சனி, 2 ஜனவரி, 2016

திருவள்ளுவர் ஞானம்

காப்பு


அண்டம்பிண்டம் நிறைந்துநின்ற அயன்மால் போற்றி!

அகண்டம்பரி பூரணத்தின் அருளே போற்றி

ண்டலஞ்சூழ் இரவிமதி சுடரே போற்றி!
மதுரதமி ழோதும் அகத்தியனே போற்றி!
எண்டிசையும் புகழுமென்றன் குருவே போற்றி!
இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி!
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி!
குருமுனியின் தாளினையெப் போதும் போற்றி! 1
கட்டளைக் கலித்துறை
அன்னை யெனுங்கர்ப்ப மதனில்வந் துமதிலேயிருந்தும்
நன்னயமாயய்ப் பத்துத்திங்களு நானகத் தேயிருந்தேன்
என்ன அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லா மமைந்தேன் உண்மையைக் காண்கிலரே. 1
அம்புவி தன்னிலேயுதித் தாய்ந்தறி பாடைதன்னை
வம்புலகத் தார்வசிய மாய்க்கைப் பிடித்தேபிரிந்து
கும்பி தனிலேயுழன்று மக்குண்டலி பொற்கமலம்
நம்பியிருந்தேன் சிலநாள் ரகசியங் காண்கிலனே! 2
தரவு கொச்சகம்
அண்டரண்ட வான்புவியும் ஆகமத்தி னுட்பொருளும்
கண்டிதமா யான்விளங்குக் காயமதி லேயறியும்
வண்டரெனை நீசனென்ற வாறுதனை யேயழித்தேன்
விண்டரக சியந்தன்னை விளக்கமது காண்கிலரே. 3
வையமதி லேயுதிக்கு மாண்பர்கனே யுங்களுயிர்
மெய்யென் றிருந்தசைவு வெளிப்படுவ தென்னவிதம்?
அய்யமில்லா வாழ்ந்துலகில் ஆண்மையாய்ப் பூண்டமதிப்
பொய்யெனுமிவ் வாழ்க்கையது போகுஞ்சுடு காடுளதே! 4
கட்டளைக் கலித்துறை
வீடானமூலச் சுழிநாத வீட்டில்விளங்கும் விந்து
நீடாழி லோகந்தழைத்துப் பெருகியு நின்றிலகுந்
தேடாதழித்த பொருளான பொக்கிடந் தேடியென்ன
காடானநாடு சுடுகாடு சேர்வதுங் கண்டிலரே! 5
ஏழுவகைத் தோற்றமும் நால்வகை யோனியிலெய்திடினும்
பொழியச் சுரோணிதம் நாதவிந்து பொருள் போதகத்தால்
கழியக்கழியக் கடலுயிர் தேய்பிறை கண்டுமிருந்
தழியப் பெருந்தரை யெந்நாளிருந்தும் அனித்தியமே! 6

எந்நா ளிருந்தென்ன முன்னாளனுப்படி யிந்தவுடல்
தன்னா லழிவதுந் தானறியாதெனத் தந்தைவிதி
உன்னலழிவ துடலுயிர் காயமொழிவ துங்கண்
டந்நா ளனுப்படி கண்டுபிருந் தறியாதவரே ? 7

யோனிக்குளாசை யழியா தனித்தியம் உங்களுயிர்
தேனிக்குள் இன்பஞ்சுகாதித மோவருஞ் சிற்றின்பத்தில்
ஊனற்றுக்காய முடலற்று போம்பொழு தொன்றறியா
ஈனர்க்குச் சொர்க்கஞ் சுடுகாடொழிய இனியில்லையே. 8

நேரிசை வெண்பா
இந்தவுடல் காயம் இறந்துவிடு மிவ்வுலகில்
வந்தவழி தானறியா வாழ்க்கை - இந்தவுடல்
அற்பக் குழியி லரவ மிருப்பதெனும்
கற்பகத்தை யாண்டிடுமோ காண். 9
ஞானமறிந் தோர்க்கு நமனில்லை நாள்தோறும்
பானமதை யுண்டு பசியினால் - ஞானமது
கண்டால் உடலுயி ருங்காயம் வலுவாகும்
உண்டால் அமிர்தரச முண். 10
சுழியறியார்க் கென்ன சுகமறியார்க் கென்ன
வழியறியார்க் கென்ன எய்துமாறு - சுழியறியா
மூலமறிந் தவ்வழியில் முத்தியடை யார்க்குநமன்
காலனவர்க் கேமரணங் காண். 11
வேத மறைஞான மெய்யுணர்வு தானாகில்
நாதனரு ளால்பதவி நாடுமே - வேதமறை
னாலு பொருளுள் நற்பொருளின் ஆற்றியப்
பாலுமது நெய்யெனவும் பார். 12
முதலிருந்த ஊழ்வினையை முப்பாழைச் சுட்டுப்
பதறா மதிபாடு பட்டேன் - முதலிருந்த
நல்வினையுந் தீவினையு நாடாம லும்பிறந்து
வல்வினையிற் போக்கிவிட்டேன் வாழ்வு. 13
காயசித்தி யாலெனது கன்மவினை போக்கியபின்
மாயசித்தி மூலசுழி வாய்க்குமே - காயசித்தி
மூலப் புளியால் முதல்தீட்சை யாச்சுது இனிக்
காலமென்னி ரண்டாண்டில் காண். 14
கல்லுப்பின் வாருங் கருத்தறியா துண்டுமனு
வல்வினைக் குள்ளாகி மரணமார் - கல்லுப்பு
வெள்ளைக் கல்லுப்பு வெகுவிதமாய் வந்தாலும்
உள்ளமதி லுண்டென்றே உன். 15
என்றும்இந் துப்பாகும் எண்சாணு டலிருக்கக்
கண்டுமறி யாததென்ன காரணமோ - என்றுமதி
வாரி யமுரியதை வன்னிவிட்டுக் காய்ச்சியபின்
வீரியமா யானுணரு மெய். 16
உப்பின் கசடுதான் ஊறலது மாறினதால்
மூப்புசுன்ன மாவதற்கு முன்னமே - உப்பதனால்
கற்பாந்தங் கோடி காய மிதுவலுத்துச்
சொற்பாயும் வாசியில் தேகம். 17
அஞ்சுபஞ்ச பூதம் அறிந்தால் அனித்தியம்போல்
அஞ்சு வசப்படுவ தாண்டதனில் - அஞ்சினையும்
கண்டறி வோர்ஞானக் கார்சி யதினினைவு
விண்டறிய லாமே விதி. 18
எண்சாணாந் தேக மெடுத்தாலென் னாண்டையே
பெண்சாரல் நீக்கியே பேரின்பம் - க்ண்காணத்
தேக மொழியாமல் சித்தி பெறுஞானம்
யோகசித்தி போசைவிதி யுன். 19
(முடிந்தது)

வெள்ளி, 1 ஜனவரி, 2016

கஞ்சமலை:கரடி சித்தர்

கரடி சித்தர் என்பவர் காலங்கிநாதர் தான். அவர் இந்த பகுதியில் கரடி உருவம் எடுத்து அடிக்கடி இங்கு உலவிக்கொண்டு இருப்பார்.  இந்த ஊரையாண்ட சிற்றரசனின்  மகள் ஒரு ஏழையை விரும்பினாள்,அதனால்  அவன் மகளை ஒரு ஏழைக்கு கல்யாணம் செய்து தரமுடியாது என்பதற்காக அவனை இந்த பகுதியில் உள்ள புலியை வேட்டையாடினால் தன் மகளை திருமணம் செய்து தருவதாக  வாக்களித்தான். அதற்கு சாட்சியாக அங்கு உலவிகொண்டிருந்த கரடியை பார்த்து இது தான் சாட்சி என்றான் . கரடி வந்து சாட்சி சொல்லாது என நினைத்து கூறினான். சொன்னபடியே  புலியை வேட்டையாடி வெற்றி கொண்டான். ஆனால் மன்னன் தன் மகளைத் தர முடியாது என்றான். இதற்கு யார் சாட்சி என்று கேட்க ஏழை அதிர்ந்து போனான், உடனே நான் தான் சாட்சி என்றது ஒரு குரல்  பார்க்க ஜடாமுடியுடன் ஒரு முனிவர். யார் நீ? என்றார் அரசர், நான் தான் காலாங்கி இந்தமலையை  வளம் வருபவன்.  நீ சாட்சியாக கூறியபோது நான் கரடி உருவில் இருந்தேன் என்றார். உடனே கரடியாக உருமாறினார் பின் மன்னன் மனம் வருந்தி தன்  மகளை ஏழைக்கே மணம் முடித்து வைத்தான். அன்று முதல் இவரை  அங்கு கரடி சித்தர் என்று எல்லோரும் அழைத்தனர் மேலும் இவரை கஞ்சமலையான் என்றும் அழைப்பர் . 

கஞ்சமலை ஒரு அறிமுகம்!

