புதன், 29 ஜூன், 2016

பிறவி சூக்ஷமத்தை அறுத்தெரியும் சூக்ஷமம்!

மனம் என்னும் மாயையில்,
மும்மல மயக்கத்தில்,
கர்மவினையின் தேகத்தால்,
பிறவிகள் பல எடுத்து,
பிறவியின் சூக்ஷமத்தை அறியாது, சூழற்ச்சியில் சிக்கிடுமே,
சிக்கிய பிறவியை தான் உணர
பரப்ரம்த்தின் சாட்சியான குருவிடம் சரண்புகுந்து,
ஆத்ம விழிப்பு பெறும் வித்தை தான் உணர்ந்து,
விழிப்பு பயணத்தில்,
ஒளியும் ஒலியில் கரைந்து,
இறை இருப்பில் அமர்வதே,
பிறவி சூக்ஷமத்தை அறுத்தெரியும் சூக்ஷமமாகும்.

வியாழன், 23 ஜூன், 2016

முன்வினைப் பயனை தீர்த்திடும் உபாயம்!


ஒருவருடைய எண்ணம், செயல், சிந்தனைகளையொட்டியே அவர்களின் வினைகளும் அதற்கான எதிர் வினைகளும் அமைகின்றன. சந்தர்ப்பம் அப்படி!, சூழ்நிலை அப்படி!, நான் என்ன செய்வேன்; என்று நமது வினைகளின் பலன் அல்லது பழியை அவற்றின் மீது சுமத்தி, நமது செயல்களை நியாயப் படுத்திக் கொள்கிறோம். உண்மையில் சுற்றம், சூழல் என்பவை எப்போதும் சாட்சிகளாகவே இருக்கின்றன.

முந்தைய பிறவியில் செய்த வினைகளின் பலனாகத்தான் இந்த பிறவி எடுத்திருக்கிறோம் என்பது காலம் காலமாய் நமது மரபியலில் நம்மப் பட்டு வருகிறது. நல்லவைகளை செய்வதவனுக்கு நல் வினைகளும், தீமைகளை செய்தவனுக்கு தீய வினைகளும் இந்த பிறப்பின் பரிசாய் கிடைக்கின்றன. இதுவே நமது பிறப்பு, வாழ்க்கை, வசதி, வாய்ப்பு, தொழில், விசிப்பிடம், திருமணம், உணவுப் பழக்கம் ஆகியவற்றை தீர்மானிக்கிறது என்கின்றனர்.
இதன் பொருட்டே ஒருவர் முன்னெடுக்கும் செயல்களில் தடங்கல், முட்டுக் கட்டை, தோல்விகள், வெற்றிகள், ஏமாற்றங்கள், அவமானங்கள் நிகழ்கிறது என்கின்றனர். ஆக, எவரும் தன் வினைப் பயனை அனுபவிக்காமல் தப்பிக்க இயலாது என்பது புலனாகிறது.

இத்தகைய வினைப் பயனை ஞானிகளும், முனிவர்களும் தங்களை அணுகாது எவ்வாறு நீக்குகின்றனர் என்பதை திருமூலர் தனது திருமந்திரத்தில் பின் வருமாறு கூறுகிறார்.
"தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்

முன்னை வினையின் முடிச்சை யவிழ்பவர்கள்

பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்

சென்னியின் வைத்த சிவனரு ளாலே"

- திருமூலர்-
தன்னை உணர்ந்து, தன்னிலை அறிந்த ஞானியர், தமது முன்வினை தொடர்பை சிவ சிந்தனையால் இல்லாதொழித்து விடுகிறார்கள். பின்னர் வர இருக்கும் வினைகளை அவர்கள் அவை தோற்றம் பெறுமுன்பே இவ்வாறு சிதைத்துவிடுவர். ஞானியர் இவை அனைத்தையும் தங்கள் சித்ததில் இருக்கும் சிவனருளால் செய்து முடிப்பார்கள்.

