திங்கள், 30 டிசம்பர், 2013

குரு சிஷ்யன் உறவு



குரு என்ற அருள் என்பது அவர் உடலின் வாழ்வு என்ற காலத்திற்கும், உடலின் சமாதி என்ற நிலைகளுக்கு அப்பால் எப்போதும் நிலைத்து நீடித்துக் கொண்டே இருப்பதாகும்.
குருவின் இருப்பை எவரும், அல்லும் பகலும், கண்டங்களை, வருடக் கணக்கினைக் கடந்தும் எப்போதும் உணரலாம். அவர் இப்போது இல்லை என்று உடலின் இருப்பை மட்டும் கருத்திலே கொண்டால், ஏமாற்றம் சீடனுக்கு மட்டுமே தான்.
எட்டவில்லை அறிவிற்கு என்றால் உள்ள இயற்கைத் தத்துவம் எங்கே ஒளிந்துகொள்ளும்?
என்று குரு கேட்பதை மறக்கவே கூடாது.
நாம் இப்போது பல மகான்களை தரிசிக்கும் பாக்கியம் பெற்று இருக்கிறோம்.. வெவ்வேறான வடிவம் கொண்ட இறை அருளைப் பார்த்ததும், நமக்குள்ளே என்ன நிகழ்கிறது என்று கவனிக்க ஆரம்பித்து விட வேண்டும்.இன்னமும் கோடிக் கணக்கானோர் குருவின் முக்கியத்துவம் கேள்விப் படாதோரும் உலகில் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இப்போது நாம் நமது வாழ்வோடு அருளுக்காகவும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறோம்..
நமது கவனம் என்பது நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, அந்த நிலையிலே நமக்கு வருகின்ற பல தகவல்கள், நாம் நோக்கிய சில விசயங்கள், நமக்குள் திணிக்கப்பட்ட சில விசயங்கள் என்று பல கட்டங்களிலே இருந்து நமக்குள் உலக விசயங்கள் வருகின்றன.
நமக்கு உலகில் வாழ பொருள் வேண்டி இருக்கிறது.. இப்போது நமது பொருளாதார நிலை, அரசியல் நிலை, மக்கள் வாழும் முறை, சமுதாயத்திலே இருக்கிற பல விசயங்களிலே நாம் கலந்துகொண்டே தான் ஆன்மீகத்திலும் உயரவேண்டி இருக்கிறது.
இருப்பினும், அருள் என்ற குருவின் நிலையிலே நாம் தியானித்து உயரும் போது, இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு உழைத்து சேகரித்த பணம், செய்தி, கௌரவம், பெருமை என்ற எதுவும் உதவப் போவதில்லை என்ற உணர்வு எப்போது வரும் என்றால், தியானத்திலே அந்த எண்ணத்தை அப்படியே ஒதுக்கி நிறுத்தி லயிக்கப் பழகும் போது தான்.
குரு என்ற அருளானது அந்த செயல்கள் செய்தவரைக்கும்  இப்படித் தான் பதில் தந்தது என்று சொல்ல எந்த வரலாறும், செய்திகளும், சேகரிப்புகளும் நம்மிடையே இல்லை.
சீடர்கள் நடத்தும் நல்லது கெட்டதற்கு ஏற்ப வினை விளவு தர வேண்டிய வேலை இறை நிலைக்கு உண்டு என்பதால், நமது தன் முனைப்போடு நடப்பவைகளை பொருத்திப் பார்த்திருக்க வேண்டியதில்லை...
சீடனானவன் குருவைப் பணிந்ததால் தான் குருவாக ஆனான்... சீடர்கள் குருவை மட்டும் அலட்சியப் படுத்தியதால், குருவின் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து முடிவிலே மாயை என்ற கோரப் பிடியிலே சிக்கி, சீடன் என்ற தகுதி இழந்து வாழ்ந்தோம் என்ற வரலாறு இன்றி முகவரி தொலைந்து மடிந்தோர்களிலே ஒருவராக ஆகிறான்..
குரு என்ற துடுப்பை விட்டு விட்டு, கப்பல் என்ற தியான பீடத்திலே, வாழ்க்கை என்ற கடலிலே சென்றால் என்ன செய்து விடப்போகிறான். மிஞ்சி மிஞ்சி ஆடம்பர வாழ்வும்,புலன் கவர்ச்சி கொண்ட வாழ்க்கை முறை தான். இப்போது நமக்கு புலன் கவர்ச்சி என்ற நிலை என்று தத்தளித்து, சீற்றம் தோன்றும் போதும், உடல் அழிவை நோக்கிச் செல்லும் போதும், அடடே நாம் இவ்வளவு நாளும் இப்படி ஏமாந்து விட்டோமே என்று சீடன் அலறுவான்... குருவிடம் செல்வான்... குரு சொல்வார்..
செயலுக்கு விளைவாய் தெய்வ ஒழுங்கமைப்பிருக்க தவறிழைத்து பின் பரமனைத் தொழுதால் என்ன ஆகிவிடப்போகிறது?
குரு என்பவர் மிகவும் புத்திசாலி. எது இருந்தால் மிகவும் நிம்மதியாக, சுகமாக வாழலாம் என்ற துல்லிய கணிப்புடன் வாழும் போதே தம்மை இறையோடு இணைத்து வாழ்க்கையிலே தானும் உயர்ந்து, ஒரு வழி காட்டியாய் சமுதாயத்திற்கும் பயனாகிறார்.
ஒருவர் காஞ்சி முனிவரிடம் சென்று" இன்னும் இந்த உலகில் துன்பம், துயரம், போர் எல்லாம் இருக்கின்றதே" என்றாராம்.
அவர் " அட.. அப்படியா? ஒரு வேளை நான் செய்த தவம் போதவில்லை போலிருக்கு!"
குருவானவர் சொன்னார்.
நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேரா
நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப்பொருள் கவர்ச்சி ஏதும் உள் நுழையா
இப்பேறு தவத்தால் அன்றி யார் பெறுவார் யார் தருவார்? என்று.
நாம் புறப் பொருளாகக் காணும் எதுவும், நல்ல ஒரு தவத்திலே இருப்பதில்லை.. அது ஒரு குருவின் சீடர்கள் செய்யும் செயல்கள் வரை... இவ் விசயங்களைத் தாண்டியே அதாவது புறப் பொருளை உணரும் புலன் அறிவுக்குத் தாண்டி, உயிர் என்று நிலை கடந்து, அறிவாகப் பிரகாசிக்கிறது குருவின் இறை அருள். அங்கே அசைந்தாலே தவற விட்டு விடுவோம் குருவை/ இறையை...
குரு என்ற அருளை நோக்கி பக்தியுடன் அணுகிக் கொண்டே, தவத்திலே விழிப்புடன் இருக்கக் கற்றுக் கொண்டு, மனம் உயிர் என்ற நிலை கடந்து சென்றால் தான் குருவின் இருப்பிடத்திற்குச் செல்ல முடியும்... புலன் அறிவிற்கு குரு எட்ட மாட்டார். தன்னை அன்றி ஒரு பொருளும் இல்லை என்ற நிலையிலே இருந்து குரு விலகுவதே இல்லை...
நாம் புறப் பொருள்களிலே காணும் எதனோடும், குருவை பிடித்துக் கொண்டால் அன்றி தேறுவது கடினம். குருவானவர் நாம் காணும் புறப் பொருளை அவரும் பார்த்துக் கொண்டே தான் கடந்து சென்று இருக்கிறார். ஈசனின் நிலையிலே ஒன்றி விட்டவர் அவர்..
ஆனால், இந்த வான் காந்தக்களம் இருக்கிறது அல்லவா... இறை நிலையானது அங்கே எந்த ஒரு சீடனின் செயலையும் துல்லியமாக உள்ளது உள்ள படி கணக்கிட்டுக் கொண்டு செயலுக்கு விளைவு என்ற நியதியை தந்து கொண்டே இருக்கும்... இதிலே யாருக்கும் விதி விலக்கு இல்லை.

