கு
மைந்தனே வைத்துப் பிராயாமந் தீரும்
கன்னியதோர் இத்தனையு மறிந்திருந்தாற்
காயசித்தி விக்ககினங்கள் இல்லை யில்லை
உன்னியதோர் உலகமென்ன சித்தரென்ன
உத்தமனே விட்டகுறை எடுக்கும் காணே! பாடல் (4)
சிலர் தீபம் வைத்து பூசை செய்வார்கள் . சிலர் இந்த வாலைப் பெண்ணை வைத்து பூசை செய்வார்கள் . சிலர் சக்கரத்தை வைத்து பூசை செய்வார்கள் .சிலர் மகா மேருவை வைத்து பூசை செய்வார்கள் .சித்தர்கள் நாற்பத்து முக்கோண சக்கரத்தை வைத்து பூசை செய்வார்கள் சித்தர்கள் .  மேருவைப் பூசிக்கின்றவர்கள் சாபமிட்டால் அண்டரண்டமெல்லாம் தீயாய்ப் பிடித்து வேகும். இதற்கு தீட்சை அவசியம் வேண்டும் . சிறுபிள்ளைபோல எண்ணி யாரும் இதைத் தொடல் ஆகாது.வான் தத்துவமாகிய இந்த மேரு பூஜை செய்கிறவர்கள் வாயைத் திறந்து யாருக்காகிலும் உபதேசம் ( இரு தேசங்களைப் பற்றிய ரகசியங்களை) சொல்ல முற்படுவரானால் , அவர்களுக்கு ஞான , யோக, வாத ரகசியங்கள் எல்லாம் வசப்படும்.
வாலையின் மூன்றெழுத்தான அகார , உகார , மகாரத்தின் குறி எது என்றுணர்ந்து பூசை செய்வாய்.திரிபுரையின் எட்டெழுத்தை (தமிழில் எட்டுக்கு அ என்பதே குறி) புரிந்து பூசை செய்வாய்.எட்டும் இரண்டுமாகிய ( இரண்டுக்கு தமிழில் உ என்பதே குறி ) இதை உணர்ந்தால் வாலைத்தாயின் இருப்பிடம் தெரியும் .அவள் அருள் உனக்குக் கிடைக்கும். யாமளையாகிய அவளின் ஆறெழுத்தையும் நீ உணர்ந்து பூசை செய்வாய்.
ஐந்தெழுத்தாகிய பஞ்ச பூதங்களின் உறைவிடத்தைக் காண்பாய் . இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை அறிந்த பின், வாசியை உணர்ந்து கொள்.இதில் வகாரமான காற்றையும் , சிகாரமான நெருப்பையும் உணர்ந்து ( இதையே நாயோட்டும் மந்திரம் நமனை வெல்லும் என்கிறார் திருமூலர். நாயை எப்படி ஓட்டுகிறோம் , சி என்றல்லவா?இந்த சிகாரமான நெருப்பு யமனை வெல்லும். ) வகாரமான காற்றையும் சிகாரமான நெருப்பையும் சரியாக வைத்துக் கொள்ளாமல் இறந்துவிட்டான் என்பதால்தான் , இறந்து போனவனின் எலும்பில் பாலூற்றும் போது காசி ,காசி என்று ஊற்றுகிறார்கள். அவன் இவற்றை சரியாக பராமரிக்காமல் இறந்து போனான் ,உயிரோடிக்கும் நீயாவது இறக்காமல் இருந்து கொள் என்றுணர்த்தவே சடங்குகள் ஏற்படுத்தப்பட்டன . இறந்தவனை கொண்டு போகும் போது  உறுமி மேளம் அடிப்பார்கள் , அது உண்டுண்டு என்றடிக்கப்படும் . அதாவது இந்த மரணம் உனக்கும் உண்டு , உனக்கும் உண்டு என்று உணர்த்தவே ஆகும் .
உத்தமனே முந்தைய பிறவிகளில் இந்த வாலையைத் தியானித்திருந்து அரைகுறையாக விட்டிருந்தால் , அந்த விட்ட குறை , அந்தப் புண்ணியம் இந்தப் பிறவியில் தொடர்ந்து வந்து ஞானத்தைத் தந்தே தீரும் . இதை அந்த வாலைத் தாய் மரணமில்லாப் பெருவாழ்வை  நிறைவேற்றித் தருவாள்.
பட்டினத்தார் ஞானம் -100
நெஞ்சமுடனே தாம்புலம்பி நீலநிறத் தாளீன்ற
குஞ்சரத்தை யாதரித்து கும்பிட்டால்- தஞ்சமுடன்
காமமுதல் மும்மலத்தின் கட்டறுத்து ஞானமுடன்
பூமிதனில் வாழ்வரெ ப்போதும்  பாடல் (1)
ஆவுடையாளொடிருந்தேன் அருளானந்தம் பெறவே
கோவுடையாள் நின்றதினம் கூடிய – பூவுடையாள்
கட்டழகியைத்தான் கடந்து பெருவெளியில்
இட்டமுடன் நெஞ்சே இரு (பாடல் 4)
நெஞ்சமுடன் தாம்புலம்பி , நீலநிறத்தாள் ஈன்ற குஞ்சான அகார , உகாரத்தைக் கும்பிட்டால் , நம்மைத் தஞ்சமடைந்திருக்கின்ற காமம் முதலான மும்மலத்தின் கட்டறுந்து ஞானத்துடன் பூமியில் வாழ்ந்திடுவார்கள் எப்போதும். பட்டினத்தார் ஆவுடையாளோடிருந்தேனென்றும் (வாலைத் தாயுடன் இருந்தேன் ) , அவளுடைய அருளானந்தம் பெற்று , பூவுடையாள் கட்டழகியைத்தான் கடந்து , வேதாந்தப் பெருவெளிக்குள்   இட்டமுடன் நெஞ்சே இரு என நெஞ்சுக்கு கட்டளை இடுகிறார்.
இந்த வாமியான வாலையைக் கனவினில்  கண்ட காட்சியையும் , அவளிடம் கேட்ட வரம் பற்றி பாரதியார் தனது பாடலில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.                        
மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்.வயது பதினாறிருக்கும் இளவயது மங்கை! பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளிமுகமும், புன்னகையின் புதுநிலவும்  போற்ற வரும் தோற்றம்! மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்! துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து, துங்க மணி மின்போலும் வடிவத்தாள் வந்து,தூங்காதே எழுந்தென்னை பாரென்று சொன்னாள்! அங்கதனில் கண்விழித்தேன் !அடடா ஓ அடடா!
அழகென்னும் தெய்வம் அதுவென்றேயறிந்தேன்! காலத்தின் விதி மதியைக் கடந்திடுமோவென்றேன்? காலமே மதியினுக்கோர் கருவியாம் என்றாள்! ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ வென்றேன் ? நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம் என்றாள்! மங்கியதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்! – பாரதியார் –
முதலில் அந்த வாலாம்பிகையின் காட்சியை வருணித்த பாரதியார் , வாலாம்பிகையிடம் காலத்தின் விதி தமது மதியைக் கடந்திடுமோவென்று கேட்கிறார்.அதற்கு வாலாம்பிகை காலமே மதியினுக்கு ஓர் கருவி என்று கூறுகிறாள். இந்த உலகத்தில் விரும்பியது கிடைக்குமா என்று வினவுகிறார் பாரதி , அதற்கு வாலைப் பெண்ணாத்தாள் , நாலில் ஒன்றிரண்டு கிடைக்கலாம் என்றாள்.