செவ்வாய், 14 ஜூன், 2016

பருவத்தே பயிர்செய்!

ஔவை பிராட்டியார் அருளிய நீதி நூலான ஆத்திச் சூடியில் இடம்பெற்ற வரிதான் "பருவத்தே பயிர் செய்". இந்த எளிய ஒற்றை வரியின் ஊடே பொதிந்திருக்கும் வாழ்வியல் தத்துவம் மகத்தானது. அதாவது செய்யக் கூடியவைகளை காலத்தே செய்யத் தவறிவிட்டு பின்னர் வருந்திப் பயனில்லை.  காலத்தே பயிர் செய்வதைப் போல நம் கடமைகளை உடலில் வலுவும் திறனும் இருக்கும் போதே செய்து விட வேண்டும். ஏனெனில் நம்முடைய இளமை நிலையில்லாதது.
இதே கருத்தினை திருமூலர்  பி
ன்வருமாறு விளக்குகிறார்.

கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில ஹாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே!

காலையில் கீழ்த்திசையிலே இளமையாய் எழுந்து விரைந்து மேற்சென்ற கதிரவன் நண்பகலில் இளமைத் தன்மை நீங்கிப் பின்னர் முதுமை எய்தி மாலையில் மேற்திசையில் வீழ்ந்து மறைதலைக் கண்ணாரக் கண்டும், ‘இளமை யெழுச்சி என்றும் நிலையுடையது அல்ல’ என்பதனை மக்கள் உணர்வது இல்லை. மேலும் தன் வீட்டிலே பிறந்த பசுவின் இளங்கன்று சில ஆண்டுகளில் காளைப் பருவம் நீங்கி முதுமையடைந்து எருதாய்ச் செயலற்று இறப்பதைக் கண்ட பின்னரும், இந்த உலகில் வாழும் மனிதர்கள் தமது இளமையும் அவ்வாறு நிலையற்றது என்று உணராதவர்களாக இருக்கின்றனர் என்கிறார்.

சூரியனும், கன்றும் சீக்கிரத்தில் இளமையை இழந்துவிடும் பொழுது, மனிதன் மட்டும் எவ்வாறு தோன்றியபடியே இளமையோடு இருக்க முடியும்?

சூரிய உதயத்தையும் மறைவையும் தினம் தினம் கண் கூடாக பார்த்தும்கூட, தோன்றிய பொருளுக்கு அழிவுண்டு என்பதை அறியாது,  கிடைத்தற்கரிய இளமைப் பருவத்தில் தீமைகளைச் செய்து நாம் நிர்க்கதிக்கு ஆளாகாமல் பஞ்சேந்திரியங்களையும் இளமையிலேயே ஜெயித்து வாழவேண்டும் என்கிறார் திருமூலர்.

இளமை கழிந்து போகுமுன் அருமையான செயல்களைச் செய்துவிட வேண்டும். முதுமையில் செய்ய எண்ணினாலும் கூட அச்செயல்களைச் செய்வதற்குரிய ஆற்றல் நமக்கு இல்லாது போய்விட வாய்ப்புள்ளது.  இதனை திருவள்ளுவப் பெருந்தகை பின்வருமாறு கூறியிருக்கிறார்.

 “அன்றறிவா மென்னா தறம்செய்க மற்றது
பொன்றுங்காற் பொன்றாத் துணை.”

புதன், 1 ஜூன், 2016

குண்டலினி யோகம்......