சரி... புலன் உணர்வுக்கு விளங்கும் உலகத்திலே நடக்கும் எதையும் எதற்காக நாம் சீரமைக்க வேண்டும். குருவை விடாதீர்கள் என்று ஏன் சொல்கிறீர்கள்?என்று கேட்டால்... அது கருணை நிலை தான். இதை புரிந்து கொண்டாலன்றி நமக்கு வேறு வழி ஏதுமில்லை.
எதனையும் விட குருவே உயர்ந்தவர் என்று குரு மீது அன்பு கொள்வோம்.. மலரும் சிவம் நமக்குள். வாழ்க வளமுடன்...

வியாழன், 26 டிசம்பர், 2013

உள் நோக்கிய பயணத்தைப் பற்றி...

தியானம் என்பது முயன்று சாதிப்பதிலே இருக்கிறது.
வைராக்கியம் என்பது மனதிலே வளர்த்துக் கொள்ள வேண்டும். தியானத்திலே அமர்வேன் என்ற மேல்பதிவு மன ஓர்மை நிலைக்கு உதவும்.
மன ஓர்மை என்பது தவத்திற்கு உதவும். தியானத்திலே கூட்டுத் தவமானது நாம் உற்சாகமாக தியானிக்க மனதுக்கு வழி செய்யும். மேலும் பலரின் தியான நிலைகள் நமக்கும் உதவும். தியானமும் சீக்கிரம் கை கூடும்.
வாழ்க்கையிலே தியானம் எடுத்த வரை செய்த பலவித பழக்கங்கள் நம்மை அதே வழியில் செல்வதைத் தடுப்பதால், தியானம் என்பது ஆரம்பத்திலே கடினமாகவே தோன்றும். ஆனால், முயற்சி, குருவிடம் பணிவு, மன அலைத்தொடர்பு குருவோடு ஏற்படுத்திக் கொள்ளுதல் என்ற பயிற்சிகள் தியானத்திலே உயர்வுக்கு வழி தரும்.. எதிலும் எதிர்பார்த்தலை விட, முயற்சித்துக் கொண்டே இருத்தல் சீக்கிரம் பலனைத்தரும்.
ஒவ்வோர் மகானும் ஒரு வித மனோ நிலையிலே இருந்து சமாதி நிலையிலே லயித்தாலும், குரு என்பவரின் ஆற்றலானது வான் காந்த அலையிலே பரவி இருக்கிறது. அணுகும் சீடனின் மனோ அலையானது குருவின் ஆற்றல் அலையுடன் ஒன்றி உயிர்கலப்பு ஏற்பட்ட பிறகு, வான் காந்தத்தின் மூலம் குருவிடம் சீடன் தொடர்ந்து பகிர்ந்து கொண்டே உயர்ந்து கொண்டே செல்வார். அதற்கு சீடனின் தியானம் நாளுக்கு நாள் உயர்வதை உதாரணமாகக் கொள்ளலாம்.
இது ஒரு உதாரணம்... குரு என்பவர் தாம் செயல்பட்ட விதத்தின் ஊடாகவே நம்மை அவர் வழியிலே அழைத்துச் செல்வதைப் பார்க்கலாம். அறிவு என்ற இடத்திலே இருந்து சற்றும் விலகாது அசையாது அறிவை கூராக்குவார்.
குருவின் கருணை என்பது அணுகும் சீடனை, அந்த தூய இடத்திலே வரும் வரை விடாது பிடித்துக் கொண்டே இருக்கும்... இதன் நடுவிலே, சீடன் வாழ்விலே பல ஆண்டுகள் கழிந்து இருக்கலாம்... குருவென்பவர் உடலோடு இல்லாமல் இருக்கலாம்... ஆனால் குரு சீடர் என்ற பந்தம் என்பது மட்டும் எப்போதும் துண்டிக்கவே செய்யாது பார்த்துக்கொள்கிற சீடனை விடாது இருப்பது குருவின் இயக்கத்திலே ஒன்று.
எத்தனையோ கோடி எண்ணங்களே தான் பிறப்புகள்... அதிலே குருவிடம் செல்வதற்கு நமக்கு வாய்ப்பு கிடைப்பதை விடாது குருவோடு தொடர்ந்து கலந்து தமது இருப்பான இறையோடு கலக்க ஆரம்பிக்கவேண்டும்.
குரு மீதான எண்ணங்களானது சீடனை சுத்திகரிப்பு செய்யும். உடலை என்ன செய்தால், தியானத்திலே அமர்த்த ஆகுமோ அதற்கேற்ப அனைத்தையும் நிகழ்ந்து விடும்... உணவு, உழைப்பு, உலகாய நிகழ்வுகள் என்று எதுவும் தியானத்திற்கேற்றார்போல நமக்கு அமையும். 
தியானம் குருவோடு இணைந்த இடத்திலே நமக்குள் கிடைக்கிற தன்னம்பிக்கையிலே, இது வரை கொண்டிருக்கிற அனைத்து தேவையில்லாத பலவற்றையும், சீர் தட்டி, எப்போதும் தியானத்திலே அமர்த்தும் படி செய்யும்.
தியானத்திலே, நேரம் காலம் என்று ஆரம்பத்திலே கடைபிடிப்பது ஒரே வழக்கமாக ஆக்கிக்கொள்ள உதவும் என்றாலும். அப்படி குறிப்பிட்ட நேரத்திலே தியானம் செய்ய அமராதவர்களுக்குக் கூட தியானம் கை கூடவே செய்யும் அந்த தன்னம்பிக்கை. நம்மால் முடியும்.
குருவும் சீடனும் இறையிலே ஒன்றாக இருப்பதை உள்ளுக்குள் உணரும் வரை குருவின் கையை விடக்கூடாது.... உணர்ந்த பிறகு குருவின் கால்களை விடக்கூடாது..

புதன், 11 டிசம்பர், 2013

திருவண்ணாமலை மகிமை


ஆன்மீக பூமியாம், அண்ணாமலையில் அவ்வப்போது அருளாளர்கள் இருந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்கள்.
ஞானத் தபோதனர்களை வா என்று அழைக்கும் மலை என இதனை புராணங்கள் செப்புகின்றன.
தங்கக் கை ஸ்ரீசேஷாத்திரி பகவான் அருள்புரிந்த ஸ்தலம் திருவண்ணாமலை.
பகவான் ஸ்ரீரமண மகரிஷி அருணாச்சல சிவம் என்கிற மந்திரத்தை அருளி பக்தர்களுக்கு உபதேசம் நிகழ்த்திய மலை திருவண்ணாமலை.
தற்போது அமரரான பகவான் யோகிராம் சுரத்குமார் சுவாமிகள் இருந்ததும் திருவண்ணாமலையில் தான்.
சாதுக்களும், மகான்களும் பெருகி உள்ள திருத்தலமும் திருவண்ணாமலை ஆகும் ஆண்டிகள் பெருத்த ஊரும் அண்ணா மலையே.

மலையிலிருந்து சிவன் சிலை செய்கிறார்கள். ஆனால் திருவண்ணாமலையின் சிறப்பு மலையே சிவனாக இருந்து அருள்பாலிப்பதாகும். மலையின் சுற்றளவு 18 கிலோ மீட்டராகும். சுற்றி வர சுமார் 4 மணிநேரமாகும்.