ஞாயிறு, 29 நவம்பர், 2020

நீடித்த ஆயுள் தரும் கார்த்திகை தீப வழிபாடு

றைவனை ஜோதி வடிவாக வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு ஆகும்.
‘‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி’’ என மாணிக்கவாசகர் கூறுவார்.
நினைத்தால் முக்தி தரும் திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி வடிவாக தோன்றினார். இதை நினைவு கூரும் விதத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின் போது, திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகின்றது.
தீப வழிபாடு என்பது நீண்ட நெடிய காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. வட நாட்டில் தீப வழிபாடு என்பது ‘தீபாவளி’ என்றும், தெற்கே ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது. தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் மயிலாப்பூரில் பாடிய திருப்பதிகத்தில் பூம்பாவை என்ற பெண்ணுக்கு உயிர் கொடுப்பதற்காக பாடிய போது... ‘‘கார்த்திகை விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’’ என்று பாடியுள்ளார்.
இதன் மூலம் கி.பி 7, 8–ம் நூற்றாண்டில் இருந்தே, கார்த்திகை வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுவது தெரிகிறது. தீபத்தின் நடுவில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் முப்பெருந்தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.
அடிமுடி காணாத வரலாறு
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவுக்கும், காத்தல் கடவுளாகிய திருமாலுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாய் தோன்றினார். ‘இருவரில் யார் எனது அடியையோ (பாதம்), முடியையோ காண்கிறீர்களோ அவர்களே பெரியவர்’ எனக் கூறினார். 
திருமால், வராக உருவம் கொண்டு திருவடிகளை காணச் சென்றார். பிரம்மா அன்னப்பறவை உருக்கொண்டு திருமுடியை காண பறந்து சென்றார். ஆனால் இருவரும் அடியையோ, முடியையோ காணமுடியாமல், அகங்காரங்கள் அழிய பெற்றவர்களாக சிவ பரம்பொருளே உலகின் முழு முதற் பரம்பொருள் என்பதை உணர்ந்துகொண்டனர். தங்களது பிழையை பொறுத்து அருளுமாறு சிவ பெருமானை பிரார்த்தனை செய்தனர். 
உடனே சிவன், சிவலிங்க திரு உருவத்தோடு ஜோதிப்பிழம்பில் இருந்து வெளிப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா இருவரும் சிவபெருமானை வழிபட்டு உண்மை ஞானம் பெற்றனர். ஜோதிப்பிழம்பு அருணாசலமானது. அதில் இருந்து தோன்றிய சிவலிங்கம் அருணாசலேசுவரர் ஆனார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில் தான், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மாதந்தோறும் கார்த்திகை விரத நாள் வருகிறது. கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தினத்தை ‘திருக் கார்த்திகை’ என்பர். 
விரதம் இருப்பது எப்படி?
கார்த்திகை முதல் நாளன்று பரணி நட்சத்திர நாளில், பகலில் ஒருவேளை மட்டும் உணவருந்த வேண்டும். கார்த்திகைஅன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். மறுநாள் அதிகாலையில் காலைக்கடன் களை முடித்து நீராடி பாலினை அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். உமாதேவிக்கு சிவபெருமான் தனது இடப்பாகத்தினை கொடுத்து ஆட்கொண்டதும் இந்நாளில்தான். அன்று ‘‘ஓம் நமச்சிவாய வாழ்க’’ என்று சொல்வது தீராத வினைகளை தீர்த்து வைக்கும். நீங்காத செல்வத்தையும் வழங்கும். நீடித்த ஆயுளை தரும். 
கார்த்திகை விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்தால் சுகபோக வாழ்வு வாழலாம். இந்த விரதத்தை 12 ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். 
வீடுகளில் மாலை பவுர்ணமி நிலவு தோன்றும் நேரத்தில் வீட்டு வாசலில் வாழைக்கன்று நட்டு வைத்து அதன்மேல் தீபம் ஏற்றியும், வீடுகளுக்குள் வெளிச்சம் தரும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றியும் அழகுபடுத்திட வேண்டும். இதைக் கார்த்திகை விளக்கீடு என்றும், சர்வலாய தீபம் என்றும் அழைக்கின்றோம். 
தீபம் இருளை நீக்கிப் பொருளை விளக்கம் பெறச் செய்கிறது. தீபம் பிரகாசமாக இருக்குமிடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 12  ஆண்டுகள் விரதமிருந்து முருகனை பிரார்த்தனை செய்வதால் வேண்டும் வரங்களைப் பெறலாம். கார்த்திகை தீபத்தன்று முருகன் ஆலயங்களில் தீப விழா இடம் பெறுவது குமாராலய தீபம் என்று அழைப்பர். 
கார்த்திகை மாதம் முழுவதும்  மாலை வீட்டு வாசலில் விளக்கேற்றி வைக்கின்ற பழக்கம் உண்டு. கார்த்திகையன்று முருகன் ஆலயங்களில் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வர். ஆலய முன்புறத்தில் காய்ந்த ஓலை, மட்டை, இலைகளால் பனைவடிவில் கட்டப்பட்ட சொக்கப்பனை ஏற்றி ஜோதி வடிவாகக் காட்சியளிக்க செய்வர்.
சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து தரிசனம் செய்வர்.
பூஜைக்கேற்ற விளக்கு
குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு, அதற்கு அடுத்து சிறப்புடையது. எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக் கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.
நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து அதன் மூலம் தீபம் ஏற்றி, எவரொருவர் ஒரு மண்டலம் (45 அல்லது 48 நாட்கள்) பூஜை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் கிடைக்கும்.
தீபம் ஏற்றும் முறை
முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2–வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3–வது மேற்கு நோக்கி, இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்ற கூடாது. குளிர்விக்கும் போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2–வது வடக்கே உள்ள திரியையும், 3–வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி  எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?
திருக்கார்த்திகை தினத்தன்று சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கோவிலுக்கு அருகில்  பனை மரத்தை நாட்டி அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்து கட்டுகின்றனர். மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சில கோவில்களில் பனை ஓலைகளை ஒரு சிறு கூண்டைப்போல கட்டி அதை எரிக்கின்றனர். ஆணவம் எரிகிறது. கூடவே அஞ்ஞானமும் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவாக காட்சி தருகிறான்.
சிவபெருமான் திரிபுரங்களை எரித்த நாள் திருக்கார்த்திகை நாளாகும். சிவன் எரித்த பாவனையை வெளிப்படுத்துவதற்காக சொக்கப்பனை கொளுத்து கின்றனர். மேலும் அடி, முடி தேடிய விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், ஆதி, அந்தம் இல்லாத அருட்பெரும் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சி கொடுத்தார். நெருப்புக்கு முதலும், முடிவும் கிடையாது. சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்ததை நினைவு கூரும் விதத்திலும் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.
விளக்கேற்ற நல்ல நேரம்
கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும். வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.
அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல்திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும், மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

சனி, 28 நவம்பர், 2020

கார்த்திகை தீபம் ஏற்றும் போது......05.12..2014

"துன்பம் அகற்றும் மலை தொல்வினையை நீக்குமலை,
அன்பர்தமை வாவென்று அழைக்கும்மலை -தன்பகத்தைக்
காட்டுமலை தன்னைக் கருத்தில் உறும்
அன்பர் இடர் வாட்டுமலை அண்ணாமலை.''