மூலாதாரத்தில் சுருண்டு கிடக்கும் குண்டலினி எனும் சக்தியை மூச்சு எனும் மூலக் கனலால் கிளப்பி உச்சி வரை ஏற்றி விடுவீர்களேயானால், அதனால் ஏற்படும் உஷ்ணத்தால் ப்ரம்ம கபாலத்தில் இருந்து அமிர்தமானது சுரக்கும். அதை உண்டு சுகித்து, லயித்திருக்கும் போது உடம்பெல்லாம் வியர்த்து குளித்து விட்டு வந்தது போல் இருக்கும். இதுவே இரகஸ்யம். அதாவது மூச்சு எனும் நெருப்பும், நெய் எனும் அமிர்தமும், வியர்வை எனும் நீரும் நம்மிடத்திலே இருப்பதை யோகத்தால் அறிந்து, சொல்ல வல்லமை உடையவர்க ளானால், எல்லை கடந்த ஜோதியாகிய ப்ரம்மத்தில் கலந்திருக்கலாம்.

இந்த மூச்சு எனும் சூக்கும நிலையை உணர்த்தும் பொருட்டே காலைத்(காற்று) தூக்கி நடனம் ஆடுவது போல நடராஜர் சிலையை வடிவமைத்தனர் முன்னோர்கள். பரம் என்றால் ஆகாயம் அல்லது விண் அல்லது வெட்டவெளி பரமசிவம் என்றால் பரமாத்மா. பரமசிவமான பரமாத்மா நடனம் ஆடுவது போலக் காட்சி தரும் சித் + அம்பரம் சிதம்பரம் ஆகாயத் தத்துவத்தை உணர்த்தும் தலமாகும். அங்கே பக்தர்களுக்குக் காட்டப்படும் சிதம்பர இரகசியமும் வெட்டவெளியாகிய பரத்தைக் குறிப்பதே. அதாவது விண் என்கிற வெட்டவெளி. விண்ணே உயிராக இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
நடராஜர் இடது காலை ஊன்றி வலது காலைத் தூக்கியும், பிறகு வலது காலை ஊன்றி இடது காலைத் தூக்கியும் நடனமாடிக் கொண்டிருந்தவர் திடீரென்று வலது காலைக் காது வரை நீட்டி இடது கையை மேல் தூக்கி நடனம் ஆடும் போது போட்டியாக உடன் ஆடிய காளியானவள் காலைக் காது வரைத் தூக்க வெட்கம் அடைந்து தோல்வியை ஒப்புக் கொண்டதாக புராணக் கதை சொல்வார்கள். அந்தக் கதையின் உள் நோக்கத்தை சொல்வார் யாருமில்லை.
ப்ராணாயாமம் அல்லது சந்தியாவந்தனம் செய்பவர்கள் முதலில் இடது நாசியை மூடி வலது நாசி வழியாக காற்றை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதற்காகவே நடராஜர் வலது காலைத் தூக்கி நடனம் ஆடுவது போலக் காட்டப்பட்டது. பிறகு வலது நாசியை மூடி இடது நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து நிறுத்துவார்கள். இதைக் குறிப்பதே நடராஜர் இடது காலைத் தூக்கி நடனம் ஆடுவது. உலைக்களத்தில் இரண்டு தோல் துருத்திகளை வைத்து இரண்டு கைகளால் மாற்றி மாற்றி அமுக்கி ஊதுவது போல வலதுகைப் பெருவிரல் மோதிர விரல்களை வலது இடது நாசிகளில் வைத்து, இரண்டு நாசிகள் வழியாகவும் ஒன்றை அடைத்து ஒன்றன் வழியாக மாற்றி மாற்றி காற்றை உள் இழுத்து நிறுத்த வேண்டும். இரண்டு மூச்சுகளையும் பின்னலாய் பின்னி உள்ளிருத்து நிறுத்த வேண்டும் என்பதைக் குறிப்பதே நடராஜர் ஒற்றைக் காலை காது வரை மேலே தூக்கி ஆடுவது போலக் காட்டப்படுவது.