தெற்கே மதுரைக்கு அருகே திருச்சுழியில் வேங்கட ராமனாக அவதரித்து, மதுரை சொக்கப்ப நாயக்கர் தெருவில் வசித்து வந்த இளைஞர், 16-வது வயதில் ஈர்க்கப்பட்டு, தவஞானியாக உரு மாற்றிய மலையும் திருவண்ணாமலைதான். கோவணத்துடன் இருந்து அவர் அருள் புரிந்தார். சூட்சுமங்கள் நிறைந்தது மானிட வாழ்வு என்ன நடக்கும்? என்பதை யாரும் அறிய முடியாது என்பதையும் வலியுறுத்திய அவர்தான் ரமணர்.
பௌர்ணமி நாளில் முழு நிலவின் ஒளியிலிருந்து, பதினாறு கலைகள் பிரகாசிப்பதாலும், அண்ணாமலையில் ஒளிக்கதிர்கள் சிதறி, மலை வலம் வரும் பக்தர்களின் உடலிலும், உள்ளத்திலும் ஊடுருவிப் பாய்வதாலும், மலை வலம்வரும் போது பக்தர்கள் எண்ணுவதை அப்படியே நிறைவேற்றிட அருளும், பொருளும், நோயற்ற வாழ்வும், வெற்றியும், மகிழ்வும், திருமணங்கள் நடைபெறவும், புத்திரப்பேறு ஏற்படவும், தரித்திரத்தையும், துக்கத்தையும், வறுமையையும் நீக்கி, செல்வத்தை தந்திடவும் ஓம் நமச்சிவாய என்று சொல்லிக் கொண்டே பௌர்ணமி நாளில் மலை (கிரி) வலம் வருவோம். அண்ணாமலையாரின் அருள் பெறுவோம்

வில்வமே செல்வம்.

வில்வ இலைகளே சிவ சொரூபம்.  அதிலுள்ள முட்கள் சக்தி சொரூபம்.கிளைகள் வேதமாகும்.வேர்கள் பதினோரு கோடி ருத்திரா்கள்.ஐந்து வில்வங்களை எடுத்து நான்கு திசைகளுக்கு நான்கு இலைகளையும்.நடுவில் ஒரு துளசியையும் வைத்துப் பூஜித்தால் சிவசக்திகைப் பூஜித்தற்கு சமமாகும்

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

என்னை தன்வசமாக்கிய அருணாச்சலமும் என் இதயக் குகையில் வாழும் என் பாசமிகு தந்தை ரமணரும்....

என் அனுபவத்தில் இவை அனைத்தும்  நான்  அனுபவித்தும், உணர்ந்தும்,   படித்தும், திரட்டிய தகவல்கள் இவைகள், இதில் மாற்று கருத்து இருந்தால் அனுபவம் உள்ளவர்கள் தெரிவிக்கவும். இங்கே உள்ள தலைப்புகள் அனைத்திலும்சித்தர்கள் வாசம் இருப்பது அனைவரும் அறிந்த உண்மை. அதுமட்டுமல்லாமல் ஒன்றோடு ஒன்று தொடர்புள்ளது.
மனிதர் உலகம் முழுவதும் ஆதாயபடுத்திகொண்டாலும்  தன் ஜீவனை நஷ்டபடுத்தினால் அவனுக்கு லாபம் என்ன? எனது நோக்கம் படித்து தெளிவதல்ல நடைமுறையில் இச் சிறியேனால்  தெரிந்த வரை தெளிவுபடுத்துவது.

சித்தர்கள்"சித்தர்" என்ற சொல்லுக்கு சித்தி பெற்றவர் என்று பொருள். பொது வாழ்வு முறை, வழி முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு, வழி முறைகளை உருவாக்கி சமூகத்துடன் ஒரு முரண்பாடான உறவு வைத்திருப்பவர்கள். சித் - அறிவு, சித்தை உடையவர்கள் சித்தர்கள். அறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தம் என்றால் அறிவு ;சித்து என்றால் என்றும் நிலைத்திருக்கும் பேரறிவு ; சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்னும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு யோகம் சோதிடம் மந்திரம் இரசவாதம் போன்ற அரிய அறிவியலையும் தந்தவர்கள் சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். மேலும் ஐந்து தகுதிகளாக உள்ளடக்கி சித்தர்கள் என்று அழைக்கப்பட்டனர். சித்தர்கள் மீவியற்கை (supernatural) சக்திகள் உடையவர்கள் என்று சிலர் இயம்புவதுண்டு, எனினும் இவர்கள் உலகாயுத இயல்புகளை சிறப்பாக அறிந்து பயன்படுத்தினர் என்பதுவே தகும். இவர்களின் மருத்துவ, கணித, இரசவாத தத்துவ, இலக்கிய, ஆத்மீக ஈடுபாடுகள் வெளிப்பாடுகள் இவர்களின் உலகாயுத பண்பை எடுத்தியம்புகின்றன. ஆயினும் இவர்கள் வெறும் பொருளியல்வாதிகள் அல்ல. மெய்ப்புலன் காண்பது அறிவுஎன்பதிற்கிணங்க, உண்மை அல்லது நிச நிலை அடைய முயன்றவர்கள் சித்தர்கள்.சித்தர்கள் என்பவர்கள் சித்தி அடைந்தவர்கள். தங்கள் இருப்பை (existence), உடம்பை, சிந்தையை, சுற்றத்தை, இவ்வுலகின் இயல்பை நோக்கி தெளிவான புரிதலை (understanding), அறநிலை உணர்வை (external awareness), மெய்யடைதலை (actuality) சித்தி எய்தல் எனலாம்.மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.
முதல் சித்தர் பதினெட்டு சித்தர்கள் என்கிற கணக்கு ஏனோ, எப்போதுமே சொல்லப் பட்டு வந்திருக்கிறது. நமக்குக் கிடைத்திருக்கும் சித்தர்களின் எண்ணிக்கை பதினெட்டோடு நின்றுவிடவில்லை. அகத்தியர் முதலாய் வள்ளலார் வரையில் நவ கோடானு கோடி சித்தர்கள் பல்வேறுபட்ட காலப்பகுதிகளில் வாழ்ந்திருக்கின்றனர். நாம் அறிந்தும், அறியாமலும் இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். இவர்கள் எல்லாருக்கும் முதல்வராய், ஆதி சித்தர் யாரென தேடினால்......, "நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நிர்மலமாம் சதாசிவனார் என்னக்குச் சொன்னார்"
- அகத்தியர் -
"சிவனார் உரைத்த மொழி பரிவாய் சொன்னார்"
- தேரையர் -
"தாரணிந்த ஈசன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல"
- போகர் -
"சொல்லவே தேவிக்கு சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல"

- தன்வந்திரி -
"பாதிமதி அணிந்தவர் தான் சொன்னதிது
பதியான விதியாளி அறிவாள் பாரே"
- யூகிமுனி -
இது மாதிரி இன்னும் எத்தனையோ சித்தர்களின் பாடல்களை எடுத்தக் காட்டாய்ச் சொல்லலாம். இவர்கள் அனைவரும் சிவன் எனும் சிவபெருமான் சொன்னதாகவே சொல்லுகின்றனர். ஆக, சிவனே முதல் சித்தர் என்று அறுதியிட்டுக் கூறலாம். சித்தர்கள் வாழ்ந்ததாக கருதப் படும் இடங்களிலெல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை காணப்படுவது மூல குருவுக்கு வணக்கமாக இருக்கலாம்.
வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர்.இந்தப் பதினெட்டுச் சித்தர்கள் யார், யார்? என்பதில் பலரது கூற்றுக்களில், சில பெயர்கள் மாறுபடுகின்றன. எனினும், முற்காலத்தில் உயரிய இறைநிலையை எய்தியவர்களின் எண்ணிக்கை பதினெட்டிற்கும் மேற்படும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை. சித்தர்கள் அனைவருமே, தாம் உயர்நிலை எட்டியது மட்டுமின்றி, உலக மக்கள் நலனுக்காக பல விதங்களிலும், உயரிய நுட்பங்களை வெளிப்படுத்தியதன் மூலமும், தம்முடைய காலத்தில் பிறருக்காக செயல்கள் புரிந்தும், சேவை புரிந்துள்ளனர். சுருக்கமாகச் சொன்னால், இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து, இயற்கையை முற்றிலும் அறிந்தவர்களே சித்தர்களாவர்.சாதி, சமயம், சாத்திரம், சடங்குகள் மீறிய உலக நோக்கு, பொது இல்லற, துறவற வாழ்முறைகளில் இருந்து வேறுபட்ட வாழ்வு முறைகள். விந்தையான செயல்கள், பட்டறிவு தமிழ், சீரிய ஆராய்ச்சி ஆகிய அம்சங்கள் சித்தர்களை வருணிப்பன எனலாம்.நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.சொல்லப்போனால், சித்தத்தை அடக்கி, தாங்களும் சிவமாய், இறையாய் வீற்றிருக்கும் அளவிற்கு சக்தி படைத்தவர்கள். நினைத்ததை, நினைத்தவாறு செய்யும் ஆற்றல் மிக்கவர்கள். இயற்கையை வென்றவர்கள். முதல் தகுதி: சித்தத்தை அடக்கவல்லவர்கள். இரண்டாம் தகுதி: எண்வகை சித்துக்களை செய்ய வல்லவர்கள்.
மூன்றாம் தகுதி:
முற்றும் துறந்தவர்கள் பாச இருளகற்றவர்கள் யான் என்ற அழுக்கற்றவர்கள்.

