திங்கள், 29 ஜூன், 2015

சதுரகிரி வரலாறு.....

சதுரகிரி இயற்கை வனங்களும், மூலிகைக் காடுகளும், நீர் நிலைகளும், விலங்குகளும், பறவைகளும், குகைகளும், கோயில்களும் நிறைந்த மலை, இதிகாசங்களிலும், புராணங்களிலும் இடம் பெற்றிருக்கும் ஆன்மீகச் சிறப்பும், பதினெண் சித்தர்களும், பற்பல ஞானிகளும், ரிஷிகளும் உருவமாய் வாழ்ந்த சிறப்பும், அருவமாய் உலவும் சிறப்பும் கொண்டிருக்கிறது, சதுரகிரி. கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் சுமார் 66 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரந்துள்ளது இந்த மலை.
அப்படியென்ன ஆன்மீக ஈர்ப்பு, என்கிறீர்களா? பக்தர்களை ஈர்க்கும் நம்பிக்கைகளில் ஒரு சில இதோ:
  • சிவபெருமான் – உமாதேவி திருமணத்தின்போது உலகை சமநிலையாக்க தென்புலம் வந்த அகத்தியர் சில காலம் மனம் விரும்பி சதுரகிரியில் தங்கி தவம் செய்தார். இறைவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பி வேண்டினார். இறைவனின் திருமணக் காட்சியை மீண்டும் ஒரு முறை சிவபெருமான் உமாதேவி சகிதம் நிகழ்த்திய இடம் சதுரகிரி. அத்தனைத் தெய்வங்களும் தேவாதி தேவர்களும் திருமணத்தை முன்னிட்டு ஒரு சேரக் காட்சி தந்த இடம் என்பதால், ‘பூலோக கைலாயம்‘ என அழைக்கப்படுகிறது.
  • அகத்தியர் சதுரகிரியிலிருந்த போது பூஜைக்காக ஒரு லிங்கத்தைப் பிரதிட்டை செய்தார். அகத்தியமாமுனியால் பிரதிட்டை செய்யப்பட்ட லிங்கமே சதுரகிரியில் மகாலிங்கம் சன்னதியில் உள்ளது.
  • சிவபெருமானே சித்தராக வடிவெடுத்து வந்து, பச்சைமால் என்ற பக்தருக்கும், சித்தர்களான சுந்தரானந்தருக்கும், சட்டைநாதருக்கும் காட்சி தந்து, சுயம்புலிங்கமாக வடிவெடுத்த இடம் சதுரகிரி. அந்த லிங்கமே மகாலிங்கமாக, மகாலிங்கம் சன்னதியில் வழிபடப்படுகிறது.
  • பார்வதி தேவி சிவபெருமானின் சரிபாதி ஆக, தவம் செய்த இடம் சதுரகிரி. அவளது தவத்தை தொடர்ந்து இருவரும் அர்த்த நாரீஸ்வரராகக் காட்சி பெற்றது இங்குதான். அன்னை தேவி பிரதிட்டை செய்த லிங்கமே சந்தன மகாலிங்கமாக இங்கு உள்ளது.
  • பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.
  • இலங்கைப் போரின் போது லட்சுமணனின் உயிரைக் காக்க அனுமன் எடுத்து வந்த சஞ்சீவி மலையின் ஒரு பாகம் சதுரகிரியில் மத்தியில் விழுந்து மூலிகை வனமானது. அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களை ஈர்த்தது இந்த மூலிகைகளே! மரணமிலாப் பெருவாழ்வு எனும் சித்தி நிலைக்கு இட்டுச் செல்லும் காயகல்ப மூலிகைகள் இங்கு உள்ளன.
  • மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை “சஞ்சீவி மலை‘ என்கின்றனர்.
  • ஆதிபராசக்தி, சப்த கன்னியர், காலாங்கிநாதர் போன்றோர் உருவாக்கிய நீர் வரத்துக்கள், தடாகங்கள் இன்றும் உள்ளன. இவற்றின் நீர் மூலிகைக் குணமும், தெய்வீகத் தன்மையும் கொண்டிருப்பதாகப் போற்றப்படுகிறது.
  • இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை
    உபயோகித்துள்ளார்கள்.
  • சிவனும் விஷ்ணுவும் வேறல்ல. அரியும் சிவனும் ஒன்றே என்று சிவபெருமான் ‘சங்கர நாராயணனாக‘ காட்சியளித்து, இரட்டை லிங்கமாகச் சதுரகிரியில் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
  • நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை
வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர். திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 66 ஆயிரம் ஏக்கர்.
சதுர்‘ என்றால் நான்கு. கிரி என்றால் மலை, நான்கு பக்கமும் சந்திரகிரி, வருணகிரி, குபேரகிரி, ஏமகிரி எனும் நான்கு மலைகளால் சூழப்பட்டும், தன்னுள் சிவகிரி, பிரம்மகிரி, விஷ்ணுகிரி, சித்திகிரி எனும் நான்கு மலைகளைக் கொண்டதாகவும் இருக்கிறது சதுரகிரி. கூடவே, மத்தியில் எண்ணில் அடங்கா மூலிகைகளைக் கொண்டிருக்கிற சஞ்சீவி மலையையும் கொண்டிருக்கிறது.
மலையின் அடிவாரத்திலிருந்து சுமார் 10 கி.மீ மலை ஏறினால் மலைமேலிருக்கும் மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் கோயில்களுக்குச் செல்லலாம். அங்கிருந்து மலை ஏறினால், தவசிப்பாறை என்றும் ஒருபுற மலை முகட்டுக்குச் செல்லலாம்.
சற்றுக் கடுமையான மலையேற்றம் தான். சீரற்ற படிகள், சறுக்கும் பாறைகள், ஒத்தையடிப் பாதைகள், கரடுமுரடான ஏற்ற இறக்கங்கள், செங்குத்தான வழுக்குப்பாறைகள், கரடியும், குரங்கும் பாம்பும் தொந்தரவு தருமோ என அச்சமூட்டும் காடுகள், நீரோடும் வழித்தடங்கள் போன்றவற்றை ஒருவித சாகச உணர்வுடன்தான் கடக்க வேண்டியிருக்கும்.
குடிக்கத் தண்ணீரும், உணவும் இடையில் கிடைப்பது அரிது. கையோடு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இரவுப் பயணம் ஆபத்து. மலை மேலே மின் வசதி கிடையாது. சூரிய சக்தி புண்ணியத்தில் கொஞ்ச நேரம் இருட்டை விரட்டலாம். இரவில் தங்க ஓரிரு பொது மண்டபங்கள் உண்டு. குளிப்பதும், கழிப்பதும் திறந்த வெளியில்தான். போதுமான வசதிகள் இல்லாத சூழல்.
மலைப் பயண நேரம் 5 மணி முதல் 8 மணி நேரம் வரை ஆகும். வயதானவர்கள், மூட்டுவலி, கால்வலி உள்ளவர்கள் தவழ்ந்தும், தடியுடனும், துணையுடனும் திண்டாட வேண்டியிருக்கும். ஆனால், இவ்வளவு சிரமங்களையும் மீறி மலை ஏறிவிட்டால் எக்கச்சக்கமான தன்னம்பிக்கையும், எல்லையில்லா மகிழ்ச்சிப் பெருக்கும் ஏற்பட்டுவிடும். நம்மைவிட, வயதானவர்கள் நூற்றுக்கணக்கில் கோயிலுக்கு வந்திருப்பார்கள். அமாவாசை, பௌர்ணமி தினங்களில் கூட்டம் ஆயிரக்கணக்கில் இருக்கும். நவராத்திரி தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நாள் கணக்கில் தங்கி இருப்பார்கள்.
மீண்டும் அடிவாரம் இறங்குவதும் கடினமான பயணம் தான். ஆனால், இறங்கியவர்கள் யாரைக் கேட்டாலும் அடுத்த முறையும் கண்டிப்பாக ஏறிப் பார்க்க வேண்டும் என்று ஆசை பொங்கச் சொல்வார்கள். தொடர்ந்து மாதம் தோறும் வருபவர்க்கும், இவ்விதம் ஐம்பது ஆண்டுகள் வரை வந்து கொண்டிருப்போரும் பல்லாயிரம் பேருக்கு மேலிருக்கும் என்பது நிஜம். அது தான் சதுரகிரி!
இயற்கை விரும்பிகளுக்கும், சூழலியலாளர்களுக்கும் கண்டிப்பாகச் சதுரகிரியைப் பிடிக்கும். மாசுபடாத இயற்கை, தூயகாற்று, அருவி நீர், தடாகநீர், மூலிகைக் காற்று வருவோரைச் சுண்டி இழுக்கும். ஆனால் இதற்காக வருபவர்கள் மிகக்குறைவே.
அதே சமயம் உண்மையான பக்தியும், ஆன்மீகத் தேடலும் உள்ளவர்களுக்கு சதுரகிரி ஒரு பூலோக கைலாயம், இப்படிப்பட்ட பக்தர்கள் கூட்டமே அதிகம் வருகிறது.
இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி. மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.
அல்லது, ஸ்ரீவில்லிபுத்தூர் -மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கிருஷ்ணன் கோவில் இங்கிருந்து இடப்பக்கம் பிரியும் சாலையில் சுமார் 15 கி.மீ பயணித்தால் வத்திராயிருப்பு வரும்.அங்கிருந்து 7 கி.மீ பயணித்தால் தாணிப்பாறையை அடையலாம்.இதுதான் சதுரகிரி அடிவாரம்.இதிலிருந்து சுமார் 10 கிலோ மீட்டர் கரடுமுரடான மலைப்பாதையில் நடந்து சென்றால் சதுரகிரி சுந்தரமஹாலிங்கம்,சந்தன மஹாலிங்கம் கோயிலை அடையலாம்.
அல்லது, மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் – செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி – கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி – அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது. அங்கிருந்து தாணிப் பாறைக்கு – மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.
திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும். ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.
மலைக்கு மேலே – சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க ” கஞ்சி மடம் ‘ உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ – நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்-திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு “சடதாரி‘ என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.
சிவபெருமான் அவனை தேற்றி, “நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,” என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி “மகாலிங்கம்’ என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும். மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.



இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.
இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலிமுனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும்அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.
கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.
இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்றுதூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.
“சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,”என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, “”நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,” என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், “”சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,” என்றார்.
வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை “பிலாவடி கருப்பர்’ என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.  தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5250 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் “மஞ்சள் ஊத்து’ தீர்த்தம் உள்ளது.
தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை “நவக் கிரக கல்‘ என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள “ஏசி’ பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் “வெள்ளைப்பிள்ளையார்’ பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.
பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை “பெரிய மகாலிங்கம்‘ என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
சுந்தரமூர்த்தி : கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை “கும்ப மலை’ என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் “சுந்தரமூர்த்தி லிங்கம்‘ எனப்படுகிறது. அருளை வழங்குவது “சுந்தரமகாலிங்கம்‘, பொருளை வழங்குவது “சுந்தரமூர்த்தி லிங்கம்’ என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.
பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து “அர்த்தநாரீஸ்வரர்‘ ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்.





இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.
இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள். 

லிங்க வடிவ அம்பிகை : சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் “ஆனந்தவல்லி’ என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.
சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்
சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் ‘சந்திர தீர்த்தம்’ இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.
கெளண்டின்னிய தீர்த்தம்
சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.  
கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ”பாவகரி நதி” என்னும் பெயரும் உண்டு.
சந்தன மகாலிங்கம் தீர்த்தம்
இச்சதுரகிரியின் மேல் ‘காளிவனம்’ என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.
இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய ‘திருமஞ்சனப் பொய்கை’ உண்டு.
காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட ‘பிரம்மதீர்த்தம்‘ ஒன்று சதுரகிரி மலைக் காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட ‘பொய்கைத் தீர்த்தம்”, ”பசுக்கிடைத் தீர்த்தம்”, ‘குளிராட்டித் தீர்த்தம்’ போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.  பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.
அபூர்வ மூலிகைகள் :
இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.
பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை
அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.
தவிர கோரக்க முனிவரால் ‘உதகம்‘ என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.
இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் ‘உதகம்’ என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.
விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக பயன்படுத்த வேண்டும்.
சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம்என்னும் மரம் உள்ளது.
இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.
அதேபோல் ‘ஏர் அழிஞ்ச மரம்‘ என்றொரு மரம் உண்டு. இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் வந்து ஒட்டிக்கொள்ளும்.
இந்த ‘ஏர் அழிஞ்ச மரத்தின்’ கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.
சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.
இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.
தவசி குகை செல்லும் வழியில் ஒரு குறிப்பிட்ட மரம் இருக்கு.அந்த மரத்தில் இருந்து வடியும் பால் ரத்த சிவப்பாக இருக்கிறது.அதன் கீழே தேங்கியிருக்கும் பால் ஆட்டு ரத்தம் கொட்டியது போல திகில் கிளப்பியது.மரத்தின் பெயர் என்ன தெரியுமா? ரத்த காட்டேரி மரம்.
தவசி குகையின் அருகில் மஞ்சள் நீர் நிறம்பிய சுனை இருக்கிறது.தங்கம் போல அந்த நீர் மினு மினுக்கிறது…தங்க பஸ்பம் போல…குடிச்சா வேலை செய்யுமோ.
இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் – ”மதி மயக்கி வனம்” என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள், மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். “மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து” என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.
இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் – சித்தர்கள், ரிஷிகள் – மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன.
வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் “கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் – மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.
உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் – நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால், இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை.
அருள்மிகு சுந்தர மகா லிங்கத்துக்கு ஆரோஹரா!