குண்டலினி சக்தியே காளியாகச் சொல்லப்படுவதாகும். முறையாகப் பிராணாயாமம் செய்து வந்தால் அவள் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு உச்சி நோக்கி பயணிப்பாள் என்பதாகும். ஜீவாத்மா பரமாத்மாவை அடையத் தடையாக இருக்கும் மலங்கள் அனைத்துமே அரக்கனாக சித்தரிக்கப் படுகிறது. மூச்சுக் காற்றினால் குண்டலினியை மேலேற்ற முடியுமானால் நம் மேன்மைக்குத் தடையாக இருக்கும் மல மாயங்களாகிய அரக்கனை பரமாத்மாவானது அழித்துவிடும் என்றும் சித்தரிக்கப் பட்டுள்ளது. நாம் விடும் மூச்சுக்கு கால் எனறும் நூல் என்றும் பெயர் உண்டு. நூல் என்றோ ஒரு நாள் அறுபட்டு விடும் எனவே காலாகிய காற்றைப் பிடித்து மேலேறி வரவேண்டும் என்பதை விளக்குவதே நடராஜர் தத்துவம். அவர் காட்டுகிற அனைத்து நடனங்களும் யோகத் தத்துவங்களை உணர்த்துவதேயாகும்.
வலது, இடது மூக்குத் துவாரங்கள் சேருமிடம் புருவமத்தி. அதாவது இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளும் சேருமிடம். இந்த இடத்தையே திரிவேணி சங்கமம் என்பார்கள். நல்ல பாம்பும், சாரைப் பாம்பும் பின்னலாய்ப் பின்னி எழுந்து நின்று விளையாடுவது போல இடகலையும், பிங்கலையும் கூடி புருவமத்தியில் சுழுமுனையோடு சேர்ந்து விளையாடும் இரகசியங்களை தெரிந்து கொள்ளாமலேயே மாண்டு போன மானிடர்கள் பல கோடி உண்டு. வலது நாசி, இடது நாசி இரண்டிலும் மூச்சை தனித்தனியாக இழுத்து நடத்தி, நிறுத்தி பிறகு இரண்டு நாசிகளிலும் மூச்சை இழுத்து நடத்தி, நிறுத்த சக்தி உடையவர்களானால் பரஞானம், அபரஞானம் என்ற இரண்டு ஸ்தனங்களை உடைய உமாதேவியரோடு கூடி இருக்கும் சிவபெருமானைச் சேர்ந்து வாழலாம். நாம் தினசரி சுவாசிக்கும் சுவாசத்தின் எண்ணிக்கையாகும். குருபாதம் கூறும் குறிப்பு என்றால் குரு சொல்லிக் கொடுக்கிற படி செய்தால் சூக்குமம் விளங்கும். இருபாத நாகை நாதர் என்றால் இடகலை, பிங்கலை வழியாக நடக்கும் நாகன் எனும் மூச்சைக் காட்ட கால்களைத் தூக்கி நடனஞ் செய்த நடராஜரது மலரடிகளைக் காண்பாய் நெஞ்சே. அதாவது அவர் காட்டும் வழியில் அல்லது அவர் கால்கள்(காற்று)போகும் வழியில் போய் பரத்தைக் காண்பாய் நெஞ்சே. உயர்வாய் இருந்து தான் தானாய் நடந்து கொண்டிருக்கும் நாகனென்னும் லிங்கத்தை அறிவாய் நெஞ்சே. ……..நன்றி,,,,,

வெள்ளி, 20 மே, 2016

யார் சித்தன் ?