நான்காம் தகுதி:
பிறப்பிற்குத் காரணமான வினைவித்தைக் கெடுத்து தூய உணர்வில் மாறி ஐம்புலன்களை அடக்கி சித்தத்தை ஒருமுகப்படுத்தி ஆன்மீக ஆற்றலைப் பெற்று புற உணர்வில் செத்துக்கிடப்பவர்கள்.
ஐந்தாம் தகுதி:
உயிரினங்களின் இன்னல்களை நீக்க இடையராது சிந்தித்து முழு முயற்சியுடன் தெரிந்து ஆயக்கலைகள் அறுபத்தி நான்கையும் உணர்ந்து இயற்கையோடு இணைந்த எளிய வாழ்வே உடல் நலனுக்கும் உள்ள நலனுக்கும் சாலச் சிறந்தது எனக் கண்டறிந்து மக்களினத்திற்கு ஏற்ற மருத்துவ முறையைக் கொண்டு வந்தவர்கள்.முக்காலமும் உணர்ந்த முழுமுதல் ஞானிகள். எக்காலமும் எத்தி போற்றப்பட வேண்டிய தமிழ் குலத் தலைவர்கள். இப்பதினெட்டு சித்தர்களுக்கு முன் இரேதாயுகத்தில் இரண்டு லட்சம் திரேதாயுலகத்தில் ஒரு லட்சம் துவாபரயுகத்தில் ஐம்பதாயிரம் கலியுகத்தில் இருபத்தைந்தாயிரம் ஆகமொத்தம் 375000 சித்தர்கள் தோன்றினர் என்று தேரையர் கூறுகின்றார்.

சித்தர்கள் வரலாறு இம்மண்ணுலகில் பிறந்த உயிரினங்களில் தலைமையான உயிரினமே மனித இனம். இவர்களோடு பதினெண் சித்தர்கள் உறவு கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்.... என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள்.
குருபாரம்பரியத்தில் குறிக்கப் படும் 48 வகைச் சித்தர்கள்:1.
பதினெட்டாம்படிக் கருப்புகள்
2.
நவகோடி சித்தர்கள்
3.
நவநாத சித்தர்கள்
4.
நாத சித்தர்கள்
5.
நாதாந்த சித்தர்கள்
6.
வேத சித்தர்கள்
7.
வேதாந்த சித்தர்கள்
8.
சித்த சித்தர்கள்
9.
சித்தாந்த சித்தர்கள்
10.
தவ சித்தர்கள்
11.
வேள்விச் சித்தர்கள்
12.
ஞான சித்தர்கள்
13.
மறைச் சித்தர்கள்
14.
முறைச் சித்தர்கள்
15.
நெறிச் சித்தர்கள்
16.
மந்திறச் சித்தர்கள்
17.
எந்திறச் சித்தர்கள்
18.
மந்தரச் சித்தர்கள்
19.
மாந்தரச் சித்தர்கள்
20.
மாந்தரீகச் சித்தர்கள்
21.
தந்தரச் சித்தர்கள்
22.
தாந்தரச் சித்தர்கள்
23.
தாந்தரீகச் சித்தர்கள்
24.
நான்மறைச் சித்தர்கள்
25.
நான்முறைச் சித்தர்கள்
26.
நானெறிச் சித்தர்கள்
27.
நான்வேதச் சித்தர்கள்
28.
பத்த சித்தர்கள்
29.
பத்தாந்த சித்தர்கள்
30.
போத்த சித்தர்கள்
31.
போத்தாந்த சித்தர்கள்
32.
புத்த சித்தர்கள்
33.
புத்தாந்த சித்தர்கள்
34.
முத்த சித்தர்கள்
35.
முத்தாந்த சித்தர்கள்
36.
சீவன்முத்த சித்தர்கள்
37.
சீவன்முத்தாந்த சித்தர்கள்
38.
அருவ சித்தர்கள்
39.
அருவுருவ சித்தர்கள்
40.
உருவ சித்தர்கள்

பெயர் குறிப்பிடக் கூடாது எனத் தடை விதிக்கப் பட்டுள்ள சித்தர்கள் ஏழு வகைப்படுவர்.

எண்ணற்கரிய சித்தர் எழுவர் (ஏழு பேர்)"

எடுத்துரைக்கலாகாச் சித்தர் எழுவர்

ஏதமில் நிறை சித்தர் எழுவர்

விண்டுரைக்க வொண்ணாச் சித்தர் எழுவர்

-- என்று பல குறிப்புகள் உள்ளன.

சித்தர் பழமொழிகள்.
சித்தர்கள் தனியாகப் பழமொழிகள் ஏதும் பாடியவரல்லர். பதினெண் சித்தர்கள் பாடல்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தென்பட்டவைகளை தொகுத்தளித்திருக்கிறார்.

1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.

5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.

6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம்

1.பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்
உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும் உயிர்களும் பரிணாம மாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும். எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை. பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். இந்த நியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்த உயிர் முறுப்புள்ளியாகிவிட்டதா என்றால் அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர் தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும் ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின் பொருள்.
2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.
உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம் மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன் மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும் சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக இயக்கங்களுக்கும் பொருந்தும்.
3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.
சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும் அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச் சிறுத்துக் கொண்டே வந்து முடிவில் அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும். அந்த அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும் இயற்கை நிகழ்வுகள்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல் இல்லாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம் பிடித்தல்லவா அலைந்திருப்பான். எத்தனை சம்பவங்களைத் தான் அவன் நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள் வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள் மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில் திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.

5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
ஒரு தந்தையும் தாயும் புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும். இது ஒரு வட்டச் சுழற்சி.

6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம் விரும்பிப் போனால் விலகிப் போகும்.
விலகிப் போனால் விரும்பி வரும் என்ற முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது. பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில் திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச் சொல்கிறார். மனம் உணருமா?

108 சித்தர்கள்:

108 சித்தர்கள்

1. திருமூலர்- சிதம்பரம்.
2.
போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3.
கருவூர்சித்தர்கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4.
புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5.
கொங்கணர்- திருப்பதி, திருமலை
6.
மச்சமுனி- திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7.
வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8.
சட்டைமுனிசித்தர் திருவரங்கம்.
9.
அகத்தியர்திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10.
தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11.
கோரக்கர்பேரூர்.
12.
பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.சங்கரன் கோயில்
13.
சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16.
இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23.
இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37.
காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்.



 

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்....

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

அது ஒரு “தகரவர்க்க”ப் பாடல். முற்றிலும் “த” என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என்று வழங்குகிறது.