வியாழன், 18 ஜூன், 2015

காகபுசுண்டர் ஞானம் 80

கயிலாய மலையில் ஒருநாள் மும்மூர்த்திகளும் தேவர்களும்

கூடியிருக்கும் சமயத்தில் சிவபெருமானுக்குத் திடீரென்று ஒரு சந்தேகம்
எழுந்தது. “இந்த உலகம் எல்லாம் பிரளய காலத்தில் அழிந்து விட்ட பிறகு
எல்லோருக்கும் குருவான நமசிவாயம் எவ்விடத்தில் தங்கும்? பிரம்மா,
விஷ்ணு, ருத்திரன், மகேசுவரன், சதாசிவம் ஆகிய ஐவரும் எங்கே
இருப்பார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார்.
சிவபெருமானின் கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை. எல்லாப்
பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் விஷ்ணுவும் மௌனமாயிருந்தார்.
மார்க்கண்டேயனுக்கு ஆச்சரியம். விஷ்ணுவுக்குக் கூடவா விடை
தெரியவில்லை? மார்க்கண்டேயனின் பார்வையின் அர்த்தத்தைப் புரிந்து
கொண்ட விஷ்ணுவும், “உங்கள் கேள்விக்குப் பதில் சித்தர்களிடம்தான்
கிடைக்கும். குறிப்பாக புசுண்ட முனிவரைக் கேட்டால் தெரியும். அவரை
இங்கு அழைத்து வந்து கேட்ப தென்றால் வசிட்ட முனிவரைத்தான் அனுப்ப
வேண்டும்” என்றார்.
தேவர்களுக்கெல்லாம் ஒரே ஆச்சரியம். தேவர்களான தங்களால் யூகிக்க
முடியாத ஒன்றை சித்தர் ஒருவர் யூகித்துக் கூறுவார் என்பதை அவர்களால்
நம்ப முடியவில்லை. எதனால் நீர் இப்படிக் கூறுகின்றீர்? என்று அனைவரும்
விஷ்ணுவைக் கேட்டனர்.
பிரளய காலத்தில் எல்லாம் அழிந்து விட்ட நிலையில் எனக்கு ஏதும்
வேலையில்லாததால் நான் ஆலிலையின் மீது அறிதுயிலில் ஆழ்ந்திருந்தேன்.
என்னுடைய சக்கரம் வெகு வேகமாகச் சுழன்று கொண்டிருந்தது. அந்த
வேகத்தில் அதனைக் கட்டுப்படுத்துவது என்பது யாராலும் முடியாத காரியம்.
ஆனால் அப்போது அங்கு வந்த காகபுசுண்டர் எப்படியோ அந்தச்
சக்கரத்தை ஓடாமல் நிறுத்திவிட்டு அதைக் கடந்து சென்றார். அதனால்
அவர் எல்லாம் வல்லவர் என்பதை அறிந்தேன் என்றார் விஷ்ணு.

இப்படியெல்லாம் அறிந்தவர் என்று தேவர்களாலேயே ஒப்புக்
கொள்ளப்பட்ட இந்த காகபுசுண்டருக்கு எப்படி இந்தக் காரணப்பெயர்
ஏற்பட்டது என்பதற்கு போக முனிவர் விளக்கம் கூறுகின்றார்.

முன்பு ஒரு காலத்தில் சக்தி கணங்கள் மது உண்டு நடனமாடிக்
களித்திருக்கையில் அப்போது அங்கு சிந்திய மதுத்துளிகள் குடிநீரில்
கலந்துவிட, அந்த நீரினைப் பருகிய தேவலோகத்து அன்னங்களும்
மனமயக்கத்துடன் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தன. இந்த மதுக்களிப்பு
நடனத்தை சிவனும் பார்வதியும் கண்டு மகிழ்ந்திருக்கும் வேளையில்
மகிழ்ச்சியின் எல்லையில் சிவகணமானது காகத்தின் உருவில் அன்னத்தைச்
சேர அன்னம் அப்போதே கர்ப்பமுற்று இருபத்தொரு முட்டைகள் இட,
இருபது அன்னக் குஞ்சுகளையும் ஒரு காகத்தையும் பொரித்தது. இருபது
அன்னங்களும் அநேக நாட்கள் வாழ்ந்து முக்தியடைய, சிவகலையால் பிறந்த
காகம் மட்டும் அழியாமல் இருக்கும் பேறு பெற்றது. அந்தக் காகமே இந்த
காகபுசுண்டர் என்று சித்தர் பாடல்கள் இவர் வரலாற்றைத் தெரிவிக்கின்றன.

வர ரிஷியின் சாபத்தால் உலகத்தில் சந்திர குலம் விளங்க ஒரு
வெள்ளாட்டின் (விதவை) வயிற்றில் பிறந்தவர் இவர் என்றும், பிரளய
காலத்தில் காக்கை வடிவெடுத்து அப்பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைத்து
அநேக கோடி வருடங்கள் ஜீவித்து இருந்தாரென்றும் ஒரு வரலாறு
தெரிவிக்கின்றது.
காகபுசுண்டர் அன்னத்தின் முட்டையிலிருந்து பிறந்தவரா?
வெள்ளாட்டின் பிள்ளையாகப் பிறந்தவரா? என்னும் ‘ரிஷிமூலம்’ இன்னும்
உறுதிப்படுத்த முடியாத தேவரகசியம்.
இவர் தமிழ் நாட்டில் பிறந்தவர். இவர் உருவம் கருமையாக இருக்கலாம்;
எதையும் கூர்ந்து பார்த்து உண்மை காணும் தன்மையுள்ளவராய் இருக்கலாம்.
உண்மைகளைக் காணப் பலவிடங்களிலும் அலைந்து திரிந்தவராயிருந்த
மையால் இவர் காகபுசுண்டர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம் என்று சாமி
சிதம்பரனார் கூறுகின்றார்.

இவர் காக்கை வடிவில் இருந்து பல இடங்களிலும் சுற்றித் திரிந்தமைக்கு
இவர் பாடல்களிலேயே ஆதாரம் உள்ளது.
“காகம் என்ற ரூபமாய் இருந்து கொண்டு
காரணங்கள் அத்தனையுமே கருவாய்ப் பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப் பார்க்க
வெகுதூரம் சுற்றிஇன்னும் விபரம் காணேன்”

என்ற வரிகளால் இஃது உறுதிப்படுகின்றது.
தன்னுள்ளே இறைவன் கோயில் கொண்டுள்ளதை யறியாமல் வீணே
இந்த மனிதர்களெல்லாம் வெளியில் பல தெய்வங்கள் உண்டு என்று
அலைந்து திரிகின்றனரே என்பதை,
“தானென்ற பிரமத்தை யடுத்திடாமல்
தரணியில் தெய்வமடா அனந்த மென்றும்” (24)
வரிகளில் சுட்டிக்காட்டி,

“முத்தியடா மந்திரத்தை நினைக்கும்போது
மோசமடா மனந்தானும் இரண்டாய்ப் போகும்
சக்தியடா மனந்தானே யோக மாகத்
தனித்திருந்து நித்திரையைத் தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற் புகுந்து கொண்டாற்
பூலோக மெல்லந்தான் பணியு முன்னே;
எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்
ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந் தானே”
என்று வாசியோக மார்க்கத்தை இறைவனை அடையும் மார்க்கமாக
அறிமுகப்படுத்துகின்றார்.