கஞ்சமலை இது ஒர் அதிசயமலை பலருக்கும் தெரியாத ஒரு மலை. சித்தர்கள் வாழ்ந்த மலை இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் மலை.
இது கொல்லிமலையின் ஒரு பகுதியாகும்.
இங்கு பதினெட்டு சித்தர்களுள் முதன்மையானவர்களான திருமூலர், காலங்கிநாதர்,அகத்தியர்,கோரக்கர் ஆகியோர் வாழ்ந்த மலையாகும்
மேலும் இது பல சிறப்புகளையுடையதாகும். அது பற்றி இனி நாம் பார்க்கப் போகிறோம். பலரும் கொல்லிமலை,கல்வராயன்மலை,

பர்வதமலை,பொதிகைமலை,சதுரகிரி என பல மலைகள் பற்றி கூறியிருக்கிறார்கள், ஆனால் கஞ்சமலை பற்றி யாரும் விரிவாக கூறவில்லை. அதனால் இதன் சிறப்புகள்,அமைவிடம்,வரலாறு,
மூலிகைகள் ஆகியவற்றை பற்றி கூறுகிறேன். இதில் தவறு இருப்பின் தாங்கள்  தாராளமாக சுட்டிக் காட்டலாம் மேலும் சித்தர்கள் ஆசிர்வாதத்துடன் இதை பதிவு செய்கிறேன்.
இதன் சிறப்புகள் பற்றி இன்று பார்ப்போம்:

காலங்கிநாதரின் குருபக்தியை திருமூலர்  கண்டது இந்தமலையில் தான்.  அவ்வையாருக்கு அதியமான் நெல்லிகனிகொடுத்ததும் இங்கு தான், அது விளைந்த இடமும் இங்கு தான். அங்கவை,சங்கவை திருமணம்நடந்ததும்,
அகத்தியர் இங்கிருந்து பொதிகைமலைக்கு சுரங்கம் மூலம் போனதாகவும், போகலாம் எனவும்அவரே குறிப்பிடுகிறார்.
சிவனும்,பெருமாலும் சுயம்பு வடிவாக கோயில் கொண்டுள்ள மலைகளுள் இதுவும் ஒன்றாகும். 
 சுலுமுனை சித்தர் குகை,  அகத்தியர்குகை, காலங்கி குகை ஆகியவைகளை உள்ளடக்கியது.
சித்தர் பீடம், 77அடி உயரமுள்ள ஆஞ்சனேயர் சிலை ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

குருவைத் தேடி....

 "குரு பரம்பரை" என்கிற இந்த ஒற்றை தத்துவத்தின் மீது கட்டமைந்ததுதான் சித்தரியல்.  இங்கே குரு ஆதியும், அந்தமும் ஆனவர். அவருக்கு மிஞ்சியது என எதுவும் இல்லை. எல்லாம் அவரால் ஆனதே, அவரன்றி ஓரணுவும் அசையாது என்பதைப் போன்ற ஆழ்ந்த சத்தியமான கருத்தாக்கங்களின் வழி நிற்பதுதான் நம் சித்தர்களின் பாரம்பரியம். இந்த அடிப்படைகளுக்கு எவரும் விதிவிலக்கில்லை. ஆதி குருவான சிவனில் துவங்கி அவருடைய அணுக்க சீடர்களின் வழி வந்தவர்களே நம் சித்தர் பெருமக்கள். 

இப்போதெல்லாம் தெருவுக்கு நாலு குருமார்கள் விளம்பர பதாகைகளோடு வலிய வந்து ஞானம் தரவும், தீட்சை கொடுக்கவும்  தயாராக இருக்கின்றனர். என்ன அவர்கள் வசூலிக்கும் தட்சிணைதான் கொஞ்சம் அதிகமாய் இருக்கிறது. இத்தகைய குருமார்களின் வேடம் கலைகிற போது மட்டுமே நாம் மெய்யான குருவைப் பற்றி யோசிக்கவும், தேடவும் விழைகிறோம்.  மெய்யான குரு என்பவர் யார்?, அவர் எங்கிருப்பார்? அவரை எப்படித் தேடி கண்டறிவது? என்கிற கேள்வியும் குழப்பமும் நம்மில் அநேகருக்கு உண்டு.

மெய்யான குருவை கண்டறிவது என்பது ஒரு வகையான வாழ்நாள் பயணம். நம்மில் பலரும் இப்படி மெய்யான குருவை தேடிக் கொண்டிருப்பவர்கள்தாம். குருவை தேடிக் கண்டு பிடிக்கும் இந்த பயணத்தை எப்படித் துவங்குவது அல்லது எப்படி முன்னெடுத்துச் செல்வது என்பதில்தான் பலருக்கும் குழப்பம் வருகிறது. இதற்கு நம் முன்னோர்கள் எளிய தீர்வினை அருளியிருக்கின்றனர். 

ஆம் மிக எளியவழி. அது இதுதான்  "மாதா, பிதா, குரு தெவ்யம்" . ஆம் நம் பெற்றோரே நமது முதல் குரு,  இதை உணர்ந்து நம் தாய் தந்தையரை போற்றிப் பணிந்து  அவர்களின் வழி நடத்துதலை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கும் போது அடுத்த கட்டமாய் மெய்யான குரு நம்மைத் தேடி நம் முன்னே வருவார்.  இத்தகைய வழி நடத்துதலில்தான் நாம் எதைத் தேடுகிறோமோ அதையே அடைகிறோம்.

இந்த எளிய அடிப்படையை புரிந்துணர்ந்து பயணிக்க ஒருவருக்கு மெய்யான குருவின் தரிசனம் கிடைக்கும்.   குரு என்றால் இருளை நீக்குபவர் என்று பொருள்.  மெய்யான குரு நம் அக இருளை நீக்கக் கூடியவர். இத்தகைய குருவின் உதவியால் நம்மை நாமே உணரத் துவங்கும் போது, நான் என்கிற அகந்தை அழியும் போது நம்மில் மிளிர்ந்திருக்கும் ஒப்பற்ற பரம்பொருளை நாம் உணரக்கூடியவர்களாய் ஆகி விடுகிறோம். இதனையே சித்த நிலை என்கிறோம். தெய்வ நிலை என்பதும் இதுதான்.

மாணிக்க வாசகர் மற்றும் சனகாதி முனிவர்கள் நால்வருக்கும் இறைவனே குருவாக நேரில் வந்து உபதேசம் செய்ததாக புராணங்கள் சொல்கின்றன. இறைவனோ உருவமற்ற சூக்குமமானவர். அப்படி சூக்குமமான நிலையிலிருந்தே ஏன் குரு உபதேசம் செய்யாமல் மனிதவடிவில் நேரில் வந்து உபதேசம் செய்தார் என்ற கேள்வி எழுவது இயற்கையே.."ஈஸ்வரோ மனுஷ்ய ரூபேணா" என்கின்றன வேதங்கள். கடவுளாக இருந்தாலும் மனித உருவில் வந்து ஆகவேண்டும் என்பதே இதன் பொருள். ஆக சூக்கும வடிவில் இருக்கும் ஒருவர் அது கடவுளாக இருந்தாலும் குருவாக இருந்து போதிக்க முடியாது என்பது இவற்றில் இருந்து தெளிவாகிறது. 

சித்தரியலிலும் சூக்கும நிலையில் இருந்து எந்த குருவானவரும் போதித்ததாக எந்தவித குறிப்புகளும் கிடைக்கவில்லை. மாறாக ஜீவ சமாதி அடைந்த ஒரு சித்தர் அதிலிருந்து மீண்டுவந்து உபதேசம் செய்து பின்னர் வேறொரு இடத்தில் மீண்டும் ஜீவ சமாதியடைந்ததாக குறிப்புக்கள் காணக் கிடைக்கின்றன. 

அந்தவகையில்அகத்தியர் தனது "அகத்தியர் பரிபூரணம்" என்னும் நூலில் குருவானவரை அணுகி பயனடையும் வழிவகையை விளக்குகிறார்.

பார்க்கவென்று பலநூலுந் தேடிப்பார்க்க
பக்குவங்க ளில்லையடா வயதோகொஞ்சம்
மார்க்கமுடன் கொஞ்சவய தானாலென்ன
மகத்தான சற்குருவைத் தேடிப்பார்த்து
ஏர்க்கையுட னவர்மனதுக் கேற்க வல்ல
இன்பமுடன் தயவுவர நடந்தாயானால்
தீர்க்கமுடன் சத்திசிவ தீச்சைவைத்து
செம்மையுட னுதியந்தத் திறஞ்சொல்வாரே.

திறஞ்சொல் சகலகலை சேதியெல்லாம்
தீர்க்கமுள்ள மவுனமதின் திறமுஞ் சொல்வார்
பறஞ்சொல்வார் பராபரத்தின் பதிவுஞ்சொல்வார்
பதிவாக மவுனமதின் திறமுஞ் சொல்வார்
நிறஞ்சொல்வார் நிஷ்டையுட நேர்மை சொல்வார்
நெஞ்சங்கள் தான்வலிக்க நிதியுஞ்சொல்வார்
கறஞ்சொல்வார் காயாதி கற்பஞ்சொல்வார்
கண்மணியே மனதுவரக் கருதிக்கேளே

கேழ்க்கையிலே நீசெய்த நன்மைப்பாகம்
கிருபையுடன் சொல்லிடுவா ரப்போதானும்
வாழ்க்கையுள்ள தேகமடா வலுத்துப்போகும்
மகத்தான புத்தியுமே சொலிக்க லாச்சு
தாழ்க்காமல் பதவியிலே மேவலாச்சு
சதாகாலம் போதையுமோ தரிக்கலாச்சு
காக்கையிலே கால்வலுத்து நடக்கலாச்சு
கதிரான தீபவொளி காணலாச்சு

பல நூல்களைத் தேடிப் படித்து அறிந்து பக்குவமடைய நமது வாழ்நாள் போதாது அதனால் சிறுவயது என்றாலும் கூட மகத்தான் குருவை தேடியடைந்து, அவருக்கு அணுக்கமாய் இருந்த்  அவர் மனம் கோணாதபடி நடந்து கொண்டு அவரிடம் கற்கவேண்டும் என்கிறார்.  அப்படி இருந்தால் மட்டுமே குருவானவர் சிவ சக்தி தீட்சை தந்து, சிறப்பான ஆதி அந்த திறன் எல்லாம் உபதேசிப்பாராம். சகல கலை செய்திகள் முதல் மௌனத்தின் திறங்கள், நிஷ்டை முறைகள், காயகற்ப வகைகள் என அனைத்தும் உபதேசிப்பாராம். அத்துடன் செய்த நன்மைகள் அதனால் கிடைக்கும் பலன்கள் முதல் கர்ம வினைகள் நீக்குவதற்கான வகைகளை சொல்லி சமாதி நிலைக்கும் வழிகாட்டுவாராம் என்கிறார். 
இப்படி நேரடியாக குருவுடன் இருந்து கற்றால் குருவானவர் கருணையுடன் எல்லாம் சொல்லிதருவாராம். அதனால் காயசித்தியும், புத்திக்கூர்மையும், பேரானந்த நிலையும் கிடைப்துடன் புருவ மத்தியில் தீப ஒளியையும் காணலாமாம். என்கிறார். அந்த வகையில் இந்த பதிவினை எல்லாம் வல்ல குருவுக்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