பொருள்: நம் துன்பங்களைப் போக்குவதும், முற்பிறவியில் செய்த தீவினைகளைக்  களைவதும், அன்பர்களை தன்னிடத்தே வா என்று அழைப்பதும். தன்னை நாடி வந்தவர்களுக்கு திருவடிகளைக் காட்டுவதும், தன்னை எப்போதும் மனதில் இருத்தி தியானிப்பவர்களின் இடர்களை வாட்டுவதுமாகிய மலை திருவண்ணாமலையே.
விளக்கம்: இந்தப் பாடலை தீபமேற்றும் போது பாடினால் பிறப்பற்ற நிலை ஏற்படும் என்பது நம்பிக்கை.

சீடனின் உரிமை... குருவே சரணம்

எல்லாம் வல்ல இறை ஒன்றே எப்போதும் நீடித்து  நிலைத்து இருக்கிறது. அந்த சுத்தவெளி என்ற நிலைக்கு அனுபவிக்கவென்று, அறிவதற்கு என்று எதுவும் இல்லாது, பூரணமாக நிறைவிலே எப்போதும் இருக்கிறது.
மனிதன் என்பவன் தான் இறை என்ற இயல்பிலே இருந்து நிறைவினை உணராத நிலை தனக்குத் தெரிவதாகக் கருதி, மீண்டும் இறையை நோக்கிச் செல்லும் போது, அந்த சுத்த வெளியில் மனதை விரித்தும், ஒடுங்கியும் நின்று பார்க்கும் போது, அங்கே அறிவது (அறிவு + அது) என்று த்வைத மனப் பான்மையிலே இறை உணர்வினை உணர்கிறான். அறிவு என்பது தனது என்று மூலம் என்றும், அது என்பதை இறை என்றும் நினைக்கிறான். அறிவது என்பதிலே அறியப்படுவது என்ற சாட்சி நிலையும் அடங்கியே இருக்கிறது. இந்த சாட்சி அறிவும் இறைனிலை தான் என்றாலும், இறையே தான் சாட்சியாக இருந்து அந்த அனுபவத்தை பதிவு செய்கிறது...
முடிவினில், அறிவது என்பதைத் தாண்டி ஒடுங்கும் போது, அறிவது என்று இரண்டு நிலைகள் ஒடுக்கப்படும் போது, அங்கே முனைப்பு ஒடுக்கப்படுவதைக் காணும் போது, சத்தியமான இறைதத்துவம் அவனுள் ஜொலிக்கிறது.

இறையை உடல் என்ற வடிவத்திலே கண்ட மகான்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிலே ராமலிங்க வள்ளலார், ராமகிருஷ்ணர் போன்ற மகான்கள் எல்லாம் மன ஓர்மையினால் இறையோடு பேசினர்..
இருப்பினும் இந்த அனுபவம் எல்லாம் மகான்கள் சாதனையாக சிலரால் போற்றப்பட்டாலும், அதே நிலையிலே இருந்து விடவில்லை. மேற்கொண்டு இறையோடு சுத்தவெளியாகக் கரைந்து நின்றனர். இம்மகான்களின் எழுத்துக்கள் சுத்தவெளியினையே தான் மூலக்கருத்தாக இருக்கிறது. விவேகானந்தர் முதன் முறையாக ராமகிருஷ்ணரைப் பார்த்த போது, என்ன இது இவர் மன நிலை சரியில்லாதவரா? என்று நினைத்தாராம்.

சீடனைப் பார்த்தவுடன், ராமகிருஷ்ணர் அப்படியே அவரை அணைத்து, உனக்காக எவ்வளவு நாளாய் காத்துக் கொண்டிருந்தேன் தெரியுமா? எதற்கு இவ்வளவு தாமதமாக வந்திருக்கிறாய்? என்றெல்லாம் கண்களிலே ஆனந்தக் கண்ணீருடனும், சந்தோசத்திலே துடித்தாராம் குரு. அதெல்லாம், உடல் என்ற எல்லைக்குள் இருந்த சீடனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஒரு முறை சித்திகள் பெறுவது பற்றி குரு கேட்ட போது, விவேகானந்தர் குருவிடம் கேட்டாராம்... இந்த சித்திகளால், எனக்கு முக்தி பெறுவதற்கு உதவுமா? என்று கேட்டபோது, ராமகிருஷ்ணர் முக்திக்கு இந்த சித்திகள் உதவாது என்றவுடன்... அப்படி என்றால் எனக்கு அந்த சித்திகள் வேண்டாம் என்றாராம் விவேகானந்தர்... குருவின் கண்களிலே ஆனந்தக்கண்ணீருடன் பெருமையாகச்சொன்னாராம்... பாருங்கள்.. எனது நரேந்திரனை என்று ...
நாம் நமது குருவிற்கு அப்பேர்ப்பட்ட சீடனாக இருப்பது தான் குருவிற்கு உயர் புகழினைத் தர முடியும்.. குருவிற்கு உயர் புகழ் தருவது சீடனின் உரிமை. கடமை. நன்றிக் கடன். அதுவே குரு காணிக்கை.

செவ்வாய், 24 நவம்பர், 2020

தீட்சை என்றால் என்ன ? சிறு விளக்கத்துடன் !