“அறியலாம் மனந்தானே உயிர்தா னாகும்
அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ தாக்கி
விட்டகுறை தொட்டகுறை விதியைப் பார்த்துக்
குறியான குண்டலியா மண்ட வுச்சி
கூறுகிறேன் முக்கோண நிலைதாமே” (26)

என்று வாசியோகத்தின் மூலம் குண்டலி யோகம் செய்து இறைவனைக்
காணும் மார்க்கத்தைப் போதிக்கின்றார். மேலும்,

“தாமென்ற உலகத்தில் மனித ரோடே
சஞ்சாரஞ் செய்யாற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே
காமப்பேய் கொண்டவனோ டிணங்கிடாதே
காரணத்தைக் கண்டு விளையாட்டு வாயே”

“விளையாடிக் கருநெல்லி பறித்தே உண்ணு
வேகாத தலையாகும் விரும்பிப்பாரு
மலையாமல் வொண்சாரை பிடித்தே யுண்ணு
மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்
அலையாமல் சோதியதன் பாலை யுண்ணே
அக்கினியாம் கம்பமடா சுழுமுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
கபடமற்ற தேகமடா கண்டு பாரே” (28)

இது மனம் காமவயப்படாமல் வாசியோகம் மூலம் குண்டலி எழுப்பி
நித்திய தேகம் பெறும் முறையை உபதேசித்தது ஆகும்.
இவர் கூறும் இந்த அக்கினி கம்பம் சுழுமுனை நாடியாகும். இதனை,
“நேரப்பா நெடுந்தூரம் போகும்போது
நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக் கண்டேன்;
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும்
வெளியொன்றுந் தெரியாம லிருக்குந்தானே”
என்று சுழுமுனைக்கு விளக்கம் தருகின்றார். இந்த சுழுமுனையின் முடிவில்
மனோன்மணி வீற்றிருக்கும் நிலையை,
“இருக்குமடா எங்குமொன்றாய் அக்கினிக் கம்பம்
என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடன் பெண்ணரசி யொன்றி நிற்பாள்” (44)
என்று கூறுகின்றார்.

வாசியோகமே காயசித்தி உபாயமென்பதை,
“சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா
சத்தியமா யண்டத்திற் செல்லும் போது
போற்றுகிற அக்கினியும் பிரவேசித்துப்
புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத மாகும்
மாற்றிலையும் அதிகமடா வுன்றன் தேகம்
மைந்தனே அபுரூப மாகுமப்பா
வாற்றியே நிழற் சாய்கை யற்றுப் போகும்
வலுத்ததடா காயசித்தி யாச்சப் பாரே” (55)

இவர் உலகில் நிலவும் சாதி வேற்றுமையைத் தம் பாடல்களில்
வெகுவாகக் கண்டித்துள்ளார். குருவைத் தேர்ந்தெடுப்பதில் மிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறும் இவர் போலி குருவானவர்
உண்மையான பிரமத்தை அறியாதவர்கள் என்றும், அவர்கள் வெறும் வேத
ரகசியங்களை அறிந்ததினால் மட்டும் மெய்ஞானியராக மாட்டார்கள் என்றும்,
வெறும் காவியுடையும் யோக தண்டம் என்னும் முககோல் காலில் பாத குறடு
இவைகள் மட்டும் ஒருவரைக் குருவாக உருவகப்படுத்த இயலாது. இவர்கள்
எல்லாம் ஆணவம் கொண்ட பிறர் அஞ்சத்தக்க வேடதாரிகள் என்று கூறி,
இத்தகைய குருமார்கள் பணம் பறிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்
என்பார் காகபுசுண்டர்.

“குறியென்ற உலகத்தில் குருக்கள் தானும்
கொடிய மறை வேதம் எலாம் கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
அகந்தையாய்ப் பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக் காவிபூண்டு
வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும் ஏந்திப்
பார்தனிலே குறடு இட்டு நடப்பான் பாரே”
"பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க உபதேசம் பகர்வோம் என்பார்”
சித்தர்களுக்குச் சாதியும் மதமும் இல்லை என்பதை காகபுசுண்டர் தம்
பாடலில் எடுத்துக் கூறுகின்றார்.

“சாண் அப்பா சாதிகுலம் எங்கட்கில்லை
கருத்துடனே என்குலம் சுக்கிலந்தான் மைந்தா”

இவர் அத்வைத கொள்கையில் உறுதியுடையவர் என்பது இவரது
ஞானப்பாடல்களால் புலனாகிறது. சித்தர்கள் பெரும்பாலும் அத்வைதக்
கொள்கையினர் என்பது ஆய்வாளர் முடிவு. ஜீவான்மாவும் பரமான்மாவும்
வேறல்ல. இரண்டும் ஒன்றேதான். இதை உணர்வதுதான் மெய்ஞானம்.
தன்னையும் பரமத்தையும் ஒன்றாக அறிந்து சமாதி நிட்டையில் இருப்பது
தான் ஜீவன் முக்தி நிலை என்றும், இதுவே சிவோகம் பாவனை என்றும்,
பரமான்மா என்பது சூட்சுமப் பொருள்; அதாவது கண்ணில் காண
முடியாத சூட்சுமப் பொருள் என்றும் அதைக் கண்ணால் காண முடிகின்ற
தூலப் பொருளில் தான் அறிய முடியும் என்றும் அதனால் நீ பரமான்மாவைக்
காண வேண்டுமானால் உன் உடம்பிலேயே அதனை அறிந்து கொள்ள
வேண்டும்.
இந்த உண்மையை உணர்ந்துகொள்ள வேண்டும் என்றால், எள்ளுக்குள்
எண்ணெய் அடங்கியிருக்கும் தன்மையையும் ஒரு சிறிய விதையினுள் பெரிய
மரம் ஒன்று அடங்கியிருக்கும் சூட்சுமத்தையும் பசுவின் பாலிலே நெய்
கலந்திருக்கின்ற தன்மையையும் பூவினுள்வாசனை கலந்திருக்கின்ற நிறம்
கலந்திருக்கின்ற உத்தியையும், மயில் முட்டையில் அழகான பலவண்ண
தோகை ஒளிந்திருக்கின்ற ரகசியத்தையும் நீ உணர்ந்து கொள்வாயானால்
உன்னுள் இறைவன் உறைந்து இருக்கும் இரகசியத்தை நீ அறிந்து கொள்வாய்.
அகங்காரம் காரணமாக இதை மறந்து இதைக் கண்டறிவதற்கான
சாதனத்தையும் நீ மறந்து விடுவாயானால் உனக்கு அபரோட்ச ஞானம்
கிட்டாது. பரமாத்மாவுடன் ஒன்று மட்டும் முக்தி நிலையும் உனக்குக்
கிட்டாது என்கிறார் காகபுசுண்டர்.

“வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும்
வித்தனிடம் அடங்கி நின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும்
கன்று ஆவின் பாலிலே நெய்யைப் போலும்
தோணுமயில் முட்டையின் மேல் வர்ணம் போலும்
தூலம் அதி சூட்சுமம்தான் துலங்கி நிற்கும்
ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால்
அபரோட்ச ஞானம், முத்தி அரிது தானே”

காகபுசுண்டரின் ஞானப்பாடல் அனைத்துமே அந்தாதித் தொடையில்
அழகுறக் காணப்படுகின்றது. காகபுசுண்டர் உபநிடதம் என்ற தலைப்பிலான
மூன்று பாடல் தொகுப்பும் குறள் வெண்பா தொகுப்பு ஒன்றும் சித்தர் பாடல்
தொகுப்பில் காகபுசுண்டர் பாடியனவாகக் காணப்படுகின்றன.