வியாழன், 31 டிசம்பர், 2015

மனம் ஒருநிலைப் பட தியானமே முக்கியம்


தியானம் செய்ய வேண்டும் என்றால், மனம் ஒருநிலைப்பட வேண்டும். மனம் ஒருநிலைப்பட வேண்டும் என்றால், உடம்பைப்பற்றியும் உயிரைப்பற்றியும் அறிந்திருக்க வேண்டும். நமது தோற்றமே ஆண் பெண்ணின் காமத்தின் சேர்க்கையால் வந்ததாகும். ஆகவே, நமக்குக் காம விகாரம் இருப்பது இயல்பே. இந்த காம விகாரம் தணிவதற்கு, புனிதத் தலங்கள் சென்றாலோ, புனித நீராடினாலோ தணியாது. அதற்குத்தான் பெரியோர்கள் ஆண் பெண் சேர்க்கையாக இல்லறம் அவசியம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆண் பெண் சேர்க்கையாகிய இல்லற ஈடுபாடு இல்லையென்றால், உடம்பு கெட்டுவிடும். இல்லறத்தில் ஈடுபட்டவர்கள் இல்லற வாழ்வில் ஈடுபடாவிட்டால் உடல் உஷ்ணம் மிகுதியாகும், மலச்சிக்கல் ஏற்படும், இரத்த சுத்தி ஏற்படாது, மூளையும் வேலை செய்யாது, கண் எரிச்சல் ஏற்படும்.
எனவே, இயற்கையின் படைப்பே பெண்பாலையும் ஆண்பாலையும் சேர்த்தே தோற்றுவித்திருக்கிறது. உடம்பும் உயிரும், ஆண் பெண் சேர்க்கையில் வந்தது என்று அறிந்து அதன் போக்கிலேயே சென்று, தினமும் காலை 5 மணிக்கே எழுந்து காலைக்கடன் முடித்துவிட்டு 10 நிமிடம் "ஓம் அகத்தீசாய நம" என்று நாமஜெபம் செய்து, பிறகு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, அடியேனுக்கு ஞானம் சித்திக்க வேண்டும் என்றும், மனம் ஒருநிலைப்பட்டு உமது திருவடியைப் பற்றி தியானிக்க வேண்டும் என்றும், உடம்பையும் உயிரையும் பற்றி அறிந்து கொள்ள அருள் செய்ய வேண்டும் என்றும், உடல் மாசு பற்றி அறிந்து, உமது திருவருள் கடாட்சத்தால், உடல்மாசு நீங்க அருள் செய்ய வேண்டும் என்றும், உயிராகிய ஆன்ம ஜோதியைக் காண வேண்டும் என்றும், ஆன்மஜோதியைக் காண்பவர்கள் தான், ஜீவாத்மா பரமாத்மாவோடு ஐக்கியமாகும் என்பதை அறிந்து, ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள் என்பதை உமது திருவருளால் அறிந்து கொள்ள வேண்டும்.
இயற்கையை நன்கு உணர்ந்த ஆன்மீகவாதிகள், இல்லறமே நல்லறம் என்று சொல்வார்கள். ஏனென்றால், ஒருவன் வீடுபேறு அடைய வேண்டுமென்றால், இருபது வருடம் ஆகலாம். இல்லறம் தான் ஜென்மத்தைக் கடைத்தேற்றத் துணையாக இருக்கும். இயற்கையைப் பற்றி அறியாதவர்களோ, பிரம்மச்சாரியம் கடைப்பிடிக்க வேண்டும் என்பார்கள். பாச பந்தம் கூடாது என்பார்கள். இதை நம்பி, ஆண்களும் பெண்களும் சிலர் இளம் வயதிலேயே துறவு மேற்கொள்வார்கள். வாழ்க்கை முழுவதும் மனப் போராட்டமாகவே இருக்கும். அவர்களால் மன ஒருநிலையோடு தியானமும் செய்ய முடியாது, தர்மமும் செய்ய முடியாது. ஆகவே வாழ்நாள் முழுவதையும் வீணாக்கிக்கொள்வார்கள்.
எனவே, துறவை விரும்புகிறவர்கள், சுத்த ஆன்மீகவாதிகளிடம் சென்று உபதேசம் பெறவேண்டும். அப்படிபெற வாய்ப்பில்லையென்றால் "ஒம் அகத்தீசாய நம" என்று காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும் நாமஜெபம் செய்தால் ஆசான் சற்குருநாதராகிய அகத்தீசர் உணர்வோடும் உணர்ச்சியோடும், நாடி நரம்புகளில் சார்ந்திருந்து நமக்கு ஆசானாக இருந்து உணர்த்துவார்கள். இதுவே முக்தியடைவதற்கு உற்ற துணையாக இருக்கும். இதை விட்டு விட்டு போலி ஆன்மீகவாதிகளிடம் சென்றால், பந்த பாசம் கூடாது என்பார்கள், பட்டினி கிடக்கவேண்டும என்பார்கள், பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பார்கள்;; ஊர் ஊராகச் சுற்றச் செய்வார்கள். உனக்கு உள்ள சொத்துக்களை எல்லாம் என்னிடம கொடு என்பார்கள், நமது பாவச் சுமை எல்லாம் பூரணமாக வாங்கிக் கொள்வார்கள். நாமும் தெளிவடைய முடியாது, ஏமாற்றப்படுவோம், அவர்களும் தேறமாட்டார்கள்.
தியானம் செய்யும் முறை
தியானம் செய்யவேண்டும் என்றால், சமமான இடத்தில் வெண்ணிறத் துணியை விரித்து, அதன்மேல் அமர்ந்து நாமஜெபம் செய்ய வேண்டும். அங்கு கொசு, எறும்பு, ஈ, புகை மற்றும் துர்நாற்றம் இருக்கக் கூடாது. நறுமணம் உள்ள பத்தி இருக்கவேண்டும். முடிந்தால் திருவிளக்கு வைத்துக்கொள்ளலாம். இங்கு திசை முக்கியமல்ல. பக்திதான் முக்கியம். காலை மாலை உறுதியாகத் தியானம் செய்கின்ற மக்களுக்குத் தன்னிடம் உள்ள குணப் பண்புகளைப் பற்றியும், குணக்கேடுகளைப் பற்றியும் அறிந்துகொள்ள முடியும். நமது மனமே, நம்மைப் பற்றி உயர்த்தியே எண்ணிக் கொண்டிருக்கும். இது பாவத்தின் சின்னமாகும். இந்த விபரங்கள் யாவும் சித்த புருஷர்கள் சொல்லியிருப்பவை...
தினமும் தியானம் செய்யச் செய்யத்தான் நம்மிடம் "யான்" என்ற கர்வம் உள்ளதா? பொறாமை உள்ளதா? பேராசை உள்ளதா? ஜாதிவெறி உள்ளதா? மதவெறி உள்ளதா? வஞ்சனை உள்ளதா? பழிவாங்கும் எண்ணம் உள்ளதா? லோபித்தனம் உள்ளதா? பிறரை மதிக்கக் கற்றுக்கொண்டோமா? இன்னும் அநேக பலஹீனங்களைப்பற்றியும் அறிந்துக்கொள்ள முடியும். தியானம் செய்யாவிட்டால், நமது மனம் நம்மை உயர்த்தியே எண்ணி, நரகத்தில் தள்ளிவிடும். எனவே, அன்னதானம் செய்வோம். தினமும் அகத்தீசனைக் குறித்து தியானம் செய்வோம். அகத்தீசன் ஆசி பெறுவோம். இன்புற்று வாழ்வோம்.

புதன், 30 டிசம்பர், 2015

பழனி நவபாஷாண சிலை


இந்த உலகத்தில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரே மருந்து இருந்தால் எப்படி இருக்கும்? இந்தக் கேள்வியை உலகில் உள்ள நவீன விஞ்ஞானிகளிடமோ அல்லது மருத்துவரிடமோ 