`தீ’ என்றால் மலம். `ஷை’ என்றால் ஒழித்தல்.
மலமாகிய அழுக்கை ஒழித்தலே தீட்சை.
மனிதன் இறைநிலையை அடைவதற்கு மந்திரக்கலை, தந்திரக்கலை, உபதேசக்கலை ஆகிய மூன்று படிநிலைகள் உள்ளன.
மந்திரக்கலை, தந்திரக்கலை இரண்டும் சரியை, கிரியை, யோக நெறிமுறைகளில் உள்ள குருமார்கள் போதிப்பதாகும்.
நான்கு எழுத்து, ஐந்து எழுத்து, ஆறு எழுத்து, எட்டு எழுத்து உள்ளிட்ட பல மந்திரங்களை உச்சரித்து செய்யும் பயிற்சிகள் மந்திரக்கலை ஆகும். இதை போதிப்பவர்கள் மாந்திரீகர்கள் ஆவர்.
முத்திரைகளையும், யந்திரங்களையும் செய்யும் பயிற்சிகள் தந்திரக்கலை ஆகும். இதைப் போதிப்பவர்கள் தாந்திரீகர்கள் ஆவர்.
இந்த இரண்டு கலைகளைக் காட்டிலும் உன்னதமான, ஒப்புயர்வற்ற ஞானநிலைக்கான கலையே உபதேசக்கலையாகும். இதை போதிக்கும் குருமார்கள் ஞானகுரு ஆவார்கள். இந்த ஞானகுருக்களே தன் சீடர்களுக்கு உண்மையான தீட்சைகளை வழங்குகிறார்கள்.
தீட்சைகள் ஆறு வகைப்படும். அவையாவன :
பரிச தீட்சை, நயன தீட்சை, பாவனா தீட்சை, வாக்கு தீட்சை, யோக தீட்சை, நூல் தீட்சை
பரிச தீட்சை :
ஒரு பறவை முட்டையிட்டு, அதன் மேல் உட்கார்ந்து, அதன் உடல் வெப்பத்தினால் முட்டைபொரிந்து குஞ்சு வெளியாவதைப் போன்றது, பரிச தீட்சையாகும். ஞானகுரு தனது திருக்கரத்தினால் சீடருடைய நெற்றியில் தொட்டு, மூலதாரத்தில் சுருண்டு உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி ஆற்றலை மேல் நிலையில்– புருவ மத்தியிலும், தலை உச்சியிலும் – நிலை நிறுத்துவதே பரிச தீட்சையாகும்.
நயன தீட்சை :
ஒரு மீன் முட்டையிட்டு அதனைத் தன் கண்களால் பார்த்து பார்வையின் வெப்பத்தினால் முட்டை பொரிந்து, மீன் குஞ்சு வெளியாவதைப் போன்றது நயன தீட்சை. ஞானகுரு தமது திருக்கண்ணால் சீடரின் கண்களைப் பார்த்து புறத்தில் செல்லக்கூடிய சீடரின் மனத்தை, அகத்தில் பார்க்க அருளுவதே நயன தீட்சையாகும்.
பாவனா தீட்சை :
ஒரு ஆமை கடற்கரையில் முட்டைகள் இட்டு, பின்பு கடலுக்குள் சென்று முட்டைகள் பொரிந்து குஞ்சுகளாக மாறவேண்டும் என்று இடையறாது நினைத்துக் கொண்டிப்பதைப் போன்றது பாவனா தீட்சை ஆகும். ஞானகுரு தன்னைப் போன்றே தன் சீடர்களையும் உடல் உணர்வு நிலையை விட்டு, உயிர் உணர்வில் நிலைக்கச் செய்து, சகஜத்திலேயே வெளிக்குள் வெளி கடந்து சும்மா இருக்கும் சுகமான, எண்ணமற்ற மோனநிலையாம் ஆனந்தப் பெருவெளியில் நிலைக்க வைப்பதே பாவனா தீட்சை.
யோக தீட்சை :
ஞானகுரு தன் அருளால் அகார, உகார, மகார, சிகார, வகார நிலைகளை உணர்த்துவதே யோக தீட்சையாகும். தலை உச்சியாகிய சிகாரத்திலிருந்து 12 அங்குல உயரத்திலுள்ள அண்டத்திலுள்ள பிண்டமான பெருவெளியில் நிலைத்து வெளிக்குள் வெளிகடந்து, சும்மா இருப்பதுவே வகார திருநிலை. இதனை ஞானகுரு, அக அனுபவமாக உணர்த்துவதே யோக தீட்சை ஆகும்.
வாக்கு தீட்சை :
ஞானகுரு, ஞானிகள் அருளிய திருமறைக் கருத்துகளையும், தான் தனக்குள் மெய்ஞான அனுபவமாக உணர்ந்ததையும், இறைத்தன்மையில் நிலைத்து நின்று, உள்ளன்போடு கேட்கும் சீடர்களுக்குச் சொல்லி, அவர்தம் உணர்வில், உயிரில், ஆன்மாவில் கலந்து, ஞான அதிர்வுகளை உருவாக்கி, என்றென்றைக்கும் வழிநடத்துவது வாக்கு தீட்சையாகும்.
நூல் தீட்சை :
சரியை, கிரியை, யோக மார்க்க நூல்களை நீக்கி, ஞானத்திற்காக மட்டும் மெய் உணர்ந்த அருள் ஞானிகள் அருளிய திருமறைகளையும், அவர்கள் அனுபவித்த பேரானந்த அனுபவங்களையும், அதன் வழி நடக்கும் போது ஏற்படும் நிறைவான அனுபவக் கருத்துக்களையும் நூலாக்கி சீடர்களுக்கு வழிகாட்டும் நூலாக அருள்வது நூல் தீட்சையாகும்.
உண்மையில், யோக தீட்சை என்பது மூச்சுப்பயிற்சியோ, வாசியோகம் என்றால் என்னவென்று அறியாமலேயே மூச்சை உள்ளுக்குள்ளே ஊதிச்செய்யும் பயிற்சிகளோ அல்ல. எண்ணமற்று, சகஜத்திலேயே, மனதில் மோனநிலையைப் பெற்று சிவவெளியில் லயமாகி இருப்பதே வாசி யோகம் என்பதைப் புரிந்து கொள்க.
எடுத்த இப்பிறப்பில் தானே மெய்யான ஞானகுருவினைத் தேடிக் கண்டடைந்து, பணிந்து, அர்ப்பணித்து, ஞானதீட்சையைப் பெற்று, மன அழுக்குகளையும், உயிர் மற்றும் ஆன்ம அழுக்குகளையும் நீக்கப் பெற்று, மாசற்று தன்னை உணர்ந்து, தனக்குள் இறை நிலையை உணர்ந்து, இறைத்தன்மையில் இரண்டறக் கலந்து, அதில் கரைந்து என்றும் நித்தியராக வாழ்தலே சிறப்புடையது!

ஞாயிறு, 22 நவம்பர், 2020

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே..


என்னுள்ளே உள்ள குரு தான் இதை செய்தார் என்று எனக்குத் தெரியும்... ஆனால் எங்கும் என்னுள்ளே உள்ள குரு என்ற புதையலை வெளிக் காண்பிக்கவே இல்லை.... குரு என்ற உதவி எப்படி வேலை செய்தது என்பதை அப்படியே சொன்னேன்...

குரு என்ற தொடர்பு என்பதே எனக்குப்  போதும், எவருக்கும் போதும் என்ற முடிவு எனக்குள் எட்டி விட்டது... அதன் பிறகு எங்கு எந்தப்  பெரிய பிரச்சினை வந்தாலும், முற்றிலும் மாறுபட்ட ஒரு அணுகு முறையை என்னுள்ளே இருந்து வெளிக்காட்டினார் என் இனிய ரமணர்.. அதனால் என்னால் சாதிக்க முடிந்தது...
குருவானவர் அணுகுகிற சீடனின் மன அலைக்காக தனது இருப்பை வெளிக்காட்டுகிறார் அதுவும் சீடனின் மூலம்.
கண் தெரியாத சீடன் பிரபஞ்சத்தினை பற்றி சொல்வது போல இது...

சீடனின் மன அலைக்கு திருப்பியக்கமாய் குருவானவர் எப்போதும் இயங்கிக்கொண்டிருப்பார்.. இது சத்தியம்...

"ஓம் நமோ பகவதே ஸ்ரீ அருணாச்சல ரமணாய "