யோகம் அறுபத்து நான்கு என்பதை,
“அறுபத்து நால்யோக மவ்வளவுந் தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்”
என்ற குறளிலும் சித்தர் பதினெண்மர் என்பதை,
“சித்தர் பதினெண்மர் செய்கையிற் றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்”
என்ற குறளிலும் புலப்படும் இவர் இப்பதினாறு பாடல் தொகுதியை,
“யோகமுடன் கற்ப முரைத்தேனீ ரெட்டினில்
வேகமுடன் கண்டுஉணரு வீர்”
என்று கூறி முடிக்கின்றார்.

புதன், 17 ஜூன், 2015

சிவலிங்கத்தின் அர்த்தம்....!!!


ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு விதமாக சிவலிங்கத்தின் அர்த்தம் கூறுவார்கள் .

நாம் வாசியோகத்தின் மூலமாக விந்துவை சக்கரங்களின் வழியாக சுழிமுனைக்கு ஏற்றி அது நாசி துவாரம் வழியாக உள்நாக்கில் இறங்கும் . இந்த இறங்கும் திரவமே ரசமணி ஆகும் . எப்படி ஆவுடயார் பாகத்தில் லிங்கபாகத்தை மருந்து சாத்தி இணைத்து பின்பு சிவபெருமானாக பார்க்கிறோமோ ,அதை போலவே இந்த திரவமானது உள்நாக்கின் வலியாக இறங்கி பெருநாக்குடன் இணைகிறது .அப்போது நாம் சிவனாகவே மாறுகிறோம் .இதுவே வாசியோகத்தின் இறுதிகட்டம் .
எப்படி சிவலிங்கம் மூன்று பாகமாகப்  பிரிக்கப்படுகிறதோ அதாவது மேல் பக்கம் சிவன் ,நடுப் பக்கம் விஷ்ணு ,அடிப் பக்கம் பிரம்மா .என்று சிவலிங்கத்தை கூறுவர் .அதை போலவே நம்முடைய மூலாதாரம் பல உயிர்களை உண்டாக்கும் சக்தி உடையது அதனால் பிரம்மா என்றும், திருவேணி சங்கமம் என்று சொல்லப்படும் மார்புப் பகுதியில் நம் உடலை காக்கின்ற இதயம் இருப்பதால் நம்மை காக்கின்ற விஷ்ணு இருக்கும் இடமாக கருதுகிறோம் . உடலின் முக்கியமான இடமான மூளை இருப்பதாலும் ,வாசி யோகத்தின் முடிவிடம் என்பதாலும் முக்கன்னனான சிவபெருமனை தலை பாகத்திற்க்கு வைத்துள்ளோம் . அதனால் தான் கபாலம் வழியாக உயிர் பிரிந்தால் முக்தி என்று புராணம் கூறுகிறது . நன்றாகப் பாருங்கள் நமது பெருநாக்கு ஆவுடையார் பாகம் போலவும் ,சிறு நாக்கு லிங்க பாகம் போலவும் இருப்பதைக் காணலாம் .இதை என்று நாம் இணைக்கிறோமோ அன்று நாம் சிவனாகவே மாறி விடுவோம் . மற்ற படி ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் இணைந்ததே சிவலிங்கம் என்றுகூறுவர் .அது தவறு.
ஆதியும்அந்தமும் இல்லாத அருட்பெருஞ்சோதியாகிய இறைவன், உயிர்கள்( ஆன்மாக்கள் ) உய்வு பெற வேண்டும் என்பதற்காக மூன்று விதமான வடிவங்களை எடுத்துக் கொண்டு வந்து, நமக்கு அருள்செய்கின்றான்.
அவ் வடிவங்கள்,
அருவம் - சிவம் - அதிசூக்குமம் - கண்ணுக்கு புலனாகாது- >இது நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
உருவம் - மகேசுவரன் - தூலம் - கண்ணுக்குப் புலப்படும்-இது சகளத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
அருவுருவம் - சதாசிவன் - சூக்குமம் - வடிவம் இல்லை-இது சகள நிட்களத் திருமேனி எனவும் சொல்லப்படும்.
இதில் அருவம் - கண்ணுக்கு புலனாகாது, உருவம் - உமா மகேசுவரர், தட்சிணா மூர்த்தி, நடராசர்– போன்றவை. இந்த உருவத் திருமேனிகள் அறுபத்து நான்கு ( 64 ) வகையாக உள்ளதாகஆகமங்கள் கூறுகின்றன,
அதிலும் சிறப்பாக இருபத்தி ஐந்து(25)வடிவங்கள்-மகேசுவர மூர்த்தங்கள் என்றுசொல்லப்படுகின்றன.
மூன்றாவதாக இருக்கக் கூடிய அருவுருவத் திருமேனியே -சிவலிங்கம் எனப்படும்.
" இலிங்கம்" - என்பதற்கு குறி என்பது பொருள்," குறி " - என்றால் = ஒரு அடையாளம்
ஆக காண முடியாத இறைவனை காணுவதற்கான அடையாளமேசிவலிங்கம் எனப்படும்.
சிவலிங்கம்= சிவ + லிம் + கம்
சிவம் – இறைவர்லிம் - அண்ட சராசரங்கள் அனைத்தும் ஒடுங்கும் இடம், கம் -ஒடுங்கிய அப்பொருள்கள் ( சராசரங்கள் ) மீண்டும் தோன்றும் இடம்,
ஆக அண்ட சராசரங்களையும் படைத்தும் அழித்தும்அருளவும்வல்ல வடிவமே சிவலிங்கம் எனப்படும், சிவலிங்கத்தின்அடிப்பாகம் - நாற்கோண வடிவினதாய் இருக்கும் -இது பிரம தத்துவம்
சிவலிங்கத்தின் நடுப்பாகம் - எண்கோண வடிவினதாய்இருக்கும் -இது விஷ்னு தத்துவம் ( இது ஆவுடை எனப்படும் )
சிவலிங்கத்தின் மேல் பாகம் - நீண்ட வட்ட வடிவினதாய்இருக்கும் -இது சிவ தத்துவம் ( இது பாணம் எனப்படும் )
இந்த பாணத்தின் அடிப் பாகத்தில் - உருத்திரனும், இந்த பாணத்தின் நடுப் பாகத்தில் - ஈசுவரனும்,
இந்த பாணத்தின் மேல் பாகத்தில் - சதாசிவனும்,இருக்கிறார்கள்.
இந்த சிவலிங்கம் என்பது இரண்டு வகைப்படும், அவை,
1. பரார்த்தலிங்கம்-( திருக்கோயில்களில் அனைவரும் வழிபடத் தக்க வகையிலே கருவறையில்எழுந்தருளியிருப்பது )
2. ஆன்மார்த்தலிங்கம் அல்லது இஷ்ட லிங்கம்-( விரும்புகின்ற அன்பர்கள் முறையான தீக்கை பெற்றுஇல்லத்தில் வைத்து பூசிப்பது )
விஞ்ஞானிகள் அணுவை ( எலக்ட்ரான் ) ஆராய்ச்சி செய்தபோது,அந்த அணுவானது பச்சை நிறமான ஒரு வட்ட வடிவமாகவும்,அதன் மீது ஒரு சோதியுமாக காட்சி தந்ததாககுறிப்பிட்டுள்ளார்கள்,இந்தபச்சை வடிவம் ஆவுடையாகவும் + அதன் மீதிருந்த சோதி இலிங்கமாகவும் காட்சியளித்ததுஎன்பது விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி பூர்வமான உண்மை.இத்தகையை அற்புதமான இலிங்கவடிவத்தை, தமது ஞானக் கண்ணால் கண்டதெய்வச் சேக்கிழார் பெருமான்பெரிய புராணத்தில் ,
..
காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ் குறியாம் சிவலிங்கம்
நாணாது நேடிய மால் நான்முகனும் காண நடுச்
சேணாரும் தழல் பிழம்பாய் தோன்றியது தெளிந்தாராய்.
- எம்பிரான் சாக்கிய நாயனார் புராணம் : 8
என்று குறிப்பிட்டு அருளியிருப்பதை சிந்தித்து வியக்கலாம்.
ஆக நம்பொருட்டு இறைவன் எடுத்து அருளார்ந்த நிலையிலே திருக்கோயில்களில்வீற்றிருக்கும் இலிங்கத் திருமேனியை தரிசிப்போம்.. உய்வு பெறுவோம்.