கேட்டால் இது முட்டாள் தனமான கேள்வி இது சாத்தியமே இல்லை 
என்பார்கள். ஆனால் இதே கேள்வியை தமிழனிடம் கேட்டால் சாத்தியம் என்பான். ஆம் இதைத் தான் பல ஆயிரம் வருடம் முன்பே 18  சித்தர்களில் ஒருவரான மாபெரும் தமிழ் சித்தர் போகர்க்கு தோன்றிய
சிந்தனையில் உதித்த மருந்து தான் நவபாஷாணம். இதற்காக அவர் மூலிகைகள் ஆராய்ச்சியில் இறங்கினார் கிட்டத்தட்ட 4448 நோய்களுக்குரிய மூலிகைகளை உபயோகித்து அதை 81 பாஷாணங்களாக மாற்றி இந்த பாஷாணங்களை 9 பாஷாணங்களாகப் பிரித்து எடுத்தார். அவை கௌரிப் பாஷாணம்,கெந்தகப் பாஷாணம்,சீலைப் பாஷாணம்,வீரப்பாஷாணம்,கச்சாலப் பாஷாணம்,வெள்ளைப் பாஷாணம், தொட்டிப் பாஷாணம், 
சூதப் பாஷாணம்,சங்குப் பாஷாணம்ஆகும்.
இந்த 9 பாஷாணங்களை 9 விதமான எரிபொருளைக் கொண்டு சூடு பண்ணிப் பூமியில் குழி தோண்டி இந்த 9 பாஷாணங்களைப் புதைத்துக் குறிப்பிட்ட நாளில் எடுத்து மருந்தாக மக்களுக்குக் கொடுத்தார்.
இந்த நவபாஷாணம் உலகில் நிறைய இடங்களில் இருக்கு என்று கூறினாலும் நிருபிக்கபட்டது.
பழனி முருகன் சிலை மட்டுமே. இதில் நிறைய சந்தேகங்கள் தோன்றலாம் இதை ஏன் சிலையாக வடித்தார்?மருந்தாகவே மக்களுக்குக் கொடுத்திருக்கலாமே? என்று. இதைப் பற்றி இன்னொரு தகவல்
என்னவென்றால் நவபாஷாணத்தை போகர் கண்டு பிடித்தது  மனிதனின் நோயைப் போக்குவதற்கு இல்லை மனிதனை இறப்பே இல்லாமல் செய்வதற்குத் தான் கண்டுபிடித்தார் என்று
சில சித்தஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவர் கண்டு பிடித்த நவபாஷாணத்தைப் பற்றி கேள்விப் பட்ட மற்ற சித்தர்கள் போகரை "நீ இயற்கை விதிக்கு எதிராக செயல்படுகிறாய் இந்த நவ பாஷாணத்தை உடனே அழித்து விடு என்று அறிவுரை கூறினார்கள். உடனே தன் தவறை உணர்ந்த போகர் அந்த
பாஷாணங்களை அழிக்க மணமில்லாமல் அதைப் பொதுமக்கள் யாரும் பயன்படுத்த முடியாதுபடி முருகன் சிலையாகச் செய்து பழனியில் வைத்து விட்டார். இந்தக் கதையைக் கேட்டவுடன் சில பேருக்கு சிரிப்பு வரலாம் அது எப்படிங்க மனிதன் இறப்பே இல்லாமல் வாழ முடியும்?  என்று.  இதை உங்களுக்குஅறிவியல் பூர்வமாகவே விளக்குகிறேன்.
அதாவது இப்போது உள்ள DNA (மரபணு) ஆராய்ச்சியாளர்கள் என்ன கூறுகின்றனர் என்றால் ஒரு மனிதனின் மரபணுவை சுத்திகரிப்பதன் மூலம் இளமை மாறாமல் 1200 ஆண்டுகள் வாழலாம் என்று கூறுகின்றனர். அதை போல் இந்த நவபாஷாணம் ஏன் நமது மரபணுவை சுத்திகரித்து இறப்பை தடுக்கக் கூடாது.ஏது
எப்படியோ இந்த நவபாஷாணத்தை நமது அரசாங்கம் தான் ஆய்வுக்கு உட்படுத்தி அதோடு உண்மை தன்மையை உலகுக்குத் தெரியப்படுத்தப் வேண்டும். மக்கள் அனைவரும் சித்தர்களின் இரகசியங்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்பது என் நோக்கம். இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 3000 ஆண்டுகள் முன்னாடி பிறந்தவர் போகர் என்ற மாபெரும் சித்தர். இவர் காளாங்கி நாதர் என்ற சித்தரின் சீடரும் 18 சித்தர்களில் ஒருவரும் ஆவார். இவர் பழனியில் இருக்கும் நவபாஷாண சிலையைச் செய்தவரும் இவர் தான்.
இவரைப் பற்றிய தகவல் மிக ஆச்சரியத்தைக் கொடுக்கும். இவரைப் பற்றிய ஒரு தகவலை அவர் இயற்றிய போகர் சப்தகாண்டம் என்ற நூலில் அவர் குறிப்பிட்ட தகவலைப் படித்து ஆச்சரியத்தின் உச்சத்துக்கே சென்று விட்டேன்.  இப் பேர்பட்ட தமிழனை உலகம் முழுவுதும் தெரியப்படுத்த வேண்டும் என்பதே என் நோக்கம். அவர் இயற்றிய அந்த நூலில் 1799,1800 ஆம் பாடலில் விமானத் தொழில் நுட்பத்தைப் பற்றிய குறிப்பையும்
அதை எப்படிச் செய்ய வேண்டும் என்றும் அதை வைத்து அவர் பறந்ததையும் தெள்ளத் தெளிவாகக் கூறிப்பிட்டிருக்கிறார். அது மட்டும் அல்ல 1926 ஆம் பாடலில் நீராவி  இஞ்சின் (Steam Engine) வைத்து கப்பலை எப்படி இயக்குவது என்றும் கப்பலின் வரைவையும் வடிவமைக்கிறதையும் குறிப்பிட்டிருக்கிறார். 
இதை 5000 ஆண்டுகள் முன்பே தமிழன் கண்டு பிடித்து விட்டான் என்பது நமக்கெல்லாம் பெருமை. ஆனால், அப்பேர்பட்ட தமிழனை நாம் மறந்து விட்டோம் என்பது தான் வேதனையளிக்கிறது.  தமிழனின் புகழ் உலகம் முழுவதும் பரவவேண்டும். உலகத்தின் முதல் இனமும் முதன் மொழியும் முதல் அறிவியல் விஞ்ஞானியும் முதல் மருத்துவனும் முதல் ஆன்மீகவாதியும் தமிழனே என்பதில் நாம் அனைவரும் பெருமைப்பட வேண்டும்.

ஈசன் திருவருள்

இயக்கத்துள் இருக்கும்போது உணராத இயக்கம் !!
இயக்கத்துள் நிற்கும் பொருள் மூலம் உணர்ந்தால் !!
இயக்கத்தால் தான் எதுவும் என்று உணர்விக்கப்பட்டு !!
இயக்குபவன் இயக்கத்தில் அனைத்தும்.... அதில் நாமும் !
நமசிவய!
இன்றைய நாள் !! இந்த நிமிடம் !! இந்த நொடி !! இப்போது !! உன்னிடம் உள்ள அனைத்தும்!! எண்ணம் ! செயல் ! சிந்தை ! ஆடை ! அலங்காரம் ! சுற்றம் ! சூழ்நிலை ! உணர்வு! போன்ற அனைத்துமே திருவருள் !!
இதை அனுபவிக்காமல் ?? நாளை !! அடுத்த நிமிடம் !! அப்போது !! என்று எதையாவது நினைத்து !! துன்பம் என்று உழலாமல்!!
அளித்துள்ள திருவருளை ஆனந்தமாக அளித்த ஈசனின் துணை கொண்டு அனுபவியுங்கள் !! அதுவே திருவருட் பயன் !!
இப்போது இவ்வளவையும் அனுபவிக்க கொடுத்தவன் !! எப்போது எதை அனுபவிக்க கொடுக்க வேண்டும் என்று தீர்மானிக்கட்டும் !!
இப்பதிவை எப்போது படித்தாலும் அந்தத் தருணத்திற்கும் பொருந்தும்!! அது தான் திருவருள் !!
இறைவன்அளித்ததை அனுபவியுங்கள் !! அது ஆனந்தமாகவும் அனுபவமாகவும் இருககும் !! அதுவே திருவருள் !!
எதையும் மாற்றவல்லான் திருவருளே எங்கும் எப்போதும் !! இங்கும் இப்போதும் !!
திருசிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே!

வெள்ளி, 18 டிசம்பர், 2015

உலகின் முதல் வைத்தியர் திருமூலர்!


ஸோஸர் என்னும் ஃபாரோ மன்னரின் பேரமைச்சராக
இருந்தார்.
அவர்தான் உலகின் முதல் வைத்தியர். தற்கால மருத்துவத்தின் 
தந்தை என்று அவரைத்தான் சொல்லவேண்டும். கிரேக்க நாட்டு
ஹிப்போக்ரேட்டஸ் அவருக்குப் பின இரண்டாயிரம் ஆண்டுகள்
கழித்துத் தோன்றியவர். பல நோய்களின் அறிகுறிகள், குணங்கள்,
சிகிச்சை, மருந்துகள், உடற்கூறு போன்றவற்றையெல்லாம்
நன்கு அறிந்திருந்தார்.
Mummification என்னும் உடலைப் பாடம் செய்யும்
முறையையும் அவர்தான் வரையறுத்தார்.
அவருக்குக் கூடுவிட்டுக் கூடு பாயும் வித்தையும் உடலுக்குள்
உயிரை ஒடுக்கி வைக்கும் வித்தையும் தெரிந்திருந்தது.
காயகல்பமும் அறிந்திருந்தார். நான்கு ஃபாரோ மன்னர்களின்
அமைச்சராக இருந்திருக்கிறார்.
அவர் இன்னும் இறக்கவில்லை என்று நம்பப்படுகிறது.
சிறந்த பொறியியலாளர். அவர் தான் முதன்முதலில் பிரமிட்
கோபுரத்தைக் கட்டியவர். அவர் கட்டிய கோபுரம் சக்காரா
என்னுமிடத்தில் இருக்கிறது.
சிறந்த கவிஞர். இப்போது எகிப்திய மொழியிலும் இன்னும்
பல ஆஃப்ரிக்க மொழிகளிலும் வழங்கும் பல பழமொழிகள் அவர்
இயற்றிய கவிதைகளிலிருந்து எடுக்கப்பட்டவைதாம்.
MultiGenius அல்லது Multi-Talented Genius வகையைச்
சேர்ந்தவர்.  அவர் கிமு. 2700 வாக்கில் இருந்தவர்.
திருமூலரின் திருமந்திரம் திருஞானசம்பந்தரால்
திருவாவடுதுறையில் கண்டுபிடிக்கப்பட்டது.
நம்பியாண்டார் நம்பியால் பத்தாம் நூற்ராண்டில் பத்தாம்
திருமுறையாக வகுக்கப்பட்டது.
திருமூலர் மூவாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தவர்.
இப்போது கணக்குப் போட்டுப் பாருங்கள்......
இம்ஹோட்டெப் காலத்திலும் திருமூலர் வாழ்ந்திருப்பது தெரியும்
கீழ்க்கண்ட வாசகங்கள் ஷாஓலின் மரபைச் சேர்ந்தவை.
ஷாஓலின் மரபு ஒரு தற்காப்புக்கலை மட்டுமல்ல.
அது சன்மார்க்க நெறிகள் அடங்கிய கட்டுக்கோப்பான
சித்தர் மரபு.
போதிதர்மரின் வழி வந்தது.  அதன் நூல்களில் ஒன்றில் வரும் வாசகங்கள் இவை:
People who know others are wise
People who know themselves are enlightened
-Shaolin Chinese Kung Fu Meditations
இப்போது இதைப் பாருங்கள்:
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தான் இருந்தானே
-திருமூலர்