வியாழன், 19 நவம்பர், 2020

மெய் ஞானம் எனும் விஞ்ஞானம்

மௌனமே வடிவான ஆதிப் பரம்பொருளின் மௌனம் கலைந்த போது விளைந்த சலனத்தில் முதன் முதலில் எழுந்து விரிந்த ஒலி அலையே பிரணவம், என்பது வேதம் உணர்ந்த ஞானிகள் வாக்கு. மௌனத்தின் அலைகளாகிய பிரணவம் விரிந்து எல்லாமாய் உருவானதாலோ என்னவோ, பிரணவம் குறித்த ஞானிகளின் தத்துவக் கருத்துகளும் விரிந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறாகிய ஒரு கருத்தை கண்ணுற்ற போது அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள மனம் விரும்ப, விருப்பம் கருத்தாய் விரிகிறது. மனம் புலன்களைக் கடந்து விரிவடையும் போதுதான் பரத்தில் ஒடுங்குகிறது. மௌனத்தில் அடங்குகிறது. ஞானத்தில் திளைக்கிறது. ஒடுங்கியது விரிகிறது, விரிந்தது ஒடுங்குகிறது. இது ஒரு சுழற்சி. எனவே சுழல்வது என்பது அணுவுக்கும், அணுவிலிருந்து விளைகின்ற அனைத்திற்கும் இயல்பாயிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆகவே நம் உடலில் உள்ள நாடிகள் சக்கரங்கள் எல்லாம் சுழல்கின்றன.
நாடிகள் மொத்தம் 72,000 எனச் சொல்லப்படுகிறது. அவற்றில் முக்கிய மையங்களாக விளங்கும் 1008 எடுத்துக் கொண்டார்கள். அந்த 1008 ல் முக்கியமானது சகஸ்ராதார நாடியாகும். இந்த சகஸ்ராதாரம் என்று குறிப்பிடப்படுவது சகஸராரச் சக்கரமே ஆகும்.
ஆதாரங்கள் அல்லது சக்கரங்கள் எண்ணிக்கை குறித்து பலதரப்பட்ட கருத்துக்களை நம் முன்னோர்கள் சொல்லியிருந்தாலும் ஏழு முக்கிய ஆதாரங்களே பெரும்பாலான யோக நூல்களில் முக்கியத்துவம் பெருகின்றன. எல்லா நாடிகளும் சக்கரங்களே என்றாலும், அவற்றின் இயக்க ஆற்றல், உருவம் இவற்றை முன்னிலைப் படுத்தி ஏழு சக்கரங்களும் தலைசிறந்த ஆதாரங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இப்போது இந்த 1008ல் தலைசிறந்து விளங்கும் சகஸராதார நாடியானது உச்சந்தலையில் ஒரு தாமரை மொட்டு தலைகீழாக தொங்குவது போல இருக்கும். அது ஞானம் அடையாதவரை தலைகீழாகவேதான் இருக்கும். ஞானிகளுக்கு அது நிமிர்ந்து விரிந்து இருக்கும். மற்ற நாடிகளும் சற்று சுருண்டு காணப்படும். அவற்றை நிமிர்த்தி விரியச் செய்தால் கடைசி நாடியும் விரியும்.
ஒவ்வொரு நாடிகளுக்குள்ளும் பிரணவம் ஒவ்வொரு அக்க்ஷரமாக விரிந்து ள்ளது. அந்த அக்ஷரங்களை ஞானத்தால் உணர்ந்த நம் முன்னோர்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்டு பெயர்களை உருவாக்கினார்கள். 1008 நாடிகளின் அக்ஷரங்களில் உருவானதே சகஸ்ரநாமம் எனப்படுகிறது. அந்த நாமங்களை உச்சரிப்பதன் மூலம் அந்தந்த நாடிகளில் அதிர்வை உருவாக்கி அவற்றின் அவற்றின் இதழ்களை விரியச் செய்வார்கள். அடுத்த படியாக அதிமுக்கியமான 108 நாடிகளின் அக்ஷ்ரங்களில் உருவானதே அஷ்டோத்ர நாமங்கள். 108ல் முக்கியமான 18 கேந்திரங்களை கண்டு அவற்றில் விபூதி தரிக்கச் சொல்கிறார்கள். இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்து 12 நாடிகளைக் கண்டு அவற்றில் நாமம் இடச் சொல்கிறார்கள். அந்த 12 ஐயும் சுருக்கி 8 ஆக்க விளைந்ததே அஷ்டாச்சரம். 
இறுதியாக ஆறு ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு அந்த அக்ஷ்ரங்களில் இருந்து வந்ததே ஷடாச்சரம். அடுத்தது பஞ்சாட்சரம். இவ்வாறாக மூலாதாரத்தில் உள்ள நாடியை சகஸராரத்துக்கு செலுத்தினால் உண்டாகும் வடிவத்தை நிமிர்த்துப் போட்டால் ஓம் என்ற தோற்றம் காணப்படும். இதுவே ஓங்காரத் தத்துவம். எனவே பிரணவ மந்திரத்தை இடைவிடாது எல்லா நேரத்திலும் மனதுக்குள் சத்தமாக உச்சரித்துப் பழகி வரும் போது இயல்பாகவே ஞானவாசல் திறக்கும்.
எட்டிரண்டு என்று சித்தர்கள் குறிப்பிடுவது அ,உ என்ற எழுத்துக்களையே. ஆங்கிலம் வருவதற்கு முன் நம் தமிழ் எழுத்துக்களே நடைமுறையில் இருந்தன.
1க்கு க, 2க்கு உ, 3க்கு ங, 4க்கு ச, 5க்கு ரு, 6க்கு கா,7க்கு எ, 8க்கு அ, 9க்கு சு, 10க்கு ய என்பதாகும் அவை. இதில் எட்டுக்கு அ வும், இரண்டுக்கு உ வும் இருப்பதையும், அவை மந்திர அட்சரங்களான அ, உ என்ற உயிர் எழுத்துகளை குறிக்கவே எட்டிரண்டு என்றுசித்தர்கள் பாடல்களில் மறைபொருளாகச் சொல்கின்றனர். இதனை அகாரம், உகாரம் எனப் பெயரிட்டு, இந்த அ, உ என்ற எழுத்துகளே பல தத்துவங்களுக்கும் அடிப்படையாக உள்ளதால் அதனை மறைவாக எட்டிரண்டு என்றனர். 
இந்த அகார உகார நாதத்தில் இருந்துதான் அனைத்தும் தோன்றி மறைகின்றது. ஓம் என்ற ஓங்காரத்தில் உள்ள அ,உ இல்லாத மொழிகளே இவ்வுலகில் இல்லை. பிறந்த குழந்தையின் முதல் மொழியே ஊ, ஆ (குவா) என்ற அழுகுரல்தான். உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால் பறவைகள், விலங்கினங்கள், உலக உயிரினங்கள் அனைத்தின் சப்தத்திலும் இந்த அகார உகார ஓசை அடங்கியிருப்பதை அறிய முடியும். கடலோசை, மழையோசை, இடியோசை, புயலோசை, தீயோசை மற்றும் இயற்கையின் எல்லா ஓசைகளும் இந்த சப்தத்தால் சக்தி பெற்று இயங்கி வருவதை உணரமுடியும்.
வேதம், இசை, மந்திரம், தந்திரம், யந்திரம் என அனைத்திலும் இந்த எட்டிரண்டு ரகசியமாய்ப் பொருந்தியுள்ளது. இந்த அகார உகாரமே நாத விந்தாகவும், சூரிய சந்திரனாகவும், சிவசக்தி யாகவும் இருப்பதை சித்தர்கள் உணர்ந்தனர். எனவே இவ்வட்சரத்தைப் பற்றியும் இயக்கும் முறைமையை அறிந்து கொள்ளவும் வலியுறுத்தி எட்டிரண்டு என்று மறைவாகவே சொல்கிறார்கள்.
அ, உ, ம் என்ற அட்சரங்களே ஓம் எனும் பிரணவ மந்திரத்தில் உள்ளது.அனைத்து மந்திரங்களுக்கும் மூலமானதும் இந்த ஓங்காரம் எனும் பிரணவமே. நாதமாகிய ஒலியும் விந்தாகிய ஒளியும் இணைவதையே 'நாத விந்து கலாதி நமோ நம' என்பார் அருணகிரி நாதர். பஞச இந்திரியங்களால் அறியப்படுவது அகாரம், மனதினால் அறியப்படுவது உகாரம், ஞானத்தினால் மட்டுமே அறியப்படுவது மகாரம். இனறைய விஞ்ஞானம் கண்ணுக்குத் தெரியாத அணுவில் கூட நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் எனும் மூவகைச் சக்திகள் உள்ளதாக கண்டறிந்துள்ளது குறிப்பிடத் தக்கது. 
இதையே குணங்களாக சத்துவம், தமோ, ராஜோ எனபர். அதாவது இதுதான் விஞ்ஞானத்தால் முறையே நேர்நிலை இயக்கம்,எதிர்நிலை இயக்கம்,நடுநிலை இயக்கம் என்று கூறப்படுகிறது. ஆராய்ந்து தோண்டிக் கொண்டே சென்றோம் என்றால் விஞ்ஞானத்தின் வேர்கள் மெய்ஞானத்தில் பரவி படர்ந்திருப்பதைக் காண முடியும்.. 
தொட்டுக்  காட்டாத வித்தை, சுட்டுப்போட்டாலும் வராது  என்பார்கள். நல்ல குருவின் துணை கொண்டு இவற்றைப் புரிந்து கொள்ள  உங்களுக்காக நானும் பிரார்த்தித்து கொள்கிறேன்!.