பாடலைப் பார்ப்போம்:
“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்

இப் பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன.

புதன், 4 செப்டம்பர், 2013

தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை ...

தஞ்சாவூரில் பிரகதீஸ்வரர்
திருவாரூரில் தியாகராஜர்
திருநெல்வேலியில் நெல்லையப்பர்
திருவையாறில் ஐயாரப்பர்

திருவண்ணாமலையில் அண்ணாமலையார் ...
திருவாவடுதுறையில் கோமுக்தீஸ்வரர்
திருவெண்காட்டில் சுவேதாரண்யேஸ்வரர்
திருவானைக்காவலில் ஜம்புகேஸ்வரர்

திருக்கருகாவூரில் முல்லைவனநாதர்
திருவாலாங்காட்டில் வடாரண்யேஸ்வரர்
திருமருகலில் ரத்தினகிரீஸ்வரர்
திருவிசநல்லூரில் யோகநந்தீஸ்வரர்

திருப்புகலூரில் வர்த்தமானீஸ்வரர்
திருத்தங்கூரில் வெள்ளிமலைநாதர்
திருக்கழுகுன்றத்தில் வேதகிரீஸ்வரர்
திருநீலக்குடியில் நீலகண்டேஸ்வரர்

திருச்சியில் தாயுமானவர்
திருநள்ளாரில் தர்ப்பாரண்யேஸ்வரர்
திருமணஞ்சேரியில் உத்வாகநாதர்
திருவேள்விக்குடியில் கல்யாண சுந்தரேஸ்வரர்

இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

'த' வரிசையில் ஒரு பாதி ஊர்களை மட்டுமே எழுதியிருக்கிறேன்.இதற்கே மூச்சு வாங்குது.

இன்னும் மயிலாப்பூரில் காபாலீஸ்வரர் , சிதம்பரத்தில் நடராஜர் , வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதர் என ஆரம்பித்தால் எழுதி முடிக்கவே ஒரு நாள் ஆகும்.
தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128.

தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும்.  ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.

உதாரணம் : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே திருவையாறாக மாறி இருக்கிறது.காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.

  இப்போதெல்லாம் நம்முடைய  பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மில் பலருக்கு விளக்கம் சொல்ல முடிவதில்லை.  அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர்.வாழ்க தமிழர்களின் புகழ்.

திங்கள், 2 செப்டம்பர், 2013

எல்லாம் வல்ல தெய்வமது...


 
"எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ளது. நீக்கமற... சொல்லால் மட்டும் நம்பாதே,   சுயமாய் சிந்தித்தே தெளிவாய். வல்லாய் உடலில் இயக்கம் அவன், வாழ்வில் உயிரில் அறிவுமவன்,   கல்லார் கற்றார் செயல் விளைவாய், காணும் இன்ப துன்பமவன். அவனின் இயக்கம் அணுவாற்றல். அணுவின் கூட்டு பக்குவம் நீ, அவனில் தான் நீ,  உன்னில் அவன் ..... அவன் யார்? நீயார்? பிரிவேது?..... அவனை மறந்தால் நீ சிறியோன் ... அவனை நினைந்தால் நீ பெரியோன் ... அவன் + நீ ஒன்றாய் அறிந்த இடம், அறிவு முழுமை அது முக்தி"

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

மகான் பட்டினத்தார்..!

பட்டினத்தார் என்றும் பட்டினத்தடிகள் என்றும் கூறப்படுபவர் சோழர்கள் காலத்தில், கி.பி.11 ஆம் நூற்றாண்டில், வாழ்ந்த துறவி. இவருடைய இயற்பெயர் திருவெண்காடர். இவர் காவிரிப்பூம்பட்டிணத்தில் வணிகத்தொழில் புரிந்து வந்த பெருஞ்செல்வர். கடல்வழி வாணிகத்தில் பெரும் பொருள் ஈட்டியவர்.
பொருளின் நிலையாமையை உணர்ந்து, கடவுள் பால் ஈர்ப்புண்டு துறவறம் பூண்டவர். பெருஞ்செல்வத்தைத் துறந்து இவர் பூண்ட துறவு புத்தருக்கு இணையாக தமிழகத்தில் கருதப்படுகின்றது. அவர் துறவியாகத் திரிவதால் தம் குடும்ப கவுரவம் கெடுவதாக எண்ணி அவருக்கு விஷம் தோய்ந்த அப்பம் கொடுக்க முயன்றார் அவருடைய தமக்கை.
அந்த அப்பத்தினை அவள் வீட்டுக் கூரை மீதே செருகி விட்டு "தன்வினை தன்னைச் சுடும்; வீட்டப்பம் ஓட்டைச் சுடும்` என்று கூறிவிட்டு பட்டினத்தார் சென்று விட அந்தக் கூரை தீப்பற்றி எரிந்த அதிசயம் கண்டு அவரும் மற்ற உறவினர்களும் அவருடைய அருமை அறிந்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர் சித்தர் என்று உணர்ந்து கொண்டு பட்டினத்தடிகள் என்று மதிக்கத் தொடங்கினார்கள்.
பட்டினத்தடிகள், திருவெண்காடு, சீர்காழி, சிதம்பரம் போன்ற சிவத்தலங் களுக்குச் சென்று பாடிய பாடல்கள் அனைத்தும் சைவத் திருமுறைகளில் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் உள்ளன. தன் இறுதிக் காலத்தில் திருவொற்றியூர் வந்து சேர்ந்த பட்டினத்தடிகள், அங்கே கடற்கரையில் சிறுவர்களுடன் சித்து விளையாடியபடி தன்னை மண்மீது மூடச் செய்து மறைந்து சமாதியானார் என்கிறார்கள்.
அவர் மறைந்த இடத்தில் லிங்கம் ஒன்று மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. பட்டினத்தடிகள் துறவியாக ஊர் ஊராகத் திரிந்து கொண்டிருந்த காலத்தில் அவருடைய அன்னையார் மரணமடைந்தார். அவருடைய ஈமச்சடங்கை எங்கிருந்தாலும் வந்து செய்து தருவேன் என்று வாக்களித்திருந்த பட்டினத்தடிகள் சரியான நேரத்தில் சுடுகாட்டினை அடைந்தார்.
அவருடைய தாயின் சிதைக்காக உறவினர்கள் அடுக்கியிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு பச்சை வாழைமட்டைகளையும் இலைகளையும் கொண்டு சிதை அடுக்கி பத்துபாடல்கள் பாடி சிதையைப் பற்றச் செய்தார். தாயார் உடலுக்குத் தீ மூட்டும் முன் அவர் உருகிப்பாடிய பாட்டைக் கேட்டால் கல் மனம் கொண்டவர்கள் கூட மனம் கசிந்து அழுது விடுவார்கள்.
அந்தப் பாடல்கள் பின் வருமாறு..
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத் தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து முட்டச்
சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டிய தாய்க்கோ
விறகிலிட்டுத் தீமூட்டு வேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே அந்திபகல்
கையிலே கொண்டென்னைக் காப்பாற்றிய தாய்தனக்கோ
மெய்யிலே தீமூட்டு வேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு
வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் உருசியுள்ள
தேனே திரவியமே செல்வத் திரவியப்பூ
மானே எனஅழைத்த வாய்க்கு
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல்
கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் மெள்ள
முகமேல் முகம்வைத்து முத்தே என்றன்
மகனே எனஅழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புறத்திலே
பின்னை இட்ட தீ தென்இலங்கையில்
அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே
யானும் இட்ட தீ மூள்கமூள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல்
ஆகுதே பாவியேன் ஐயகோ மாகக்
குருவி பறவாமல் கோதாட்டி என்னைக்
கருதி வளர்த்தெடுத்த கை
வெந்தாளோ சோணகிரி வித்தகா நின்பதத்தில்
வந்தாளோ என்னை மறந்தாளோ சந்ததமும்
உன்னையே நோக்கி உகந்து வரம் கிடந்து என்
தன்னையே ஈன்றெடுத்த தாய்
வீட்டிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்
நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் பால்தெளிக்க
எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்
எல்லாம் சிவமயமே யாம்.