உணர்வில் உணவின் தாக்கம்

குரு நானக் தமது சுற்றுபிரயாணத்தில் எம்னா-பாத் என்ற கிராமத்தை அடைந்தார். அவரோடு பாயி-மர்தானா வும் உடன் இருந்தார். அந்த ஊரில் பாயி-லாலோ என்ற தச்சன் வசித்து வந்தார். அவருக்கு பச்சிலைகளை வைத்து செய்யும் மருத்துவமும் ஓரளவுக்கு தெரிந்திருந்தது. அவரது எளிமையும் நேர்மையும் பக்தியும் கண்டு அவரோடு சில காலம் தங்கினார் குரு நானக். அவர் நானக் கை விட பதினேழு வருடங்கள் பெரியவர். சீக்கிய மதத்திற்கு அடிக்கல் இவருடைய வீட்டில்தான் நாட்டப்பட்டது என்றும் சொல்லப்படுவதுண்டு. இன்றைய பாகிஸ்தானத்தில் இருக்கும் அவர் வீடு சீக்கியர்களுக்கு ஒரு புனித யாத்திரை தலமும் ஆகும்.

அதே ஊரில் 'மல்லிக் பாகோ' என்ற நிலசுவான்தாரும் வசித்து வந்தார்.அவர் பதானி நவாப்பின் அரசில் ஒரு முக்கிய அதிகாரியும் கூட. உயர்குடியை சேர்ந்தவர். ஊரிலுள்ளவர்களுக்கெல்லாம் ஒரு பெரும் விருந்து வைத்தார்.குருநானக்கிற்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால் அவர் செல்லவில்லை. நானக்~கைப் பற்றி பலவிதமாகக் கேள்விப்பட்டிருந்த பாகோ விற்கு இது அதிசயமாகப் பட்டது. பாகோநானக் கை தேடி வந்து கேட்கலானார்.

“ஐயனே உயர்குலத்தில் பிறந்து, பலருக்கும் ஆன்மீக குருவான நீங்கள் கீழ்குலத்தில் பிறந்த லாலோ வுடன் ஏன் இருக்க வேண்டும் ?”

“அன்பரே, நான் குலங்களும் மதங்களும் பார்ப்பதில்லை.எனக்கு யாவரும் ஒன்றே. நான் எளிய உணவையே விரும்புபவன். அதனால்பாயி லாலோவுடன் தங்கினேன்”

“லாலோ படைத்த உணவை ஏற்றுக் கொள்ளும் நீங்கள் என் வீட்டு விருந்தை புறக்கணிக்கும் காரணத்தை அறியலாமா?” “அவசியம் தெரிய வேண்டுமா ?”
“ஆம்”
“உங்களுக்கு அவ்வளவு விருப்பமென்றால் சிறிது வரவழையுங்கள்” என்று மல்லிக் பாகோவிடம் கேட்டுக்கொண்டார்.
அந்த உயர்ந்த விருந்து வந்து சேரும் முன்னரே லாலோவின் வீட்டிலிருந்தும் சிறிது உணவை கொண்டு வரச் செய்தார்.
இரண்டும் வந்தததும் ஒரு கையில் லாலோவின் வீட்டு உணவையும் மற்றொன்றில் பாகோ வீட்டு உணவையும் எடுத்துக்கொண்டு பிழியும் வகையில் கைகளைப் பிசைந்தார். சுற்றியிருந்த அனவரும் ஆச்சரியப்படும் படியாக லாலோ படைத்த உணவில் பால் துளிகளும்பாகோ படைத்த உணவில் இரத்தமும் சொட்டத் தொடங்கின.
மல்லிக் பாகோ விற்கு முகம் வாட்டமடைந்தது.
“குருவே ஏனிந்த கண்கட்டு வித்தை. என்னை இப்படி அவமானத்திற்கு ஆளாகும்படி செய்ய என்ன தவறு செய்தேன்?”
“அன்பிற்குரிய பாகோ!
உன்னை அவமானப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. நீ உண்மையை அறிய விரும்பியதால் உனக்கு அதைக்காட்ட முனைந்தேன். லாலோ கடும் உழைப்பாளி. தனக்கு நேர்மையாக வரும் கூலி மூலம் குடும்பம் நடத்தி வருகிறான். அதனால் அவன் தந்த உணவிலிருந்து பால் வெளிப்பட்டது. ஆனால் உன் விஷயத்திலோ உன் செல்வம் நேர்வழியில் வந்ததல்ல. உன் நிலங்களில் உண்மையாக உழைப்பவர்களுக்கு நீ தகுந்த முறையில் கூலியும் கொடுப்பது கிடையாது. அவர்களின் ரத்தத்தில் தோன்றியது உன் வசதிகளும் ஆடம்பரங்களும். ஆகவே தான் உன் வீட்டு உணவில் இரத்தம் வெளிப்படுகிறது” என்று விளக்கினார். பேச்சற்று நின்றார் மல்லிக் பாகோ.
குருவினுடைய கூற்றை உண்மையாக்கிக் காட்டினார் குரு நானக். ஆம், கபீர்தாஸரை நானக்கின் குரு என்று கூறுவோர் உளர். இன்னும் சிலர் அவர்கள் சந்தித்துக் கொண்டதே இல்லை என்றும் சொல்வதுண்டு. ஆனால் சீக்கியர்களின் கிரந்த சஸாஹேப் எனப்படும் புனித நூலில் கபீரின் 541 ஈரடிகளும் பாடல்களும் உண்டு. கிரந்தஸாஹேப்~ல் இல்லாத ஈரடிகளை கபீரது மூல ஈரடிகள் அல்லவென்றும் பிற்சேர்க்கையெனவும் கொள்வோர் உளர். அந்த அளவிற்கு கபீரின் போதனைகளுடன் ஒன்றியிருந்தார் குரு நானக்.

இப்போது கபீரின் அந்த ஈரடியைக் காண்போமா?


பாலொக்கும் தானே வந்தது,நீரொக்கும் இரந்து பெற்றது 
ஒறுத்து ஆர்தல் செந்நீரே, கேண்மினோ கபீரன் கூற்றது
.

(ஒக்கும் = போல;ஒறுத்து =துன்புறுத்துதல்;ஆர்தல்= அனுபவித்தல்,புசித்தல்,குடித்தல்; செந்நீர்= இரத்தம்; கேண்மினோ =கேட்பீரே)
மாற்று :
வழிமுறை வந்தது பாலொக்கும், நீராகும் இரந்து பெற்றது 
வலித்து புசிப்பின் செந்நீரே, கேண்மினோ கபீரன் கூற்றது


(வழிமுறை =முறையான வழி, தர்மத்திற்குட்பட்ட வழி; வலித்து =துன்புறுத்தி 
)

உடல் வளர்ச்சியைப் போலவே ஆன்ம வளர்ச்சியும் இன்றிமையாதது. இதை அருட்செல்வம் என்பார் வள்ளுவர்.
"அருட் செல்வம் செல்வத்துள் செல்வம்...." என்று குறிப்பிடுகிறார். பால் உடலின் வளர்ச்சிக்கு ஊட்டம் தருவது. அருட்செல்வம் ஆன்மாவிற்கு ஊட்டமாகும்.

அறன் ஈனும் இன்பமும் ஈனும்; திறனறிந்து 
தீதின்றி வந்த பொருள் (754)'


என்ற குறளில் தீய வழியில் அல்லாமல் முறையறிந்து நேர்மையாக செயல் புரிந்து தேடிய செல்வம் நன்மையும் மகிழ்ச்சியும் தரும் என்கிற கருத்தை பார்க்கிறோம்.லாலோ போன்றவர்கள் அப்படிப்பட்டவர்கள். எனவே குருஅருளுக்கு முழுவதும் தகுதியானவர்கள்.

ஆனால் எல்லா சந்தர்பங்களிலும் பிறன்கையை எதிர்பார்க்காமல் வாழ்க்கையை நடத்தமுடியாமல் போய்விடுவதுண்டு.அத்தகைய நிலைமையில் பிறரிடமிருந்து பெருகின்ற உதவி ஆன்ம வளர்ச்சிக்கு பெரிதாக உதவாவிட்டாலும் பாதை பிறழாது இருக்கலாம். எப்படி குடிநீரில் ஊட்டச்சத்து இல்லாவிடினும் அது உடலுக்கு அத்தியாவசியமோ அது போல சமுதாயத்தின் இயக்கத்திற்கு இரத்தலும் ஈகையும் ஒரு முக்கிய அங்கம்.

துறவிகளும், வறியவர்களும் அபலைகளும் இரத்தல் மூலமே ஈகைக்கான வாய்ப்பை பிறருக்கு அளிக்கிறார்கள்.
இதை திருவள்ளுவரும் அங்கீகரிக்கிறார்.