சனி, 31 அக்டோபர், 2020

சித்தன் போக்கு சிவன் போக்கு.!!!

சித்தர் தமிழே அகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே உகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தழிழே மகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே அ+உ+ம கரஞ் சேர்ந்த ஓங்காரம்

சித்தர்களின் பாடல்களில் நிறைய ரகசியங்கள் நிரம்பி இருக்கின்றன.
சுலபமான நிரந்தரமாக குணமாக்கும் மருத்துவ முறை.
பக்தி நெறி, அருவ வழிபாடு, தன்னையுணர்தல், இறைவனின் நிலை அறிதல், இறையோடு ஒன்றுதல் என பல நிலைகளை அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதை விட மேலான சாகாக் கல்வி என்னும் இறவா நெறி பற்றிக் கூறியுள்ளார்கள். இதுவே சித்தர்கள் பற்றித் தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் கொள்ளக் காரணமாக அமைகிறது.
அவர்கள் பாடல்களில் அவர்கள் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளின் நேரடிப் பொருளை கொண்டு நாம் அந்த பாடலுக்கான பொருளை தெரிந்து கொள்ள முயன்றால் அது கேலிக்குரியதாக மட்டுமே இருக்கும். அவர்களது பாடல்களை நமது வெற்று அறிவை கொண்டு புரிந்து கொள்ளுதல் இயலாது.
காரணம் இந்த சித்தர் கல்வி என்பது எவர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளை இறை நிலையினை அடைவதற்காக செலவிடத் தயாராக இருக்கிறாரோ அவர்களுக்கானது.

உலகியல் செய்து கொண்டு சித்தர்களின் பாடல்களை படித்துப் பொருள் கொள்வது என்பது மிகுந்த சிரமமான காரியம்.
இருப்பினும் சித்தர்களின் அருள் மற்றும் விட்ட குறை இருப்பவர்கள்
பாடலுக்கான உண்மை பொருள் உணரப் பெறுவார்கள்.
சித்தர்களை கேலி செய்பவர்கள் கேலிக்குரியவர்களாக மாறுவார்கள் இது உண்மை, சத்தியம்.

நாம் நினைப்பது போல சித்தர்கள் எண்ணிக்கை வெறும் பதினெட்டு மட்டுமல்ல. சித்தர்கள் கோடிக் கணக்கானவர்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே பாடல்கள் எழுதி வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள்.
மற்றவர்கள் இறை நிலை அடைந்து ஜீவ சிவ ஐக்கியம் ஆனவர்கள்.
இந்த கல்வியை கற்பதற்கு நாம் கற்ற உலகியல் ஏட்டு கல்வி பயன்படாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

நாம் பிறந்தது முதல் அதிகபட்சமாக நூறு ஆண்டுகள் வாழுகிறோம் என்றால் அதில் அதிகபட்சமாக அறுபது வயது வரை ஒரு நல்ல வேலை செய்வதற்கு குறைந்தது இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகள் ஏட்டுக் கல்வி பயில்கின்றோம். அதன் பிறகு அந்த கல்வியை வைத்து அதிகபட்சமாக முப்பது முதல் நாற்பது ஆண்டுகள் பயன் அடைகிறோம். (வேலை செய்து ஊதியம் பெறுவதன் மூலம்) பிறகு முதுமைக்குள் ஆட்பட்டு தள்ளாட்டம் எய்தி, மரணத்தை அடைகிறோம்.
இதற்கு இடையில் அந்த படிப்பைப் படித்தால் நாள் வேலை கிடைக்கும்,
இந்தப் படிப்பை படித்தால் சிறந்த வேலை கிடைக்கும் என்று ஓடி ஓடிப் படிக்கிறோம்.
இப்படி அதிகபட்சமாக நாற்பது ஆண்டுகள் பயன்படக்கூடிய கல்விக்கே நாம் இருபது ஆண்டுகள் செலவிட தயாராக இருக்கும்போது. என்றைக்கும் அழியாத நிலையினை தெரிவிக்கும் ஒரு கல்வியினை கற்பதற்கு நாம் எவ்வளவு நேரம் செலவிட தயாராக இருக்கிறோம் என்றால் பதில் பூஜ்யமாகத் தான் இருக்கும்.
ஒரு கதைப் புத்தகத்தைப் படிப்பது போல சித்தர்களின் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள நினைத்தால் அது முடியாத காரியமாகத்தான் இருக்கும்.
ஒருமையுள் தான் கற்ற கல்வி எழு பிறப்பும் தொடரும் என்று திருவள்ளுவர் சொன்னது இந்த கல்வியைத்தான்.
ஆகவே ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து நம்மை மேல் நிலைக்கு உயர்த்தும் ஒரு கல்வியை சுலபமாக கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது ஏமாற்றமாகவே முடியும்.
இந்தக் கல்வியைக் கற்பதற்குச் சீடனை தேர்ந்தெடுப்பதற்கு கூட சாதனா சாதுட்டயம் என்று சித்தர்கள் வைத்து இருந்தார்கள்.
பக்குவப் பட்டவர்களுக்கே அதை போதித்தார்கள்.
காரணம் இது தன்னை உணரும் கல்வி.
ஏம சித்தி எனப்படும் சாதாரண உலோகத்தை, மாற்று உயர்ந்த தங்கமாக மாற்றும் கலை.
சாகா கல்வி எனப்படும் கற்பப் பயிற்சி
தத்துவ நிக்கிரகம் எனப்படும் தத்துவங்கள் அனைத்தையும் விட்டு விலகும் நிலை.  கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்னும் ஜீவ சிவ ஐக்கியம்
என்னும் படிகள் உள்ளன.

சித்தர்களின் தத்துவங்களை நாம் சித்தாந்தம் என்றோ, வேதாந்தம் என்றோ, நாதாந்தம் என்றோ, போதாந்தம் என்றோ, கலாந்தம் என்றோ, யோகாந்தம் என்றோ தனி ஒரு அந்தத்திற்குள் அடக்கி விட முடியாது. காரணம் ஒவ்வொரு அந்தத்திலும் சொல்லப்பட்டவை ஒவ்வொரு அனுபவம் மட்டுமே. அதுவே முடிந்த முடிவாக இல்லை.
சித்தர்களின் வார்த்தைகளில் அனைத்து அந்தங்களும் இருக்கும் அதற்காக அவர்கள் ஒவ்வொன்றிலிருந்தும் கொஞ்சம் எடுத்துக் கொண்டார்கள் என்று பொருளல்ல. அவர்களின் உள் அனுபவத்திற்கு பொருந்துபவை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். அந்த அனுபவங்கள் ஒவ்வொரு அந்தத்திலும் சிறிது இருக்கலாம். ஆகவே அவர்கள் அனுபவமே வார்த்தைகளாக் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆகவே அவர்கள் வேதாந்திகளா ? அல்லது சித்தாந்திகளா ?
என்று நாம் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.
இது மிகப் பெரிய ஆய்வு!