செவ்வாய், 16 ஜூன், 2015

புராணம் ஒரு அறிமுகம்!

புராணம் என்பது சுருக்கமாக உள்ள வேதங்களை தெளிவாக விரிவாக விளக்கமாக எடுத்துக் கூறுவதே என பெரியவர் ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள் கூறுகிறார். அதாவது சின்னஞ்சிறியதாக இருப்பதை பூதக்கண்ணாடி நன்றாகப் பெரிசு பண்ணிக் காட்டுகிறதல்லவா? இம்மாதிரி வேதத்தில் சுருக்கமாக, சின்னச் சின்னதாகப் போட்டிருக்கிற தர்ம விதிகளை கதைகள் மூலம் பெரிசு பண்ணிக் காட்டுவதுதான் புராணம். ஒன்றைச் சுருக்கமாகச் சொன்னால் அது மனஸில் ஆழப் பதியாமல் போய் விடலாம். அதையே சுவாரஸ்யமான கதையாக விஸ்தாரம் பண்ணிச் சொன்னால் நன்றாக மனசில் பதியும். ஸத்யம் வத (உண்மையே பேசு) என்று மட்டும் வேதம் சொல்கிறது. அப்படிப் பேசுவதால் எத்தனை பெருமை ஏற்படுகிறது என்பதை ஹரிச்சந்திரன் கதை பல அத்யாயங்களில் விஸ்தாரமாகச் சொல்கிறது. தர்மம் சர (அறத்தைப் பின்பற்று) என்று இரண்டு வார்த்தையில் வேதம் சொன்னதை நீள நெடுக மஹாபாரதத்தில் தர்மபுத்திரரின் கதையாகச் சொல்லியிருக்கிறது. மாத்ரு தேவோ பவ. பித்ரு தேவோ பவ வாக்குக்கு ஸ்ரீராம சரித்ரம் பூதக் கண்ணாடியாய் இருக்கிறது. அடக்கம், பொறுமை, தயை, கற்பு முதலான அநேக தர்மங்களை வேதத்தில் கட்டளையிட்டுள்ளவற்றை புராண புருஷர்களும், புண்ய ஸ்திரீகளும் தங்களுடைய சரித்திரத்தின் மூலம் நன்றாகப் பிரகாசிக்கும்படி செய்திருக்கிறார்கள். அவற்றைப் படிப்பதாலும், கேட்பதாலும் இந்த தர்மங்களில் நமக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டாகிறது.
புராணங்கள் தோன்றிய காலம்: புராணங்கள் பல உண்டு. அவற்றில் மகா புராணங்களையே பதினெண் புராணங்கள் என்று கூறுவர். வேதங்கள், இதிகாசங்கள் ஆகியவற்றில் உள்ள உட்பொருளை சற்றுக் கற்பனையும் கலந்து யாவரும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய கதை வடிவில் உள்ளவை புராணங்கள். புராண என்ற சொல்லுக்கு மிகப் பழைமையானது என்ற பொருள் உண்டு. புராணங்கள் எழுதப் பெற்ற காலத்தைக் கணக்கிட்டுக் கூறுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனவே புராணங்கள் கூறப்பட்ட காலத்தைக் துள்ளியமாகக் கணித்துக் கூறுவது இன்றளவும் இயலாததாகவே உள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தில் தோன்றிய நான்கு வேதங்களும் பதினெட்டுப் புராணங்களும் மிகவும் பழமையானவை. உலக அளவில் மிகவும் பழமையான நூல்களாக இவை கருதப் படுகின்றன. வேதவியாசர் வாழ்ந்த காலத்தைக் கருத்திற் கொண்டு, புராணங்களின் காலம் கி.மு.6 அல்லது கி.மு. 7ஆம் நூற்றாண்டு என்று சமய நூல் விற்பன்னர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
இந்து சமயத்தின் பொற்காலம்: கி.பி. 300-600 காலகட்டங்களில் வடநாட்டை ஆண்ட குப்தர்கள் வடமொழியை நன்கு போற்றி வளர்த்துள்ளனர். இந்து சமயமும் வடமொழி இலக்கியமும் புராணங்களும் நன்கு வளர்ச்சி பெற்றன. இவர்கள் காலத்தில் வடமொழியிலுள்ள தொன்மையான புராணங்கள் ஒழுங்குபடுத்தித் தொகுக்கப் பெற்றன என்பர். அதனால் குப்தர்கள் காலத்தை இந்து சமயத்தின் பொற்காலம் என்று அழைக்கின்றனர். எனவே வடமொழியில் புராணங்கள் தோன்றிய காலம் கி.பி.300 க்கும் முற்பட்டதாகக் கருத இயலும்.
கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி: திருப்பூவணப் புராணத்தில், சுச்சோதி தீர்த்த யாத்திரைச் சருக்கம், சுச்சோதி பிதிர்களை முத்தியடைவித்த சருக்கம், மற்றும் நளன் கலிமோசனச் சருக்கம் ஆகிய சருக்கங்கள் பாடப்பெற்றுள்ளன. இதனால், திருப்பூவணப் புராணம் அடங்கிய பிரமகைவர்த்த புராணம் எழுதப்பட்ட காலம், சுச்சோதி மற்றும் நளன் காலத்திற்குப் பிற்பட்ட காலம் என்பது உறுதி.
திருப்பூவணப் புராணத்தில் நளன்கலிமோசனச் சருக்கத்திலே,
மேவுமந்தமிகுந்திரையாயுக
மோவில்பல்புகழோங்குநளன்றனக்
கியாவுநல்கியிருங் கலி தீர்த்தருள்
பூவணேசன்பொற்கோயில்புகுந்தனன் (பாடல் 1325)
என்று கூறப்பட்டுள்ளது. எனவே கலியுகம் தோன்றிய பின்னரே நளன் ஆட்சி செய்தான் என்பதும், அவனது ஆட்சிக்காலத்திற்குப் பிறகே பிரமகைவர்த்த புராணக்கதைகள் கூறப்பட்டுள்ளன என்பதும் உறுதி. கலியுகம் தோன்றி 5108 ஆண்டுகள் ஆகின்றன. எனவே பிரமகைவர்த்த புராணம் எழுதப் பெற்ற காலம் (கலி5108 கி.மு.2008 3100) கி.மு.3100க்குப் பிற்பட்டகாலம் எனத் திருப்பூவணப் புராணத்தின் வழியாக அறியமுடிகிறது. இந்நூல் பல்வேறு வகைகளில் கம்ப இராமாயணத்துடன் ஒப்பு நோக்கிப் பார்க்கப்படுகிறது.