இரக்க இரக்கத்தக்கார்க் காணின், கரப்பின்அவர்பழி; தம்பழி அன்று (1051)
[யாசித்தலுக்கு ஏற்றவரிடம் சென்று யாசிக்கலாம்.அவர் மறைத்து இல்லை என்றால் அது அவருக்கே பழியாகும்,யாசிப்பவருக்கு இல்லை]
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் 
பெற்றான் பொருள் வைப்புழி (226)
[பொருளற்ற ஏழையின் கடும்பசியைத்தீர்ப்பதே தன் செல்வத்தை தனக்குப்பின் உதவுவதற்காக சேர்த்து வைக்கும் சிறந்த இடமாகும். ]
பாலும் நீரும் உடலுக்கு இன்றியமையாதது போல ஈகையும் இரத்தலும் உலகில் அற வாழ்க்கைகு இன்றியமையாதது.

ஆனால் பிறரை துன்புறுத்தி பயனடைபவர் போக்கு அசுரகுணத்தை சேர்ந்தது. அதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவை பிறரின் இரத்தத்தை குடிப்பதற்கு சமானமாக சொல்கிறார் கபீர்.

குருநானக் இந்த நிகழ்ச்சி மூலம் சொல்ல வருவது என்னவென்றால் எவனொருவன், பாகோ போன்ற சித்தசுத்தி இல்லாதவர் கையால் உணவை ஏற்பானோ அவனது சித்தமும் அன்னமிட்டவனின் சித்தத்தைப் போலவே அசுத்தம் ஆகிவிடும் அபாயம் உள்ளது. (இதை எழுதும்போது இதை ஒட்டிய இன்னொரு கதையும் நினைவுக்கு வருகிறது. பதிவின் நீளம் கருதி அதை பின்னொரு சமயம் பார்ப்போம்).
நம் எண்ண அதிர்வுகள் எந்த அளவுக்கு பிறரை பாதிக்கக்கூடும் என்பதையும் அதன் காரணமாக நல்ல எண்ணங்களை வளர்ப்பதிலும் காப்பதிலும் ஒவ்வொருவருக்கும் உள்ள பொறுப்பும் இதன் மூலம் எடுத்துக்காட்டியிருக்கிறார் மகான் குரு நானக்.

செவ்வாய், 24 நவம்பர், 2015

நீடித்த ஆயுள் தரும் கார்த்திகை தீப வழிபாடு

றைவனை ஜோதி வடிவாக வழிபடுவது தொன்று தொட்டு இருந்து வரும் மரபு ஆகும்.

‘‘ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி’’ என மாணிக்கவாசகர் கூறுவார்.

நினைத்தால் முக்தி தரும் திருவண்ணாமலையில் சிவபெருமான் ஜோதி வடிவாக தோன்றினார். இதை நினைவு கூரும் விதத்தில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தின் போது, திருவண்ணாமலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகின்றது.
தீப வழிபாடு என்பது நீண்ட நெடிய காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. வட நாட்டில் தீப வழிபாடு என்பது ‘தீபாவளி’ என்றும், தெற்கே ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது. தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான திருஞான சம்பந்தர் மயிலாப்பூரில் பாடிய திருப்பதிகத்தில் பூம்பாவை என்ற பெண்ணுக்கு உயிர் கொடுப்பதற்காக பாடிய போது... ‘‘கார்த்திகை விளக்கீடு காணாது போதியோ பூம்பாவாய்’’ என்று பாடியுள்ளார்.
இதன் மூலம் கி.பி 7, 8–ம் நூற்றாண்டில் இருந்தே, கார்த்திகை வழிபாடு சிறப்பாக கொண்டாடப்படுவது தெரிகிறது. தீபத்தின் நடுவில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருள்வதாக ஐதீகம். எனவே தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் முப்பெருந்தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம்.
அடிமுடி காணாத வரலாறு
படைக்கும் கடவுளாகிய பிரம்மாவுக்கும், காத்தல் கடவுளாகிய திருமாலுக்கும் இடையே ‘யார் பெரியவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. அப்போது சிவபெருமான் ஆதியும், அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியாய் தோன்றினார். ‘இருவரில் யார் எனது அடியையோ (பாதம்), முடியையோ காண்கிறீர்களோ அவர்களே பெரியவர்’ எனக் கூறினார். 
திருமால், வராக உருவம் கொண்டு திருவடிகளை காணச் சென்றார். பிரம்மா அன்னப்பறவை உருக்கொண்டு திருமுடியை காண பறந்து சென்றார். ஆனால் இருவரும் அடியையோ, முடியையோ காணமுடியாமல், அகங்காரங்கள் அழிய பெற்றவர்களாக சிவ பரம்பொருளே உலகின் முழு முதற் பரம்பொருள் என்பதை உணர்ந்துகொண்டனர். தங்களது பிழையை பொறுத்து அருளுமாறு சிவ பெருமானை பிரார்த்தனை செய்தனர். 
உடனே சிவன், சிவலிங்க திரு உருவத்தோடு ஜோதிப்பிழம்பில் இருந்து வெளிப்பட்டார். அப்போது திருமால், பிரம்மா இருவரும் சிவபெருமானை வழிபட்டு உண்மை ஞானம் பெற்றனர். ஜோதிப்பிழம்பு அருணாசலமானது. அதில் இருந்து தோன்றிய சிவலிங்கம் அருணாசலேசுவரர் ஆனார். இந்த நிகழ்ச்சியை நினைவுகூரும் விதத்தில் தான், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. மாதந்தோறும் கார்த்திகை விரத நாள் வருகிறது. கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை தினத்தை ‘திருக் கார்த்திகை’ என்பர். 
விரதம் இருப்பது எப்படி?
கார்த்திகை முதல் நாளன்று பரணி நட்சத்திர நாளில், பகலில் ஒருவேளை மட்டும் உணவருந்த வேண்டும். கார்த்திகைஅன்று அதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்தி இரவு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும். மறுநாள் அதிகாலையில் காலைக்கடன் களை முடித்து நீராடி பாலினை அருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். உமாதேவிக்கு சிவபெருமான் தனது இடப்பாகத்தினை கொடுத்து ஆட்கொண்டதும் இந்நாளில்தான். அன்று ‘‘ஓம் நமச்சிவாய வாழ்க’’ என்று சொல்வது தீராத வினைகளை தீர்த்து வைக்கும். நீங்காத செல்வத்தையும் வழங்கும். நீடித்த ஆயுளை தரும். 
கார்த்திகை விரதத்தை தொடர்ந்து கடைப்பிடித்தால் சுகபோக வாழ்வு வாழலாம். இந்த விரதத்தை 12 ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்த ரிஷிகளுக்கு மேலான பதவியை அடைந்தார். 
வீடுகளில் மாலை பவுர்ணமி நிலவு தோன்றும் நேரத்தில் வீட்டு வாசலில் வாழைக்கன்று நட்டு வைத்து அதன்மேல் தீபம் ஏற்றியும், வீடுகளுக்குள் வெளிச்சம் தரும் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றியும் அழகுபடுத்திட வேண்டும். இதைக் கார்த்திகை விளக்கீடு என்றும், சர்வலாய தீபம் என்றும் அழைக்கின்றோம். 
தீபம் இருளை நீக்கிப் பொருளை விளக்கம் பெறச் செய்கிறது. தீபம் பிரகாசமாக இருக்குமிடத்தில் லட்சுமி கடாட்சம் உண்டாகும். 12  ஆண்டுகள் விரதமிருந்து முருகனை பிரார்த்தனை செய்வதால் வேண்டும் வரங்களைப் பெறலாம். கார்த்திகை தீபத்தன்று முருகன் ஆலயங்களில் தீப விழா இடம் பெறுவது குமாராலய தீபம் என்று அழைப்பர். 
கார்த்திகை மாதம் முழுவதும்  மாலை வீட்டு வாசலில் விளக்கேற்றி வைக்கின்ற பழக்கம் உண்டு. கார்த்திகையன்று முருகன் ஆலயங்களில் மாவிளக்கு போட்டு வழிபாடு செய்வர். ஆலய முன்புறத்தில் காய்ந்த ஓலை, மட்டை, இலைகளால் பனைவடிவில் கட்டப்பட்ட சொக்கப்பனை ஏற்றி ஜோதி வடிவாகக் காட்சியளிக்க செய்வர்.
சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து தரிசனம் செய்வர்.
பூஜைக்கேற்ற விளக்கு
குத்து விளக்கு அல்லது பூஜை விளக்குகளுக்கு வெள்ளி விளக்கு சிறப்புடையது. ஐம்பொன் விளக்கு அடுத்து சிறப்புடையது. வெண்கல விளக்கு அடுத்து சிறப்புடையது. பித்தளை விளக்கு, அதற்கு அடுத்து சிறப்புடையது. எக்காரணம் கொண்டும் எவர் சில்வர் விளக்கை பூஜைக்கோ, வீடுகளில் ஏற்றுவதற்கோ பயன்படுத்தக் கூடாது. அதைவிட மண் அகல் விளக்கு உத்தமம்.
நெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் கலந்து அதன் மூலம் தீபம் ஏற்றி, எவரொருவர் ஒரு மண்டலம் (45 அல்லது 48 நாட்கள்) பூஜை செய்கிறார்களோ அவர்களுக்குத் தேவியின் அருள் கிடைக்கும்.
தீபம் ஏற்றும் முறை
முதலில் கிழக்கு நோக்கி ஒரு திரியும், 2–வது வடக்கு நோக்கி ஒரு திரியும், 3–வது மேற்கு நோக்கி, இரு திரியும் ஏற்ற வேண்டும். தெற்கு நோக்கி தீபம் ஏற்ற கூடாது. குளிர்விக்கும் போது, முதலில் மேற்கே உள்ள திரிகளையும், 2–வது வடக்கே உள்ள திரியையும், 3–வது கிழக்கே உள்ள திரியையும் குளிர்விக்க வேண்டும். ஊதி அணைக்க கூடாது. மேற்கூறிய முறைப்படி 8 நாட்களுக்கு தினமும் 1 மணி நேரம் வீதம் நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் ஏற்றி  எரிய விடுவது நமது வீட்டில் உள்ள வாஸ்து குற்றங்களை சரி செய்யும். குழந்தைகள் செய்யும் சேஷ்டைகள் குறையும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள்.
சொக்கப்பனை கொளுத்துவது ஏன்?
திருக்கார்த்திகை தினத்தன்று சிவாலயங்களிலும், முருகன் கோவில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. கோவிலுக்கு அருகில்  பனை மரத்தை நாட்டி அதில் பனை ஓலைகளையும், வெடிகளையும் இணைத்து கட்டுகின்றனர். மாலையில் சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. சில கோவில்களில் பனை ஓலைகளை ஒரு சிறு கூண்டைப்போல கட்டி அதை எரிக்கின்றனர். ஆணவம் எரிகிறது. கூடவே அஞ்ஞானமும் எரிகிறது. இறைவன் ஜோதி வடிவாக காட்சி தருகிறான்.
சிவபெருமான் திரிபுரங்களை எரித்த நாள் திருக்கார்த்திகை நாளாகும். சிவன் எரித்த பாவனையை வெளிப்படுத்துவதற்காக சொக்கப்பனை கொளுத்து கின்றனர். மேலும் அடி, முடி தேடிய விஷ்ணுவுக்கும், பிரம்மனுக்கும், ஆதி, அந்தம் இல்லாத அருட்பெரும் ஜோதி வடிவமாக சிவபெருமான் காட்சி கொடுத்தார். நெருப்புக்கு முதலும், முடிவும் கிடையாது. சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்ததை நினைவு கூரும் விதத்திலும் சொக்கப்பனை கொளுத்துகின்றனர்.
விளக்கேற்ற நல்ல நேரம்
கார்த்திகை தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை விளக்கேற்றினால் புண்ணியம் சேரும். மாலை பிரதோஷ வேளையில் 4.30 மணி முதல் 6 மணி வரை தீபம் ஏற்றினால் கல்வி அபிவிருத்தியாகும். திருமண தடை விலகும். வீட்டில் மாலை 6.30 மணிக்கு அனைவரும் அவசியம் விளக்கேற்ற வேண்டும். விளக்கை குளிர்விக்கும் போது கையால் அணைக்கக் கூடாது. பூவினால் குளிர்விக்கலாம்.
அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன்பின்பு 5 நூல் கொண்ட நூல்திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் செல்வ செழிப்பு உண்டாகும், மகிழ்ச்சி நிலவும், நல்ல வேலை கிடைக்கும். குழந்தை பாக்கியம், மனதுக்கு ஏற்ற வரன் அமையும் மற்றும் சகலவித செல்வங்களும் கிடைத்து வாழ்வில் வளம் பெருகும்.