வெள்ளி, 30 அக்டோபர், 2020

சுத்தமான மந்திர உச்சாடனத்தை மனம் லயித்துக் கேட்டால்


சுத்தமான மந்திர உச்சாடனத்தை மனம் லயித்துக் கேட்டால், ஒரு அசுவமேத யாகம் பண்ணினால் பெறக் கூடிய பலனை இந்த கலியுகத்திலே பெற்று விடலாம். ரொம்ப கஷ்டப்பட்டு சம்பாதிப்பதை மிகச் சுலபமாக பெற முடிவதால் 'கலி: சாது: ' என்கிறாா் வியாஸ மகாிஷி.
இவ்வளவு சுலபத்திலும் ஒரு நிபந்தன அழகாக ஒளிந்திருக்கிறது பாருங்கள்...என்ன நிபந்தனை அது? மனம் லயித்து என்பதுதான் அந்த நிபந்தனை.
ரொம்ப சுலபமாகச் சொல்லி விடலாம்'மனம் லயிக்க வேண்டும்' என்று...ஆனால் முடிகிறதா? அதற்கும் நமது சாஸ்திரமே வழி சொல்லித் தருகிறது. அந்த வழி தான் பிராணாயாமம்.
பிராணாயாமம் என்பது மூச்சை இழுத்து வெளிவிடும் பயிற்சி என்று எளிமையாய்ச் சொல்லலாம்.
ஆனால் இழுத்த மூச்சை உள்ளே தேக்கி வைக்கிற நேரம் இருக்கிறதே, அது முக்கியம். அந்த நேரம் அதிகமாகிக் கொண்டே வரவேண்டும். மனம் கட்டுப்படும்.
மல்லிக் கொடிபோல் ஆடிக் கொண்டிருக்கிற நமது மனம், பிராணாயாம தேக்கத்தினாலே ஆடாமல் நிற்கும். அப்படி மனதை நிறுத்திவிட்டால், 'கோல் தேடி ஓடும் கொழுந்து போல் மால் தேடி ஓடும் மனம்' என்கிறாா் பூதத்தாழ்வாா்.
ஆக, மல்லிக் கொடி மாதிாி ஆடுகிற மனத்தைப் பிராணாயாமத்திலே நிறுத்தி, எம்பெருமான் என்கிற அந்தக் கொம்பில், அவன் திருவடியிலே கொண்டு சுற்றிவிட்டு விட்டால் அது பற்றிக் கொண்டு படரும்.
எத்தனை நேரம் உட்காா்ந்து சுலோகத்தைச் சொன்னாலும் மனம் லயிக்கமாட்டேன் என்கிறதே; இரண்டு சுலோகம் சொல்வதற்குள் எங்கேயோ போய்விடுகிறதே....இப்படி எத்தனையோ குறைகள் நமக்கு உண்டு.
இதெல்லாம் நிவா்த்தியாக வேண்டுமானால் பிராணாயாம பலம் நமக்கு இருக்க வேண்டும். அந்த பலம் பெருகப் பெருக மந்திரத்தை உச்சாிப்பதற்கான பலமும் அதிகமாகும். மூச்சைத் தேக்குவது என்பது மந்திர உச்சாரணத்தில் ரொம்ப முக்கியம்.
நாம் மிகவும் அவசரமான ஒரு யுகத்திலே ஓடிக் கொண்டிருக்கிறோம். ' இதைப் பண்ணுவோமா? அதைச் செய்வோமா? ' என்று மனம் அலைந்து கொண்டேயிருக்கிறது. சந்தியா வந்தனம் என்பதாக ஒன்று செய்தாலும் அது ஐந்து நிமிடத்தில் முடிந்து போய்விடுகிறது!
உண்மையில் ஐந்து நிமிடங்களில் முடியக் கூடிய விஷயமா அது..? பிராணாயாமம் என்பது அந்தா்கதமாயிற்றே! அதெப்படி ஐந்து நிமிடங்களில் முடியும்?
நமது ஓட்டம்தான் அதை அப்படிக் குறிக்கி விட்டது. அதனால்தான் நமக்குப் பிராணாயாம பலம் இல்லாமல் இருக்கிறது.
பிராணாயாமத்தை ரொம்ப வலியுறுத்துகிறது சாஸ்திரம். ஸ்த்ரீகளும் பிராணாயாமம் செய்யலாம் என்கிறது. மந்திரம் கூறிச் செய்யாவிட்டாலும் நித்யமே பெண்கள் அதைப் பயிற்சியாகச் செய்யலாம். அதற்கு புராணத்தில் முன் உதாரணம் இருக்கிறது.
" யாா் -- எந்தப் பெண் -- பிராணாயாமம் செய்தாா் அந்தக் காலத்தில்? " என்று கேட்டால், கௌசல்யா தேவி -- சாக்ஷத் ராம மாதாவே பிராணாயாமம் செய்திருக்கிறாா். அந்த எம்பெருமானை நித்யம் தியானித்தாள்.
அவள் பெற்ற பலன் எப்போ்ப்பட்டது என்பதுதான் நமக்குத் தொியுமே!
(முக்கூா் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மாச் சாா்யாா் ஸ்வாமி)

மரண பயம் என்பது சிருஷ்டியின் நியதி....

“தேகம் நீங்கும் என எண்ணிலோ நெஞ்சம் துடித்து அயருவேன்” என்பார் தாயுமானவர்.

எல்லா உயிர்களுக்கும் தத்தம் இனத்தை பாதுகாத்துக் கொள்ள இயற்கை கொடுத்திருக்கும் ஒரு அடிப்படை உணர்வு அது.

மனிதப்பிறவிக்கு மட்டுமே அதை கடந்து செல்லும் சக்தி கொடுக்கப்பட்டிருப்பதால் மரணத்தை வெல்வது என்பது அவன் கடமையாகிறது. மரணத்தை வெல்வது என்பது பிறப்பு இறப்பு என்னும் சுழலில் இருந்து விடுபடுவதையே குறிக்கும்.

உடலுக்கு மரணம் உண்டு. ஆனால் நாம் உடலையும் கடந்த பேருணர்வை பற்றியிருக்க வேண்டியவர்கள் அன்றோ. அதைக் குறித்து சிந்திப்பதை விட்டு எண்பது கோடி ஆசைகளை வளர்த்துக்கொண்டு ஔவை சொல்வதை போல சாகும் வரை சஞ்சலத்திலே உழல்வதின் பயனென்ன !
உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்
எண்பது கோடி நினைந்து எண்ணுவன-கண் புதைந்த
மாந்தர் குடி வாழ்க்கை மண்ணின் கலம் போலச்
சாந்துணையும் சஞ்சலமேதான் (நல்வழி -28)
மனிதனுடைய தேவையோ நிதம் ஒரு ஆழாக்கு அன்னம், சுற்றிக்கொள்ள ஒரு துண்டு. அதை விட்டு மற்றவையெல்லாம் தேவையற்ற சுமையே  என மேலும் சொல்கிறார் ஔவையார்.

புதன், 14 அக்டோபர், 2020

மரமும் மனிதனும்


 
மரத்தின் கீழ்அமர்ந்து தவம்செய்து சக்திகளை பெற்று வாழ்ந்தார்கள் நமது முன்னோர்கள்.