இறைவன் குறித்த புராணங்கள்: நைமிசாரண்யத்தில் சூதர் சொன்ன கதைகளை வியாசர் புராணங்களாகத் தொகுத்தார் என்பது ஐதீகம். வியாசரால் தொகுக்கப்பட்ட புராணங்கள் பதினெட்டு. அந்தப் பதினெண் புராணங்களும், சத்துவம், ராஜஸம், தாமசம் ஆகிய முக்குணங்களுக்கு உரியவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இதில்
சத்துவ குணப் புராணங்கள் விஷ்ணுவைப் புகழ்கின்றன. அவையாவன: விஷ்ணுபுராணம், பாகவத புராணம், நாரதீய புராணம், கருட புராணம், மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம், பத்மபுராணம், வராக புராணம், வாமன புராணம். ராஜஸ குண புராணங்கள் பிரம்மாவைப் புகழ்கின்றன. அவையாவன: பிரம்ம புராணம், பிரமாண்ட புராணம், பிரம்ம வைவர்த்த புராணம், பவிஷ்ய புராணம், வாமன புராணம். தாமஸ குண புராணங்கள் சிவனைப் போற்றுகின்றன. அவையாவன: சிவபுராணம், லிங்கபுராணம், ஸ்கந்த புராணம், மார்க்கண்டேய புராணம், அக்கினி புராணம், மத்சய புராணம், கூர்ம புராணம் முதலியன.
வேதத்தில் உள்ள தர்மவிதிகள் படிப்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் சிரமமாக இருக்கும் . அதை பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில், கதைகளாக எழுதினார்கள். அவையே புராணங்கள். வேதத்தின் கண்ணாடி என்று புராணங்களைச் சிறப்பிப்பர். புரா என்றால் முற்காலத்தில் நடந்தது என பொருள்.வேதங்களைப் போலவே புராணங்களும் பிரம்மாவிடம் இருந்து வெளிப்பட்டதாக சாந்தோக்ய உபநிஷத், மத்ஸ்ய புராணங்கள் கூறுகின்றன. மொத்தம் 18 புராணங்கள் உள்ளன. 18 புராணங்களிலும் 5,09, 500 ஸ்லோகங்கள் உள்ளன. இதில் ஸ்கந்த புராணம் பெரியது. 1,81,000 ஸ்லோகங்கள் கொண்டது. மார்க்கண்டேய புராணம் சிறியது. 9000 ஸ்லோகங்களே உள்ளன.
வேதங்களின் அங்கங்களாக உள்ள பிராம்மணங்களில் கூட புராணங்களைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. நான்கு வேதங்களையும் தொகுத்த வேதவியாசரே புராணங்களையும் தொகுத்துக் கொடுத்துள்ளார். திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் ஆகிய மூவரும் உருவாகக் காரணமாக இருந்த வேதவியாசரே அவர்களின் உண்மை வரலாற்றை உடனிருந்து மகாபாரதம் என்ற இதிகாசமாக இயற்றியதுடன் ஸ்ரீமத் பாகவத புராணம் என்பதையும் இயற்றியுள்ளார். புராணங்களில் 18 பெரிய புராணங்களும் 18 சிறிய உபபுராணங்களும் இருக்கின்றன. பதினெட்டுப் பெரிய புராணங்களைப் பற்றிய விவரங்களை இனி பார்ப்போம்.
மற்ற புராணங்கள்: 1.அக்னி புராணம். 2.வாயு புராணம். 3.பவிஷ்ய புராணம். 4.நாரதீய புராணம். 5.ஸ்காந்தம் (கந்த புராணம்). 6.மார்க்கண்டேய புராணம்.
பிரம்ம புராணம் : பிரம்மன் தட்சப் பிரஜாபதிக்கு விவரிப்பதாக உள்ள இப்புராணத்தில் 25,000 ஸ்லோகங்கள் உள்ளன.
விஷ்ணு புராணம் : இது மிகவும் பழைமையானது. ஆறு காண்டங்களையும், ஒவ்வொரு காண்டத்திலும் ஐந்து பெரும் பிரிவுகளையும் கொண்டது. பராசர மகரிஷி, மைத்ரேயருக்கு உபதேசம் செய்ததே விஷ்ணு புராணமாகும்.
மத்ஸ்ய புராணம் : விஷ்ணுவின் முதலாவது அவதாரமான மத்ஸ்யம் (மீன்) தன்னைக் குறித்து மனுவிடம் விவரிப்பதாக உள்ளது இப்புராணம். பதிமூன்றாயிரம் ஸ்லோகங்களை உள்ளடக்கிய இப்புராணம் பல மன்னர்களின் வரலாறுகளைக் கதைபோல விவரிக்கிறது.
கூர்ம புராணம் : விஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்மம் (ஆமை) இந்திரத்யும்னன் என்று மன்னனிடம் விவரிப்பது போல அமைந்துள்ளது. இதில் எட்டாயிரம் ஸ்லோகங்கள் உள்ளன. இப் புராணத்தில் தான் முதன் முதலாக ஜம்புஸ்த்வபம் என்பதாக நமது பரதக்கண்டத்தின் பூகோள அமைப்பு விவரிக்கப்படுகிறது.
வராஹ புராணம் : விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்தை பதினான்காயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம்.
வாமன புராணம் : பத்தாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் வாமன அவதார வரலாற்றை மட்டுமல்லாது பரமேஸ்வரன்பார்வதி ஆகியோரின் திருமண வரலாற்றையும் கூட விரிவாக விவரிக்கிறது.
கருட புராணம் : மகாவிஷ்ணுவானவர், தமது வாகனமாகிய கருடனுக்கு எட்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கும் செய்திகளே இப்புராணம். இதில் மருத்துவம், வான் ஆராய்ச்சி, மரணத்திற்குப் பின் மனிதர்கள் அடையும் நிலைகள் ஆகியவையும் விளக்கப்படுகின்றன.
ஸ்ரீமத் பாகவத புராணம் : வியாசரே எழுதியது. மகாபாரதத்தில் முழுமையாக இடம் பெறாத ஸ்ரீகிருஷ்ணரின் முழு வரலாறும், விஷ்ணுவின் பிற அவதாரங்கள் குறித்த செய்திகளும், பன்னிரண்டு காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு பதினெட்டாயிரம் ஸ்லோகங்களாக விவரிக்கப்பட்டுள்ளன.