வெள்ளி, 20 நவம்பர், 2015

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலம்! திருவருணை,

கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தங்க மலையாகவும், கலியுகத்தில் ஞானிகளின் பார்வையில் மரகத மலையாகவும், நம் போன்ற சாமானியர்களுக்குக் கல்மலையாகவும் காட்சி கொடுக்கும் மலை திரு அண்ணாமலை. அண்ணுதல் என்பதன் எதிர்ப்பதம் அண்ணா என்பது அல்லவா? நெருங்க முடியாத மலை திரு அண்ணா மலை. ஈசன் ஒளிப் பிழம்பாய்ச் சுடர் விட்டுப் பிரகாசிக்க பிரம்மாவாலும், திருமாலாலும் அவனை நெருங்கவே முடியவில்லை அன்றோ? இதைத் தவிர இந்தத் தலத்திற்கு அருணாசலம் என்ற பெயரும் உண்டு. அருணன் என்பது சூர்யோதயத்துக்கு முன்னர் கீழ்வானம் காட்டும் செக்கச் சிவந்த நிறத்தைக் குறிக்கும். அப்படி சிவந்த நிறத்தாலான நெருப்பைக் குறிக்கும் அசலம் அருணாசலம். அருணாசலம் தவிர இந்தத் தலம் முக்திபுரி, அருணகிரி, திருவருணை, அருணை, சுத்த நகரம், சோணாசலம், அனல்கிரி, தென் கைலை, ஞா நகரம், அண்ணாநாடு, சிவலோகம், அண்ணாத்தூர், கெளரி நகரம், தேக நகரம், முக்தி நகரம், ஞான நகரம், சோணாத்ரி, அருணாத்ரி, தலேச்சுரம், சோணகிரி ஆகிய பெயர்களாலும் அழைக்கப் படுகின்றது. இந்த மலையானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 2,700 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. 
அருணாசல புராணம், உரோமசர், குத்சர், குமுதர், சகடாயர், அகத்தியர், குமுதாட்சர், வத்சர், வைசம்பாயனர், கணாசி, வியாக்ரபாதர், வாமதேவர், சனகர், சனத்குமாரர், வியாசர், மதங்கர், பதஞ்சலி ஆகியோருக்கு நந்தி தேவராலும், மார்க்கண்டேய ரிஷியாலும் கூறப்பட்டது எனத் தெரிந்து கொள்கிறோம். இந்த மலை உருவான கதை அனைவரும் அறிந்ததே என்றாலும் சுருக்கமாய்க் கீழே தருகிறேன்.
பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு முறை தங்களில் பெரியவர் யார் என்பது குறித்துச் சண்டை போட்டுக் கொண்டனர். தங்களுக்குள் எவர் பெரியவர் என்பதைச் சொல்லச் சரியான நபர் ஈசனே என்பதை அறிந்து கொண்டு அவரிடம் சென்று தங்களில் யார் பெரியவர் எனக் கேட்க, ஈசனும் தன்னை அடிமுதல் முடிவரை எவர் கண்டறிந்து வந்து சொல்கின்றனரோ அவரே பெரியவர் எனச் சொல்லிவிட்டுத் தான் ஜோதி ஸ்வரூபமாய் நின்றார். வராஹ உருவில் பூமியைக் குடைந்து கொண்டு விஷ்ணு அடியைக் காணச் செல்ல, அன்னமாக மாறி பிரம்மா முடியைக் காணப் பறந்தார். வராஹ மூர்த்தியால் அடியைக் காண இயலவில்லை. மேலே மேலே பறந்து சென்று கொண்டிருந்த அன்னப் பறவையான பிரம்மாவுக்கு ஈசன் தலையில் சூடிய தாழம்பூ ஒன்று கீழே இறங்குவது கண்களில் பட, அந்தத் தாழம்பூவைச் சாட்சியாக வைத்துக் கொண்டு ஈசனிடம் தான் முடியைக் கண்டதாய்க் கூறுகிறார். வராஹ மூர்த்தியோ தன்னால் அடியைக் காண இயலவில்லை என்னும் உண்மையை ஒப்புக் கொள்கிறார். தாழம்பூவும் பிரம்மா முடியைக் கண்டதாய்ப் பொய்ச் சாட்சி சொல்ல கோபம் கொண்ட ஈசன், பிரம்மாவின் வழிபாடுகள் இனி பூவுலகில் நடக்காது என்றும், ஈசனின் வழிபாட்டில் இனித் தாழம்பூவைச் சேர்த்தல் கூடாது என்றும் கூற பிரம்மா தவறுக்கு மனம் வருந்தினார். அன்று முதல் ஈசனின் வழிபாட்டில் தாழம்பூவுக்கு இடம் இல்லை. 
தேவாதிதேவர்கள் வந்து ஈசனை வணங்கி அவர் அந்தத் திருக்கோலத்திலேயே பூவுல மக்களுக்கும் காட்சி கொடுக்கவேண்டும் எனக் கேட்க ஈசனும் அவ்வாறே ஆகட்டும் என்று கூற ஈசனின் வெப்பம் தாங்காமல் அனைத்து மக்களும், தேவர்களும் தவிக்க, ஈசனும் தன் பெருங்கருணையால் அக்னி மலையாக மாறி நின்றான் என்பது தல புராணம். திருஞான சம்பந்தராலும், திருநாவுக்கரசராலும் பதிகங்கள் பாடப்பட்டது. பழைய லெமூரியாக் கண்டத்தின் ஒரு பகுதி எனச் சரித்திர ஆராய்ச்சியாளர்களால் கூறப்படுகிறது. இதை பகவான் ஸ்ரீரமணரின் முக்கிய சீடர் ஆன பால் பிரண்டன் என்பவர் ஆதாரங்களோடு, தனது Message from Arunachala என்ற புத்தகத்தில் எழுதி இருப்பதாய்த் தெரியவருகிறது. மேலும் இந்த மலையானது இறுகிய எரிமலைக் குழம்பே என்பது விஞ்ஞான ஆய்வாளர்களால் நிரூபிக்கப் பட்டு இமயத்தை விடவும் பழமையானது என்பது கூறப்பட்டுள்ளது. அருணாசலத்தைப் பற்றிய நூல்கள் சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டவை இருப்பதாயும் தெரிய வருகிறது. சாசனங்கள் தமிழ், சமஸ்கிருதம், கன்னடம் ஆகிய மொழிகளில் காணப்படுகின்றன. பல்லவர் காலங்களிலேயே இந்தக் கோயில் கருவறை எழுப்பப் பட்டிருக்கவேண்டும். மதில் சுவர்கள் பிற்காலச் சோழர்காலங்களில் கட்டப் பட்டிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இதைத் தவிர, நாட்டுக்கோட்டை நகரத்தார் 1903-ம் வருஷம் திருப்பணிகள் செய்து திருக்குடமுழுக்கும் செய்வித்திருக்கின்றனர். 
கார்த்திகை தீபம் நெருங்கி விட்டதால் திருவண்ணாமலை தொடரை முதலில் போட்டு விட்டுப் பின்னர் சிவ வடிவங்களில் மற்றவர்கள் தொடருவார்கள். பொறுத்துக் கொள்ளவும். நன்றி.