ஏன் அப்படி செய்தார்கள் என்றால், மரத்துக்கு, இயற்கைக்கு ஏற்றாற் போல மாறும் தன்மையுண்டு.  தண்ணீர் கிடைக்கவில்லை என்றால், மரம் காற்றின் மூலமாகவும் சூரியனின் மூலமாகவும் சக்திகளை பெற்று, தண்ணீர் கிடைக்கும் வரை உயிருடன் இருக்கின்றது

அது எப்படிக்  கிடைக்கின்றது? எப்படி மனிதன் அந்த சக்திகளைப்  பெறுவது என்று தெரிந்து கொள்வதற்காக மரத்தின் கீழ் அமர்ந்து ஆராய்ச்சி செய்தார்கள். அந்த மரத்தின் அத்தனை இலைகளும் சுவாசிக்கின்றன என்பதைத்  தெரிந்து கொண்டார்கள்.  மரத்தின் எல்லா இலைகளும் சூரியனின் கதிரின் மூலமாகக் கிடைக்கும் சக்திகளைப் பெறுகிறது என்பதையும் கண்டுபிடித்தார்கள் 
இதை வைத்துத்தான் மரம் தண்ணீர் இல்லாத போதும் வாழ்கிறது என்று தீர்மானித்தார்கள் .

அப்படி என்றால் மரத்தைப் போலவே நாமும் உணவு இல்லாமல் வாழ முடியுமா என்று உடலை ஆராய்ச்சி செய்தார்கள். அப்பொழுது தான் நமது தலைமுடியாலும் சுவாசிக்க முடிகிறது என்பதைக் கண்டு உணர்ந்திருக்கிறார்கள். அதை அறிந்து கொண்ட சித்தர்கள், தலைமுடியை வளர்த்தார்கள்.  இதைத் தெரிந்து கொண்டபின்னர் இயற்கையோடு நாமும் ஒன்றி வாழ்ந்தால்,  நம்மால் இன்னும் பல சக்திகளை பெறமுடியும் என்று உறுதி செய்தார்கள். இதற்காகத்தான் தலைமுடியை வளர்த்தார்கள்.  

புதன், 23 செப்டம்பர், 2020

வள்ளலார் சுட்டிக்காட்டும் பாவச் செயல்கள்

உலக போகங்களையெல்லாம் பெரிதாகக் கருதி அதில் மூழ்கிக் கிடக்கும் மனிதன் எல்லாம் வல்ல இறையாற்றலிடம் வேண்டுவது கூட அவனுக்கு இம்மையிலும், மறுமையிலும் துன்பமளிக்கும் விஷயங்களாகத்தான் இருக்கும். வேண்டுவது என்பதே தன்னை அதை அடையத் தயார் படுத்திக் கொள்ளவே என்பதை மனிதன் இறுதி வரை அறிந்திட்டான் இல்லை. என்ன தேவை, எதை நாம் வேண்டுதலின் மூலமாக அடைய வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என்பதை வள்ளல் பெருமானின் தெய்வ மணி மாலையைப் படித்துணர்ந்தவர்கள் அறிவார்கள். நாம் வேண்டுவது எல்லாம் சிற்றின்பத்திற்கு உதவும் விஷயங்களையே ஆகும். ஆனால், வள்ளல் பெருமான் வேண்டுகின்ற அனைத்தும் நமக்கு பேரின்பம் அளித்து நம்மை மரணமில்லா பெரு வாழ்வு நிலையை அடையச் செய்யும் அற்புதமான விஷயங்களாகும்.
அதைப் போலவே நாம் இன்பம் அடையும் பொருட்டு எத்தனையோ பாவச் செயல்களை சுயநலத்தோடு செய்து வாழ்கிறோம். நாம் செய்வது பாவம் என்று உணராமலேயே நிறைய பாவங்களைச் செய்கிறோம். அப்படியே அதைப் பாவம் என்று யாராவது சுட்டிக் காட்டினாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு பல நியாயங்களைக் கற்பிக்கிறோம். நாலு பேருக்கு நன்மை செய்யுமானால் எந்தச் செயலும் பாவமில்லை என்று முட்டாள் தனமாகப் பேசுகிறோம். அது எத்தனை பேருக்கு நன்மை செய்வதாக இருந்தாலும், பாவச் செயல் என்பது பாவமே அல்லாது புண்ணியமாகாது. பட்டினத்தார் சொல்வது போல சாஸ்வதம் என்று நீ நினைக்கும் எதுவும் கூட வராது. ஆனால், நீ செய்யும் பாவ புண்ணியங்கள் கூட வரும் என்கிறார். அதில் கூட ஒரு நுட்பம் உள்ளது. அதாவது பாவம் மட்டுமல்ல, புண்ணியமும் பல பிறவிகளைத் தரக் கூடியதாகும் என்பதுவே. எனவே பற்றற்ற, மனதின் சம்ஸ்காரங்கள் அற்ற நிலை மட்டுமே, அதாவது பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு வாழ்வது மட்டுமே மேன்மை தரக் கூடியதாகும். எதெல்லாம் பாவம் என்று வள்ளல் பெருமான் மனுமுறை கண்ட வாசகத்தில் குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம்.
1. நல்லோர் மனதை நடுங்கச் செய்வது.
2. வலிய வழக்கிட்டு மானங் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரை தடுத்து நிற்பது.
4. கலந்த சினேகிதரைக் கலகஞ் செய்வது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்வது.
6. குடிவரி உயர்த்திக் கொள்ளை கொள்வது.
7. ஏழைகள் வயிறு எரியச் செய்வது.
8. தர்மம் பாராது தண்டஞ் செய்வது.
9. மண்ணோரம் பேசி வாழ்வழிப்பது.(தன் நிலத்திற்கு அருகில் உள்ள பிறர் நிலத்தை அபகரித்தல்)
10. உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்வது.
11. களவு செய்வோர்க்கு உளவு சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசஞ் செய்வது.
14. வரவுபோக் கொழிய வழியடைப்பது.
15. வேலையிட்டுக் கூலி குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராதிருப்பது.
17. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லி குடும்பங் கலைப்பது.
19. நட்டாற்றில் கையை நழுவ விடுவது.
20. கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பழிந்தவளைக் கலந்திருப்பது.(கற்பு என்பதை மனம் சார்ந்த விஷயம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.)
22. காவல் கொண்டிருந்த கன்னியை அழிப்பது.
23. கணவன் வழி நிற்போரைக் கற்பழிப்பது.
24. கருப்பமழித்துக் களித்திருப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறப்பது.
27. கற்றவர் தம்மைக் கடுகடுப்பது.
28. பெரியோர் பாட்டிற் பிழை சொல்வது.
29. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
30. கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைப்பது.
31. ஊன் சுவை உண்டு உயிர் வளர்ப்பது.
32. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
33. அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்வது.
34. குடிக்கின்ற நீருள்ள குளந்தூர்ப்பது.
35. வெயிலுக்கொதுங்கும் விருட்சமழிப்பது.
36. பகை கொண்டு அயலார் பயிர் அழிப்பது.
37. பொது மண்டபத்தைப் போயிடிப்பது.
38. ஆலயக் கதவை அடைத்தே வைப்பது.
39. சிவனடியாரைச் சீறி வைப்பது.
40. தவஞ் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
41. சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்வது.
42. தந்தைதாய் மொழியைத் தள்ளி நடப்பது.
43. தெய்வமிகழ்ந்து செருக்கடைவது.
என்று பாவங்களைப் பட்டியலிடுகிறார். படித்துப் பார்த்தால் பெரும்பாலான பாவங்களை நாம் செய்திருக்கிறோம் என்பது புலப்படும். இதை சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்றால், இதற்கு முன்னால் போனது போகட்டும். இனிமேலும் இது போன்ற பாவங்களைச் செய்யாமல் வாழும் வாழ்வைத் தா என்று இறையாற்றலிடம் வேண்டிக் கொள்வதற்குத்தான். ஏனென்றால் வேண்டுதல் என்பதே நமக்கு நாமே செய்து கொள்ளும் ஒரு சங்கல்பம் தான்.