வயித்திய தர்மம் - அகத்தியர்

அரசரென்றால் பொருள் கொடுத்து
 நோய்தீர்த்து கொள்வாரதனலே யுந்தனக்குத் தருமமில்லை
நீசனென்ற எளியோர்க்கு வயித்தியஞ் செய்ய
 நிலையாத தருமமது நிலைக்குமென்று
பிரியமுடனென்குரு வேதியர்தான் சொன்னார்
 பிள்ளையென்று புலத்தியனே யுனக்குச்சொன்னேன்
பரிசனமாய் மனதில்வைத்தால் முத்தி சேர்வாய்
 பாலகனே யிதைமறந்தால் பலித்திடாதே,

பலித்திடவேணுமென்றால் புலத்தியனே ஐயா
 பாரிலுள்ள வுயிரெல்லாந் தன்னுயிர் போலெண்ணி
சலித்திடாயொரு போதுந் தருமஞ் செய்ய
 சந்தையங்கள் செய்யாதே சதிசெய்யாதே
சலித்திடவே கருமத்தால் பிறவிகிட்டுந்
 தருமத்தால் சாயுச்ய பதவிகிட்டும்
சலித்திடாய் சற்குருவை யடுத்துக்காரு
 சதாகாலஞ் சதாசிவனைப் போற்றிப்பாரே.
                                                  -அகத்தியர் பரிபூரணம் 400

பொருள்:நாட்டை ஆளும் அரசன் என்றால் எவ்வளவு பொன்,பொருள்
கொடுத்தும்
தன் நோயை தீர்த்துக்கொள்வான்,
அப்படி நீ அவர்களிடம் நிறைய பொருள் வாங்கிக்கொண்டு

வயித்தியம்
செய்வதால் உனக்கு தருமம் உண்டாகாது.
வறுமையில் வாழும் ஏழை, எளியோர்க்காக சேவை

அடிப்படையில் பணம் வாங்காமலும் அல்லது குறைந்த
அளவில் பணத்தை பெற்றுக்கொண்டும் நீ செய்யும்
வயித்தியத்தில்தான்
உனக்கு தருமம் உண்டாகும்.
அத்தர்மம்தான் நிலைத்து நிற்கும் என வேதநாயகனான
என் குரு(சதாசிவன்)தான் இதை எனக்கு சொன்னார்.
என் பிள்ளைபோல் நினைத்து புலத்தியனே உனக்கு

இதை சொல்கிறேன், அக்கறையோடு இதை மனதில் வைத்து
செயல்பட்டால் முத்தி நிலையை அடைவாய்
இதை மறந்தால் நீ செய்யும் வயித்தியங்கள் பலிக்காமல்
போய்விடும்.



நீ செய்யும் வயித்தியங்கள் பலிக்க வேண்டுமென்றால் உலகிலுள்ள உயிர்களையெல்லாம்
தன்னுயிர் போல எண்ணி தர்மம் செய்வதற்கு
ஒரு போதும் சலித்துக்கொள்ளாமல் செயல்பட வேண்டும்.
பணத்திற்க்காக வயித்தியம் செய்யாதே, ஏழைகளிடம்

பேரம் பேசாதே, யாருக்கும் சதி(கெடுதல்) செய்யாதே,
அப்படி செய்தால் நீ செய்யும் கர்மவினையால் மிண்டும்,
மீண்டும்
 பிறவிகளை எடுத்துக்கொண்டே இருப்பாய்.

தர்ம சிந்தனையுடன் எப்போதும் தர்மம் செய்வாயானால்
பிறப்பு, இறப்பற்ற மோட்ச நிலை உண்டாகும், பரலோக பதவி
கிடைக்கும்.எனவே எப்பொழுதும் தர்ம சிந்தனையோடு
தன் குருவை மனதால் நினைத்து வணங்கி விட்டு மருந்தை
செய்யவும். மருந்தை செய்து முடித்ததும் இம்மருந்தை
உண்பவர் பூரண குணம் பெறவேண்டுமெனவும்,
தனது வயித்தியம் பலித்திட வேண்டுமெனவும்
சதாசிவனை நினைத்து பூசை செய்து பின்னர் மருந்தினை
உன்னை நாடி வருவோர்க்கு வழங்க வேண்டும்
என்கிறார் அகத்தியர்.


புதன், 21 ஆகஸ்ட், 2013

வைத்தீஸ்வரன் கோயில்..............


நமசிவாய வாழ்க
அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில்

மூலவர் : வைத்தியநாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : தையல்நாயகி
தல விருட்சம் : வேம்பு
தீர்த்தம் : சித்தாமிர்தம்
ஆகமம்/பூஜை : காமிக ஆகமம்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : புள்ளிருக்குவேளூர்
ஊர் : வைத்தீஸ்வரன் கோயில்
மாவட்டம் : நாகப்பட்டினம்
மாநிலம் : தமிழ்நாடு

பாடியவர்கள்:
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம்
 தேவாரப்பதிகம்
 கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப் பாதத்தை தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப் போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.

-திருஞானசம்பந்தர்
தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 16வது தலம்.
பிரார்த்தனை
   தென்னிந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள மக்கள் பலருக்கு இத்தலத்து ஈசன் குலதெய்வமாக இருப்பதால் இங்கு பல மாநிலத்து பக்தர்களும் வந்து வழிபடுகின்றனர். உடற்பிணி, உடம்பில் கட்டிகள், பருக்கள், வடுக்கள் ஆகியவை நீங்க இத்தலத்தில் பிரார்த்தனை செய்து இங்கு தரும் புனுகு எண்ணெய் வாங்கி பூசிக்கொள்கின்றனர். தன்வந்திரி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் என்பதால் இங்கு உடம்பில் ஏற்படும் பல்வேறு வகைக்குறைபாடுகள் நீங்கி நலம் பெறுகின்றனர்.

செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் அர்த்தசாமபூஜையில் முருகனின் திருவடிகளில் சாத்தப்பெறும் நேத்திரப்படி சந்தனமும் திருநீறும் நோய்கள் தீர்க்க வல்லது. இத்தலத்தில் வீற்றிருக்கும் மூலவர் வைத்தியநாத சுவாமியை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, திருமணவரம், குழந்தை வரம், தோச நிவர்த்தி ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

இவரது சன்னதியில் தரப்படும் வைத்தியநாதர் மருந்தை வாங்கி தினமும் சாப்பிட்டு வந்தால் தீராத நோய்கள் பல தீருவதாக கூறுகிறார்கள். செவ்வாய் தோஷத்தால் பாதிப்படைந்தவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

நேர்த்திக்கடன்:

