புதன், 6 மே, 2015

நீங்கள் காலையில் எழுந்ததும், இறைவனிடம் கேட்க வேண்டியது இதுதான்.


* வீசும் காற்று இனிதாக இருக்கட்டும்.
* எல்லா மூலிகைகளும் தாவர ராஜ்யமும் எங்களுக்கு நன்மை பயப்பதாகட்டும்.
* இரவும் பகலும் இனிமையாக இருக்கட்டும்.
* இக்கிரகத்து மண் இனிதாய் இருக்கட்டும்.
* வானுலகமும், மூதாதையர்களும் எங்கள் மீது நேசம் கொண்டிருக்கட்டும்.
* எல்லா மரங்களிலும் இன்சுவை நிரம்பி இருக்கட்டும்.
* சூரியன் இதமாக இருக்கட்டும். அதன் ஒளிக்கதிர்கள் எங்களுக்கு அனுகூலமாக அமையட்டும்.
* மிருகங்கள் எல்லாம் எங்கள் அருமைக்கு உரியவையாகட்டும்.
* உணவு எங்களுக்கு நன்மை தருவதாக அமையட்டும்.
* நாங்கள் பேசும் பேச்சும் எண்ணங்களும் பிறருக்கு நன்மை தரும் விதத்தில் தேனென இனிக்கட்டும்.
* எங்கள் வாழ்வு தூயதாக, தெய்வீகமானதாக அமையட்டும். அது தேனென இனிக்கட்டும்.
இப்படி பிரார்த்திக்க வேண்டுமானால், மனதில் ஆன்மிக உணர்வு  துளிர் விட வேண்டும். ஆனால், தொழில் புரிவோர் அனைவரும் ஆன்மிகத்தை நடைமுறைக்கு ஒவ்வாதது என்று ஒதுக்குகிறார்கள். ஆன்மிகவாதிகளும் அப்படித்தான். அவர்கள் தொழில் செய்வோரைத் தாழ்வாக நோக்குகிறார்கள். இவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆன்மிகம் இதயம் என்றால், தொழில் என்பது கால்கள். இப்படித் தான் பழங்கால மக்கள் கருதினர். இந்த இரு நிலைகளும் இல்லாமல், ஒரு தனி மனிதனோ அல்லது சமுதாயமோ முழுமை பெற முடியாது. தொழில் மூலம் பொருள் சுகத்தைப் பெறலாம். ஆன்மிகத்தால் மனதிற்கு நன்மை கிடைக்கிறது. தொழில் செய்ய திறமை மட்டும் போதாது. ஒழுக்கமும், நேர்மையான நடத்தையும் இருந்தால் தான் அதில் முழு வெற்றி பெறலாம். இதைத் தருவது ஆன்மிகமே.
அதே நேரம், ஆன்மிகம் கீழ்மட்ட  மக்களை சென்றடைய என்ன வழி என்பதைச் சிந்திக்க வேண்டும். ஏழ்மையிலும் ஏழ்மையான மக்களிடம், அவர்களது அடிப்படைத் தேவைகளைப் பேணாமல், ஆன்மிகம் பற்றி பேசினால் அது அவர்களைச் சென்றடையாது. அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்யாமல், ஆன்மிகம் பற்றி பேசக் கூட முடியாது. அவர்களுக்கு பொருளாதார ஆதரவு தேவை.
முதலாளித்துவம் ஏழைகளை தமக்கேற்றாற் போல் பயன்படுத்திக் கொள்கிறது. சோஷலிசம் (பொதுநலக் கோட்பாடு) தொழிலதிபர்களின் ஆர்வத்தைக் குறைத்து விடுகிறது. இந்த இருதரப்பையும் இணைக்கும் பாலமாக இருப்பது தான் ஆன்மிகம். தொழிலாளர்களை இரக்க இதயத்துடன் பார்க்க முதலாளிகளுக்கும், ஏமாற்றாமல் புதிய வழிகளைக் கண்டு பிடித்து தான் சார்ந்த தொழிலை முன்னேற்றும் விதத்தில் செயல்பட தொழிலாளிகளுக்கும் பாடம் கற்றுத் தருவது ஆன்மிகம்.
ஆன்மிகத்தின் முக்கியத்துவம் இப்போது புரிகிறது தானே...

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்