"இறந்தவர் ஐவர் அவர் இஷ்டமானவர்
எய்தும் அவர் இறந்தார் என்று எல்லார்க்குஞ்சொல்
மறந்தவர் ஒருவரென்றே மண்ணில் உள்ளோர்
வகையறிந்திடவே நின்று ஆடாய் பாம்பே!"
- பாம்பாட்டிச் சித்தர் -
ஐம்புலன்களின் ஆளுகைக்கு உட்பட்ட மனிதன் உயிர் நீத்தால் நீத்ததுதான். அவனால் மீண்டும் அந்த உடல் கொண்டு வாழ முடியாது. வேறு பிறவி எடுத்து வந்தாலும் உற்றார் உறவினரைப் பொறுத்தமட்டில் அவர் இறந்தவர்தான்.
ஆனால் இந்த புலன்களின் ஈர்ப்பு விசைகளைக் கடந்து தன்னையறிந்தவர்கள் ஜீவன் முக்தர்கள். அவர்கள் பிறப்பிற்கும் இறப்பிற்கும் அப்பாற்பட்டவர்கள். அவர்களே நிலையானவர்கள் என்கிற உண்மை அறிந்தோமென்று ஆடுபாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.
இத்தகைய ஜீவன் முக்தர்களைத்தான் சித்தர் பெருமக்களாக குறிப்பிடுகிறோம். அவர்கள் இறப்பிற்கு அப்பாற்பட்டவர்கள். ஜீவசமாதி அடைபவர்கள். ஒரே சமயத்தில் பல இடங்களில் ஜீவசமாதி கொள்பவர்கள். இதைச் சித்தர்கள் பலரும் ஒரு சித்து விளையாட்டாகவே கொண்டிருந்தனர்.

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

பனித்திரை!, மனத்திரை!


மனித மனம் என்பது எண்ணற்ற அனுபவங்களின் தொகுப்பு ஆகும். இவையே நமது ஞாபக இடுக்குகள் எங்கும் பரவி படிந்து நம்மை ஆளுகின்றன. இந்த அனுபவ தொகுப்பானது நன்மை, தீமை என்கின்ற இரண்டு எல்லைகளில் நின்று ஒன்றுக்கு ஒன்று முரணாகி குழம்புவதையே மனசாட்சி என உருவகித்துக் கொள்கிறோம்.இந்த மன சாட்சிதான் நமது எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகளை முன்னெடுத்து நடத்துகின்றன.

தெளிவான சிந்தனை உள்ளவன் சிறந்தவனாகவும், குழம்பிய சிந்தனை உடையவன் தோல்வியடைந்தவனாகவும் இருக்கின்றான். ஆக ஒருவனை உயர்த்துவதும், தாழ்வடைய செய்வதும் மனம் என்றாலும், அதன் மூலம் மேலே சொன்ன அனுபவங்களில்தான் அடங்கியிருக்கிறது.
இந்த தத்துவத்தை இன்னமும் எளிதாய் பாம்பாட்டி சித்தர் பின்வருமாறு விளக்குகிறார்.

"சூரியனைக் கண்ட பனி தூர ஓடல்போல்
சொந்த பந்தஞ் சிந்தபரி சத்த தலத்தில்
சூரியனைக் கண்டுதரி சித்தே அன்புடன்
அகலாமல் பற்றித் தொர்டந்து ஆடாய் பாம்பே!"
- பாம்பாட்டிச் சித்தர் -
பனி, புகைமூட்டம் போல் மிக அடர்த்தியானது. அதன் ஊடாக எதனையும் தெளிவாக பார்க்க முடியாது. இதனையே பனித்திரை என்பர். ஆனால் அப்படிப்பட்ட குழம்பிய பனித் திரையானது சூரியனின் ஒளி பட்ட மாத்திரத்தில் மாயமாய் மறைந்துவிடும்.
அந்த மாயத்திரை போலவே பாச பந்தங்களினால் சூழப் பட்டு, அதனில் திளைத்து குழம்பியிருக்கும் நமது மன நிலையானது, பரிசுத்த வஸ்துவான மேலான பரம் பொருளை மனதில் நிறுத்திய மாத்திரத்தில் சூரியனைக் கண்ட பனி விலகுவது போல், பொய்யான சிற்றின்பங்களை உணர்ந்து, அதன் மாயைகளில் இருந்து அகன்று தெளிவடையும் என்கிறார்.
இவ்வாறு பனித் திரையின் மாயையை நீக்கும் சூரியனைப் போல, நம் மனத்திரையின் மாயையை நீக்கும் பரம்பொருளின் பேரானந்த நிலை அகன்றுவிடாமல் தொடர்ந்து பற்றியிருப்போம் என்று ஆடு பாம்பே என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்.