லிங்க புராணம் : சிவபெருமானைக் குறித்தும் அவரது 28 வடிவங்களைப் பற்றியும் பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களில் விவரிக்கிறது இப்புராணம். லிங்க வழிபாட்டின் தோற்றமும், காரணமும், சிவபெருமானின் அவதார லீலைகளும் இதில் இடம்பெற்றுள்ளன.
பத்ம புராணம் : ஆறு காண்டங்களில் 55,000 ஸ்லோகங்களைக் கொண்ட பெரிய புராணம் இது. பிரம்மனின் பத்மாசனம் விவரிக்கப் படுவதால் இது பத்ம புராணம் என்று பெயர் பெற்றது.
பிரம்மவைவர்த்த புராணம் : பிரம்மகாண்டம், ப்ரக்ருதி காண்டம், கணேச காண்டம், கிருஷ்ண ஜன்ம காண்டம் ஆகிய பிரிவுகளுடன் பதினெட்டாயிரம் ஸ்லோகங்கள் கொண்டது. இதில் உள்ள கணேச காண்டம் என்ற பகுதிதான் விநாயக புராணம் என்ற உப புராணமாக பின்னர் உருவானது. “கிருஷ்ண ஜன்ம காண்டம்” என்ற பகுதிகளில் உள்ள தகவல்களை ஸ்ரீமத் பாகவத புராணத்திலும் காணலாம்.
பிரம்மாண்ட புராணம் : பன்னிரண்டாயிரம் ஸ்லோகங்களைக் கொண்ட இப்புராணம் ஒரு பொன்னிற முட்டையிலிருந்துதான் நமது பிரபஞ்சம் (பிரம்மாண்டம்) தோன்றி விரிவடைந்தது என்று விவரிக்கிறது. நவீன விஞ்ஞானம் தற்காலத்தில் நம்பும் பெருவெடிப்பு என்ற நிகழ்வை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தொகுக்கப் பட்ட இப் புராணத்தில் காணலாம்.
அக்னி புராணம் : அக்னிதேவன் வசிஷ்ட மகரிஷிக்கு விவரித்தது இப்புராணம். சிவலிங்கம், துர்க்கை, இராமர், கிருஷ்ணர் ஆகியோரைப் பற்றியும், நாடகம், சிற்பம், ஜோதிடம் போன்ற கலைகளைப் பற்றியும் விவரிக்கிறது என்பது இப் புராணத்தின் சிறப்பாகும்.
வாயுபுராணம் : பதினான்காயிரம் ஸ்லோகங்களைக் கொண்டு இப் புராணத்தில் கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஆண்ட குப்த வம்சத்து மன்னர்களைப் பற்றியும், கி.பி.ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாணபட்டர் என்பவரைப் பற்றியும் கூட தகவல்களைத் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பவிஷ்ய புராணம் : வருங்காலத்தில் என்னென்ன நிகழ்வுகளெல்லாம் நடக்க இருக்கின்றன என்று சூரியன் முன் கூட்டியே மனுவுக்குத் தெரிவிப்பதாக அமைந்தது இப்புராணம். ஸ்தலங்களைப் பற்றியும் அங்கெல்லாம் யாத்ரிகர்களுக்கு இருக்கக்கூடிய உரிமைகளைப் பற்றியும் கூட இப்புராணம் விவரிக்கிறது.
நாரதீய புராணம் : நாரத மகரிஷியானவர் சனத்குமாரருக்கு உபதேசித்தது இப்புராணம். 25,000 ஸ்லோகங்கள் இதில் உள்ளன.
ஸ்காந்தம் : முருகனின் வரலாற்றை விவரிப்பதுதான் இப்புராணம்
மார்க்கண்டேய புராணம் : மிகப்பழைமையான புராணம் இது. இதிலுள்ள தேவி மகாத்மியம் என்ற பகுதிதான், பின்னர் தனியான ஓர் உப புராணமாக உருவெடுத்தது.
மேற் குறிப்பிட்ட பதினெட்டு பெரிய புராணங்களும் தேவ பாஷையாகிய சம்ஸ்கிருதத்தில் தான் உள்ளன என்றாலும் பிற்காலங்களில் பாரத நாட்டின் பல்வேறு பாஷைகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. உதாரணமாக, ஸ்காந்தம் தமிழில் கச்சியப்ப சிவாச்சாரியரால் கந்தபுராணம் என்ற பெயரில் வழிநூலாக எழுதப்பட்டது. ஹாலாஸ்ய மகாத்மியம் என்ற உப புராணம் தான் பின்னர் திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் தமிழில் உருவெடுத்தது. பதினெண் புராணங்கள் எனப்படினும் அவை உண்மையில் வாயு புராணத்துடன் 19 என்று ரோமஹர்ஷனர் (அ) லோமஹர்ஷனர் கூற்றாக ஓர் ஆங்கில நூலில் வாயுபுராணத்துடன் சேர்த்து 19 பெயர்கள் தரப்பட்டுள்ளன. இந்த ரோமஹர்ஷனர் வியாசரின் சீடர்களில் முதன்மையானவர் என்றும், புராணங்களைக் கூறும் இனத்தவர் என்பதால் சூதர், சூதமுனிவர், சூதபவுராணிகர் என்றும் அழைக்கப்படுகிறார்.
புராணங்கள் சூதமுனிவரால் நைமிசாரணிய முனிவர்களுக்கு உபதேசிக்கப்பட்டுப் பின்னர் சீடர்கள் பலர் மூலம் பரவின என்பர். அவை வடமொழியில் இயற்றப் பட்ட பின் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற பிற மொழிகளில் பிற்காலத்தில் மொழி பெயர்க்கப் பட்டன. எனினும் புராணங்கள் முதன்முதலில் தோன்றிய வரலாறு பற்றி அகச்சான்றுகள் சில உள்ளன. எடுத்துக்காட்டுகள் :
1. சிவ புராணம் - பிரம்மாவால் நாரதருக்குக் கூறப்பட்டது.
2. கூர்ம புராணம் - புலஸ்தியரால் நாரதருக்கு கூறப்பட்டது.
3. கருட புராணம் - கருடன் காசியபருக்குக் கூறினார்.
4. மார்க்கண்டேய புராணம் - மார்க்கண்டேயர் வியாசர் சீடர்களில் ஒருவரான ஜைமினி முனிவருக்கு கூறியது.
5. அக்கினி புராணம் - அக்கினி தானே வசிஷ்டருக்குக் கூற அவர் வியாசருக்கு கூறினார்.
6. வராக புராணம் - வராகரே கூறினார்.
7. கந்த புராணம் - கந்தனே கூறி அருளினார்.
8. வாயு புராணம் - வாயுவாலேயே கூறப்பட்டதாகும்.
9. விஷ்ணு புராணம் - மத்ஸ்யாவதார விஷ்ணு, மனுவுக்குக் கூறினார்.