வெள்ளி, 13 நவம்பர், 2015

உயர்தனிச் செம்மொழி தமிழ்மொழி என்கிறது இந்துவேதம்:

இப் பூவுலகில், இப் புவிப்பரப்பில், இப்பூமியில், இவ்வையகத்தில், இந்த உலகத்தில், இந்த ஞாலத்தில் முத்தமிழ்மொழி ஒன்றுதான் பல நூறாயிரக் கணக்கான சொற்கள் பிண்டங்களையும், பயிரினங்களையும், உயிரினங்களையும், ஐம்புலன்களால் உணர்ந்தறியக் கூடியவைகளையும், ஆறாவது அறிவுக்கு அப்பாற்பட்டவைகளையும் பெயரிட்டுக் குறிப்பிட்டு பொருள் விளக்கம் தரப்பட்டு இருக்கிறது.
ஏனென்றால், இந்த முத்தமிழ்மொழி அண்டபேரண்டங்களை ஆளுகின்ற மூலப் பதினெண்சித்தர்களின் தாய்மொழியாகவும், 1359 அண்டபேரண்டங்களிலும் அருளுலக ஆட்சிமொழியாகவும், அருளூறு அமுதத் தெய்வீகச் செம்மொழியாகவும் அருளுலகப் பேருண்மைகளை அநுபவப் பூர்வமாக அறிந்து கொள்ள உதவக்கூடிய ஒரே ஓர் உயர்தனிச் செம்மொழியாகவும் விளங்குகின்றது.
இந்த முத்தமிழ் மொழியில் வழங்கப்பட்டுள்ள இந்துவேதம் எல்லா அண்டங்களிலும் இருந்த வேதம், இருந்து வருகின்ற வேதம், இருக்கப் போகின்ற வேதம் என்ற முக்காலப் பொருளின் (வினைத்தொகை) ‘இருக்கு வேதம்' என்று பெயரிடப்பட்டிருக்கிறது பதினெண்சித்தர்களால்.” [இருக்கு 1:4:48]
[ஆதிசிவனார் அருளிய:இருக்குவேதம் காண்டம்-1, மண்டலம்-4, நாள்வாசகம்-48:]
ஞானாச்சாரியார், ஞாலகுரு சித்தர்,
அரசயோகிக் கருவூறார்
'அன்பு சித்தர்'

செவ்வாய், 10 நவம்பர், 2015

உன்னுள் இருக்கும் மகா சக்தியை அறியும் சித்தி உன்னிடம் மட்டுமே உள்ளது..


இயற்கையின் ரகசியங்களை நீங்கள் அறியத் தொடங்கிவிட்டால், உங்கள் சுவாசத்தின் அளவையும் கவனித்துக்கொள்ளுங்கள், இல்லையேல் பூமியில் உங்களுக்கு இடம் இல்லாமல் போய்விடும். ஏன் என்றால்
இயற்கையின் ரகசியத்தை அறிய முற்படும் போது ஆயுளின் மீது பற்று இருக்க
கூடாது என்பதே முதல் படி ஆகும். என்றும் அனைத்தும் தெரியும் என்ற கர்வம்
தலைக்கு ஏறாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏன் என்றால் தலை பாரம் தாங்காமல் கீழ விழுந்துவிடப்போகிறது. சமுதாயத்தில் மதிப்பும் , கெளரவமும் நாம்
கேட்டு வாங்கும் பொருள் அல்ல! நமது நடவடிக்கைகளை (செயல்பாடுகளை)
கவனித்துக்கொண்டு இருக்கும் சமுதாயம் தானாக கொடுப்பதே மதிப்பும் கௌரவமும் ஆகும்! இயற்கையின் இரகசியங்களை அறிய முற்படும்
போது இப்பூவுலகில் இருக்கும் அனைத்தையும் அதன்
நிலையிலேயே ஏற்றுக்கொள்ளுங்கள். அனைவரையும் மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்,
சம அனுபவம் உடையவர்களிடம் உங்கள் திறமைகளை காட்டுங்கள், உங்களை விட
அனுபவம் குறைந்தவர்களிடம் உங்கள் திறமைகளை காட்டாதீர்கள். மேல் நோக்கிய
பார்வையே உங்களை மேலும் உயரச் செய்யும் !
{ தனக்குள் இருக்கும் சாவியை அறிந்து கொண்டால் பிரபஞ்சத்தின்
பூட்டை திரக்கமுடியும். }
{ தன்னை பற்றி அறிய முற்படுபவன் மகான் ஆக போகிறான் என்று
அர்த்தம்... உன்னுள் இருக்கும் மகா சக்தியை அறியும் சித்தி உன்னிடம் மட்டுமே
உள்ளது... }
ஓம் நமசிவய

செவ்வாய், 3 நவம்பர், 2015

திருமூல நாயனார் ஞானம்

அடியாகி அண்டரண்டத் தப்பால் ஆகி
அகாரமெனுமெழுத் ததுவே பாதமாகி
முடியாகி நடுவாகி மூலந் தன்னில்
முப்பொருளுந் தானாகி முதலுமாகிப்
படியாய்முப் பாழற்றுப் படிக்கு மப்பாற்
படிகடந்த பரஞ்சோதிப் பதியுமாகி
அடியாகு மூலமதே அகார மாகி
அவனவளாய் நின்றநிலை யணுவ தாமே. 1

அதுவாகி அவனளாய் எல்லா மாகி
அடிநடுவு முடிவாகி யகண்ட மாகிப்
பொதுவாகிப் பல்லுயிர்க ளனைத்துக் கெல்லாம்
புகலிடமாய் எப்பொருட்கு மூலமாகி
மதுவாகி வண்டாகிச் சுவையு மாகி
மலராகி மணமாகி மதிக்க வொண்ணா
அதுவாரும் அகாரமதே மூலமாகி
அண்டமெல்லாந் தாங்கிநின்ற அம்மூலமே. 2

மூலமெனு மாதார வட்டந் தானே
முச்சுடரு முக்கோண மூன்று நாடிச்
சீலமெனுஞ் சிவலிங்க பாத தீர்த்தந்
திருவடியுந் திருமேனி நடமுமாகும்
கோலமுடன் அன்ட மெல்லாந் தாங்கிக்கொண்டு
கொழுந்து விட்டகம்பமதாய் மேலேநோக்கி
ஆலமுண்ட கண்டமெலாந் தானாய் நின்ற
அகாரமுதல் அவ்வெழுத்தை அறிந்துபாரே. 3

அரிந்ததுவுந் தற்பரமே அகார மாகும்
அறிவுடைய உகாரம்சிற் பரம தாகும்
பிறந்ததுவு முலகமெலாஞ் சமயந் தானாம்
பேதமெனுங் கருவிவகை யெல்லா மாகும்
அறிந்ததுவும் அகாரமெனும் பாதந் தன்னை
அடிமுடியென்று அனுதினமும் அறிந்து நோக்கே. 4

நோக்கமுடன் மூலமெனும் பாதந் தன்னை
நுண்பொருளாஞ் சிற்பரத்தினூடே நோக்கு
தீர்க்கமுட னாதார வகையுந் தாண்டித்
திருநயனம் நாசிநெற்றி நடுவே பார்த்துப்
போக்கறிந்திங் கிந்தநிலை நோக்க வல்லார்
புரிசடையோன் தன்னுடைய புதல்வ ராவார்
ஆக்கமுடன் அருட்சுடர்போற் குருவைத் தானே
அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே. 5

ஆசானு மீசானு மொன்றே யாகும்
அவனவளு மொன்றாகும் அது தானாகும்
பேசாத மந்திரமு மிதுவே யாகும்
பேரொளியின் வடிவாகும் பேரு மாகும்
நேசாருங் கலைகளெலாந் தானே யாகும்
நிலையான ஓங்கார பூட மாகும்
ஈசானை ஆசானாய்க் காணும் பேர்க்கிங்
கின்பமுடன் கயிலாச மெய்த லாமே. 6

எய்தரியா பரசிவத்தின் மூலந் தன்னில்
இருசுடரும் உதித்தொடுங்கு மிடமே யென்று
மெய்த்தொழுயுஞ் சுழுமுனையே கம்ப மாகி
மெய்ப்பொருளாஞ் சோதி யென மேவி நிற்கும்
இவ்வகையே மூலமெனும் பாதந் தன்னை
இருநேர மர்றிடத்தே யிறைஞ்சிக் காணே. 7

காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்
காணரிய பொருளாகுங் காட்டும் போதே
ஆண் பெண்ணாய் அலியாகி அடியுமாகி
அப்பாலைக் கப்பாலாய் அமர்ந்த சோதி
வீண்பயிலும் வேதமெல்லாந் தேடிக் கானா
வெறும்பாழ தாகியே மேவி நின்றார்
சேண்பயிலும் செகசோதி மூலந் தன்னைத்
தேடரிய பாதவென்றே தெளிந்து நோக்கே. 8

தெளிவரிய பாதமது கார மாகிச்
சிற்பரமுந் தற்பரமுந் தானேயாகி
அழிவரிய சோதியது தானே யாகி
அடிநடுவு முடியாகி யமர்ந்து நின்று
மொழிவரிய முதலாகி மூலமாகி
முச்சுடர்ந் தானாகி முடிந்த் சோதி
சுழியினிலே முனையாகிக் கோப மாகிச்
சொல்லரிய வெழுத்தொன்றே தொகுத்துப் பாரீர். 9

(முடிந்தது)