வியாழன், 21 ஏப்ரல், 2016

யாருக்கு ஞான வழி?

ஒருத்தர் ஒரு வேலையை சரியா செய்ய வேண்டும் என்றால் அதற்கான தகுதி இருக்க வேண்டும்... இல்லையா? ஞான வழியில் போக என்ன தேவை என்று  இதுவரை படிகளைப்  பார்த்தோம். இது நமக்கு எப்போது இருக்கிறதோ இல்லையோ என்று  சந்தேகம் வேண்டாம்.  படித்து முடித்த பின்னும் எல்லோருக்கும் வந்துவிடாது. ஆனால் இது எவ்வளவு வேகத்தில்-  எந்தக் கால கட்டத்தில் வரும் வராது என்று ஒரு நியதியும் கிடையாது. எப்ப வேண்டுமானாலும் வரலாம்.  ஆனால் நடைமுறை  என்னவென்று தெரிந்து கொண்டால்  பின்னாளில் சிலது சௌகரியமா இருக்கும். அதுக்காக இப்போ இதைப் படிப்போம்.
விட்டதைப்  பிடிக்க - ஞான வழிக்கு தேவை சித்த சுத்தி.   இந்த சித்த சுத்தி சுலபமாக கிடைக்கிறது கர்ம வழியைப்  பின்பற்றுவதன் . பக்தி ஒருத்தருக்கு முதலும் சரி கடைசியிலேயும் சரி கட்டாயமா வேண்டும் என்பதையும் பார்த்து இருக்கிறோம். ஈஸ்வரன் மேலே அன்பைத்  திடமாக வைத்துக் கொண்டு மனதை அடக்குவது என்று  ஒவ்வொன்றாக செய்து கொண்டு போக வேண்டும்.
¨ஞான வழி  ஆராய்ச்சி தான் நாங்கள்  எப்போதுமே செய்ய வேண்டியது.  
மற்றது தொழில். மிகுதி  எல்லாம் உலக விஷயங்கள்: இந்த சரீரத்தை காப்பாற்ற  ஜீவனத்துக்காக  செய்கிறது¨ என்கிற உறுதி நமக்குள் இருக்க வேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு தீவிரமாக இதை செய்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு  உங்களுக்கு அருகில் முக்தி இருக்கிறது.  (அவரவரைப்  பொறுத்தது). இந்த விஷயங்கள் எல்லோர் புத்தியிலும் நுழையாது. 
யார் பல ஜென்மங்களாகப்  பலன் கருதாக் காரியங்களை செய்து சித்தம் சுத்தியாகி இருக்கிறார்களோ? அவர்களுக்கு சட்டென்று  பிடிபடும். மற்றவர்களுக்குத் தாமதமாகப் புரியக்  கூடும்.