தினமும் அர்த்த ஜாமத்தில் முருகனுக்கு முத்துகுமார சுவாமிகளுக்கு தீபாராதனை நடக்கும். புனுகு, பச்சை கற்பூரம், சந்தனம், எலுமிச்சை சாத்தி பன்னீர் புஷ்பம், பால் அன்னம், பால் நைவேத்தியம் இரவு 9 மணிக்கு விசேசமாக பூஜை நடத்தி வழிபடுகின்றனர். தையல் நாயகிக்கு புடவை சாத்துதலும்,அபிசேகம் செய்தலும்,சந்தனகாப்பு சாத்துதலும் பக்தர்களின் முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சுவாமிக்கு மா ,மஞ்சள் பொடி, திரவிய பொடி, தைலம், பால், தயிர், விபூதி ,பன்னீர்,இளநீர், பஞ்சாமிர்தம், எலுமிச்சை, தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். மொட்டை போடுதல், காது குத்துதல், வயிற்று வலி குணமாக மாவிளக்கு போடுதல், தாலி காணிக்கை, உருவங்கள் காணிக்கை ஆகியவற்றை செய்கின்றனர். அம்பாள் சன்னதியில் உப்பு, மிளகு , கடுகு, வெள்ளி கண்ணுருக்கள் ஆகியவற்றையும் பக்தர்கள் செலுத்துகிறார்கள். மேலும் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம். தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம்.வசதி படைத்தோர் கோயில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம். 
தலபெருமை:
சித்தாமிர்த தீர்த்தம்: இத்தல இறைவனுக்கு சித்தர்கள் அமிர்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு பல வரங்கள் பெற்றனர். அப்போது சிந்திய அமிர்தம் இங்குள்ள தீர்த்த குளத்தில் கலந்துள்ளது. எனவே இக்குளம் சித்தாமிர்த தீர்த்தம் எனப்படுகிறது. உடலில் ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் இந்த தீர்த்தத்தில் நீராடினால் குணமாகும் என்பது நம்பிக்கை. இதில் 18 தீர்த்தங்கள் கலந்துள்ளன. சதானந்த முனிவர் இங்குள்ள தீர்த்த கரையில் தவம் இருந்த போது, தவளையை பாம்பு விழுங்க முயற்சித்து, இவரது தவத்திற்கு இடையூறு செய்தது. கோபத்தில் இவர் விடுத்த சாபத்தினால் இந்த தீர்த்தத்தில் பாம்பு, தவளை இருப்பதில்லை.
புள்ளிருக்கு வேளூர்: வைத்தீஸ்வரன் கோயிலுக்கு புள்ளிருக்கு வேளூர் என்ற பெயரும் உண்டு.புள் - சடாயு என்ற பறவையும், இருக்கு - இருக்கு என்ற வேதமும் வேள் - முருகப்பெருமானும், ஊர் - சூரியனும் இறைவனை வழிபட்டு அருள் பெற்ற காரணத்தால் இத்தலப்பெயர் புள்ளிருக்கு வேளூர் என்று பெயர் வந்தது.
நோய் தீர்க்கும் திருச்சாந்து: 4448 வகையான வியாதிகளை தீர்த்து வைக்கும் மருத்துவத்தின் தலைமை பீடம் இது. இங்கு புற்று மண், அபிஷேக தீர்த்தம், வேப்ப இலை, அபிஷேக சந்தனம், அபிஷேக விபூதி இவைகளை கொண்டு "திருச்சாந்து' எனப்படும் உருண்டை தயாரிக்கப்படுகிறது. இதைச் சாப்பிட்டால் தீராத நோய்கள் குணமாகும் என்பது நம்பிக்கை. தோல் நோய்களுக்கு, இங்குள்ள புனுகு எண்ணெய் வாங்கி தேய்த்து நீராடுகின்றனர். வைத்தியநாதர் தன்னை வணங்கும் மக்களின் சாதாரண வியாதிகளை மட்டுமின்றி, பிறவிப்பிணியையே தீர்த்து விடுபவர். இவரை வணங்கினால் மன அமைதி, வேலைவாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, திருமண பாக்கியம், குழந்தை வரம், தோஷ நிவர்த்தி ஆகியன உண்டாகும்.

வைத்தியநாதர் பல மாநில மக்களுக்கு குல தெய்வமாக விளங்குகிறார். கோயிலின் கிழக்கேயுள்ள நுழைவிடத்தில், ஆதிவைத்தியநாதர் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த சிவன் சன்னதியை தரிசித்தால், அது ஆயிரம் கிழக்கு பார்த்த சிவன் சன்னதிகளை தரிசித்த பலனைத்தரும் என்பது ஐதீகம். வைத்தியநாதரும் மேற்கு நோக்கி உள்ளார். முருகப்பெருமான் இறைவனை வழிபட்டு சூரனை அழிக்க வேல் வாங்கிய தலம். இராமர் வழிபட்டு அருள் நலமுற்ற தலம்.
செவ்வாய் தோஷ நிவர்த்தி: இந்தக் கோயிலிலுள்ள அங்காரகன் சன்னதியில் செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடை மற்றும் பல சிரமங்களை அனுபவிப்போருக்காக சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய் திசை 7 வருடம் நடக்கும். நிலம் வாங்க, கடன் தொல்லை நீங்க, மூட்டு வலி குணமாக இவரை வணங்குவது சிறப்பு.
செவ்வாய் தோஷம் நீங்க, முருகன் வழிபாடு, கார்த்திகை மற்றும் செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பது, துவரை, செப்பு பாத்திரம் ஆகிய பொருள்கள் தானம் செய்வது, அங்காரகனுக்கு அபிஷேகம் செய்து சிவப்பு நிற ஆடை அணிவித்து வழிபாடு செய்வது நல்லது.
சடாயுகுண்டம்: இத்தலத்தில் சம்பாதி சடாயு என்ற கழுகரசர்கள் இறைவனை வழிபட்டு அருள் பெற்றுள்ளனர். சடாயுவின் வேண்டுகோளின்படி இராமபிரான் இத்தலத்தில் (விபூதி குண்டத்தில்) சிதையடுக்கிச் சாடாயுவின் உடலை வைத்து தகனம் செய்ததனால் இவ்விடம் சடாயு குண்டம் எனப்பட்டது. வீரசேனன் என்ற அரசன் சயரோத்தினால் பீடிக்கப்பெற்ற சித்திர சேனன் என்ற தன் மகனுடன் இத்தலத்திற்கு வந்து நீராடி இக்குண்டத்திற்கு அதிரசம் வடை முதலியன நிவேதனம் செய்து வேதிகையையும் பொன்னால் திருப்பணி செய்து குண்டத்திலுள்ள நீற்றை அள்ளி எடுத்துத் தானும் அணிந்து தன் புதல்வனுக்கும் அணிவித்து நோய் நீங்கப்பெற்று நலமுற்றான்.
செல்வ முத்துக்குமாரர்: வைத்தியநாதருக்கும் தையல்நாயகிக்கும் செல்லப்பிள்ளையாதலால், இங்குள்ள முருகன் "செல்வ முத்துக்குமாரர்' என அழைக்கப்படுகிறார். சூரபத்மனை அழிப்பதற்காக இத்தல இறைவனை பூஜித்து வரம் பெற்றுள்ளார். செல்வமுத்துக்குமாரர் சன்னதியில் தினமும் நடக்கும் அர்த்தஜாம பூஜையின் போது புனுகு, பச்சைக்கற்பூரம், சந்தனம், எலுமிச்சை, பன்னீர், புஷ்பம், பால் சாதம், பால் ஆகியவற்றுடன் விசேஷ பூஜை செய்யப்படும்.
முருகன் திருவடியில் சாத்தப்படும் சந்தனத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும். முருகனுக்கு முக்கியத்துவம் உள்ள தலம் என்பதால், இங்கு அனைத்து விழாக்களும் முத்துக்குமார சுவாமிக்கு தான். தினமும் காலையிலும், அர்த்தஜாம பூஜையின் போதும் முதலில் முருகனுக்கு பூஜை செய்த பிறகே, சிவனுக்கும் அம்மனுக்கும் பூஜை நடக்கும். முத்துக்குமாசுவாமிக்கு தைமாதம் செவ்வாய்கிழமை ஆரம்பித்து 10 நாள் விழா நடக்கும். பங்குனியில் கோயிலின் பிரமோற்ஸவம் 28 நாள் நடைபெறும். மகாலட்சுமிக்கு சன்னதி உள்ளது. நவகிரக தலங்களில் இது அங்காரக தலம் ஆகும். மிகப்புகழ்பெற்ற பிரார்த்தனை தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமி மேற்கு பார்த்த சந்நிதி. இங்கு தரப்படும் வில்வம், விபூதி, புற்றுமண் தைலம் ஆகியவற்றைக் கொண்டு தரப்படும் மருந்து வெண்குஷ்ட ரோகம் குணமாகிறது. செல்வ முத்துக் குமாரராக இத்தலத்தில் முருகன் தன் தகப்பனாரைப் பூஜிக்கிறார். இத்தலத்தில் நவகிரகங்கள் வரிசையாக இருக்கும். எல்லா தலங்களிலும் சுவாமிக்கு முன்புற பிரகாரத்தில்தான் இருக்கும். ஆனால் இங்கு மட்டும் நவகிரகங்கள் சுற்றுப்பிரகாரத்தில் சுவாமிக்கு பின்புறம் உள்ளது. இராமர் பூஜித்த தலம் இது. தையல் நாயகி அம்மனை வணங்கினால் குழந்தைகளுக்கு உண்டாகும் பாலதோஷம் நீங்கும். செவ்வாய்க் கிழமைகளில் ஆடு வாகனத்தில் அங்காரகன் எழுந்தருள்வார். மருத்துவத்துறையில் படிப்பவர்கள் இங்கு வழிபாடு செய்ய ஏராளமாக வருகின்றனர்.
தல வரலாறு:
அங்காரகனுக்கு வெண்குஷ்ட நோய் வந்தது.அப்போது அசரீரி ஒன்று ஒலித்தது.வைத்தீசுவரன் கோயில் சென்று ஒருமண்டலம் சித்தாமிர்த குளத்தில் குளித்துவிட்டு வைத்தியநாதசுவாமியை வணங்கினால் ரோகம் குணமாகிவிடும் என்று கேட்டது. இதையடுத்து அங்காரகனும் இங்கு வந்து வழிபட்டு நோய் குணமானது.இந்த வைத்தியத்துக்கு சுவாமி மருந்து தயார் செய்தபோது பார்வதி தைல பாத்திரம் கொண்டு வந்ததால் அம்பாளுக்கு தைல நாயகி என்று பெயர் வந்தது.இங்கு மொத்தம் ஐந்து சந்நிதிகள் உள்ளன.
1. கற்பக விநாயகர். இவரை வழிபட்டால் என்ன வரம் கேட்டாலும் தருவார்.
2. செவ்வாய் தோசம் உள்ளவர்கள் அங்காரகனை வழிபட்டால் திருமண வரம் கிடைக்கப் பெறுவர் .
3. வைத்தியநாதசுவாமி சர்வ ரோக நிவாரணி.இவரை வணங்கினால் தீராத பிணிகள் எல்லாம் தீரும்.
4. செல்வ முத்துக் குமரர் என்ற முருகப்பெருமானை வணங்கினால் புத்திர பாக்கியம் தொழில் விருத்தி கிடைக்கும்.
5.தையல் நாயகி அம்பாளை வணங்கினால் குழந்தைகளுக்கு பாலா தோசம் என்ற குறை நீங்கும்.தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது.

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.


அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.
வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.
அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.
அது ஒரு “தகரவர்க்க”ப் பாடல். முற்றிலும் “த” என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. “ஏகாக்ஷரப் பாடல்” என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என்று வழங்குகிறது.

பாடலைப் பார்ப்போம்:
“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”

இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்
 இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன.
உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2013

கர்மவினையை நீக்கிட ஒரு சுலப வழிமுறை:யோகி கைலாஷ்நாத்

 

சித்தர்கள் ஜீவசமாதித் தலங்களில் இருக்கும் சித்தரின் உச்சந்தலைக்குமேல்  இயங்கும் துவாதசாங்கச் சக்கரத்துக்கும் வானில் உள்ள நட்சத்திரம்,சூரிய சந்திர மற்றும் நவக்கிரகங்களின் இயக்கத்துக்கும், 12 ராசி மண்டலங்களுக்கும் உள்ள தொடர்பு ஒருபோதும் விலகுவதில்லை;எனவே தான் பிறந்த நட்சத்திரம்,ராசி,லக்னத்துக்கேற்ற ஜீவசமாதிகளுக்குச் சென்று  வழிபாடு செய்ய வேண்டும்.
பழனிக்கு மாலை போட வேண்டும் என்றோ,காவடி எடுக்க வேண்டும் என்றோ நீ நினைத்தால், பழனியில் நிர்விகல்ப சமாதியிலிருக்கும் போகர் சித்தர் நினைவில் நீ இருக்கிறாய் என்பது அதன் பொருள் ஆகும்.ஜீவசமாதியாய் இருக்கும் சித்தர் நினைவினால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.சமாதியில் இருக்கும் சித்தர் நினைத்தால் அவ்விடத்துக்குச் செல்ல முடியும்.
ஜாதகத்தில் தோஷம் இருந்தால் கூட வானியல் தொடர்பு கொண்டு சித்தர் சமாதித் தலங்களுக்குச் சென்று வருவதால் தோஷ விடுதலை கிடைக்கும் என்பது விஷ்ராந்தி யோக நிலையம் செய்த ஆராய்ச்சிகளால் விளங்கும்.
தற்சமயம்,கலிகாலத்தில் கர்மவினைகளின் பயனால் புத்திரதோஷம், திருமண தோஷம்,தொழில் தடை,தகுதியிருந்தும் வாழ இயலாமை, ஐஸ்வர்யத் தடை, பிணி,நோய்,விபத்துக்களால் அகால மரணம்,கலாச்சாரச் சீரழிவுகளால் சிக்கித் தவிக்கும் இளைய சமுதாயம் இவை எல்லாவற்றிற்கும் சித்தர் வழிபாடும்,வாழ்வியல் கலைகளாகிய யோகம்,தியானம் போன்றன அருமருந்தாகும்.சித்தர்கள் கண்ட அருந்தவ யோகத்தைப் பயின்று அருந்தவ யோகிகள் ஆவோம்.
ஒவ்வொரு துறையை எடுத்துக் கொண்டாலும்,அதில் ஜொலிப்பவர்கள் தொடர்ந்து ஜொலித்துக்கொண்டே இருப்பதும்; ஜொலித்துக்கொண்டே இருப்பவர்கள் அதலபாதாளத்தில் விழுந்துவிடுவதும் வானியலோடும்,சோதிடத்தோடும் ,சித்தர் மகான்களின் சாபங்களோடும் தொடர்புடையதுதான்.ஒரு சில குடும்பங்கள் ஆண் வாரிசு இல்லாமல் போவதற்கும்,மற்றும் தனிமனிதனின் சகல தோஷங்களுக்கும் காரணமாக இருப்பதும் வானியல்,சோதிடம்,கர்மா,சித்தர் சாபம் போன்ற இந்த நான்கு மட்டுமே!!
உதாரணமாக கோவையின் ஸ்ரீஅன்னபூர்ணா உணவகங்களும், சென்னையின் ஸ்ரீசரவணபவன் ஹோட்டல்களும்,சென்னை சில்க்ஸ் = சங்கிலித்தொடர் ஜவுளிக்கடைகளும்,அருப்புக் கோட்டையிலிருந்து விருதுநகர் மாவட்டத்தின் போக்குவரத்துத் துறையில் தனி முத்திரை பதிக்கும் ஸ்ரீஜெயவிலாஸ், மதுரையில் பிறந்து சென்னையில் வளர்ந்து ஆசியாவின் இருசக்கர வாகனச் சந்தையைக் கைப்பற்ற விஸ்வ ரூபமெடுக்கும் டி.வி.எஸ். என்று பல நிறுவனங்களின் தொழில்களைச் சொல்லலாம்.
குண்டலினி சக்தியை எழுப்பியவர்கள் மட்டுமே சோதிடத்தில் வல்லுநர்களாக இருக்க முடியும்.அவர்களால் மட்டுமே சூரியக் குடும்பத்தையும்,நட்சத்திரங்களையும், 12 ராசி வீடுகளையும் ஞானக்கண்ணால் காணமுடியும்.