இந்த சித்த சுத்தி இருக்கிறவன் மற்றும்படி பணக்காரனோ ஏழையோ; இந்த ஜாதியோ, அந்த ஜாதியோ; ப்ரம்மச்சாரியோ, குடும்பஸ்தனோ - இதெல்லாம் ஒரு பொருட்டு இல்லை. மனப்பக்குவம் ஒன்று தான் முக்கியமான விஷயம்.
இப்படி சித்த சுத்தி அடைந்த  ஒருத்தர்  மூன்று  துன்பங்களாலும் கஷ்டப்பட்டு ஓடி வந்து குருவை தேடி சரணாகதியடைந்து  உபதேசம் கேட்பதாக நூல் ஆரம்பிக்கிறது.
அதென்ன 3 துன்பம்?
1.பசி, தாகம், எங்கள் புலன்களுக்குக்  கேடு - கண் சரியாக தெரியவில்லை., காது சரியாக  கேட்கவில்லை, உடலில் உள்ள நோய்கள் இப்படி இருக்கிறது? சில துன்பங்கள். இதுக்கெல்லாம் பெயர் ஆதியாத்மிகம்.
2.மழை பெய்கிறது, சுனாமி, இடி விழுகிறது, வெள்ளம், விபத்துக்கள் இப்படி சிலது எல்லாம் இருக்கிறதே?. இதை ஆங்கிலத்தில்  act of god என்பார்கள். தெய்வச் செயல்கள். இதெல்லாம் நம்ம கையிலே இல்லை. (ஆனா பெய்கிற மழையை இன்னும் பிரச்சினை ஆக்கிக்கொள்ள நமக்கு தெரிவு  இருக்கு!) இப்படி நிகழ்கிறதால்  வருகிற துன்பங்கள் ஆதி தெய்விகம்.
3.திருடர்கள், கொலைகாரர்கள், மிருகங்கள், பாம்பு இது போல மற்றப்  பிராணிகள் மூலமாக  நமக்குத்  துன்பங்கள் ஏற்படும். இது ஆதி பௌதிகம்.
இந்த மூன்று வகை துன்பங்கள் எல்லாருக்கும் தான் இருக்கும். இல்லையா? இதில் இருந்து விடுபட நாம் எடுக்கின்ற முயற்சி தான்  வெவ்வேறு. பொதுவா நாம் செய்கிறதால்  கிடைப்பது தற்காலிகத்  தீர்வுகள்தான்.
11. சாதன மின்றி யொன்றைச் சாதிப்பா ருலகி லில்லை
ஆதலா லிந்த நான்கு மடைந்தவர்க் கறிவுண் டாகும்
நூதன விவேகி யுள்ளி னுழையாது நுழையுமாகில்
பூதசென் மங்கள் கோடி புனிதனாம் புருட னாமே

சாதனமின்றி ஒன்றைச் (ஒரு தொழிலை) சாதிப்பார் உலகில் இல்லை. ஆதலால் இந்த [சாதனங்கள்] நான்கும் அடைந்தவர்க்கு அறிவு (சொரூப ஞானம்) உண்டாகும். நூதன விவேகி உள்ளின் (மனதில்) [ஞானம்] நுழையாது. நுழையுமாகில் பூத சென்மங்கள் கோடி [-இல் சித்த சுத்தி அடைந்த] புனிதனாம் புருடனாமே.

12. முன் கூறிய சாதனங்கள் நிறைந்த ஒருவர் அதிதீவிர பக்குவத்தை கூறல்
{இனி ஆசிரியர் ஒரு சீடனுக்கு உபதேசம் செய்வது போன்ற நடையில் நூல் செல்கிறது}

இவனதி காரி யானோனிந்திரியங்களாலும்
புவனதெய் வங்க ளாலும் பூத பௌதிகங்களாலும்
தவனமூன்றடைந்து வெய்யிற் சகித்திடாப் புழுப்போல் வெம்பிப்
பவமறு ஞானதீர்த்தம் படிந்திடப் பதறினானே!

இவன் [இந்த சாதனம் நான்கும் உடையவன்] அதிகாரியானோன். (இந்த நூலுக்கு அதிகாரியாவான்) இந்திரியங்களாலும், (உடல் சம்பந்தப்பட்ட வயிற்று வலி, சிரங்கு, கண்வலி போன்ற துன்பங்கள் -ஆதியாத்மிகம்) புவன தெய்வங்களாலும் (பனி, மழை, காற்று முதலியவை, சுவர் இடிந்து விழுதல், மரம் முறிந்து விழுதல் போன்ற தெய்வச் செயல்களாலும் -ஆதி தெய்வீகம்), பூத பௌதிகங்களாலும் (மற்ற மனிதர், விலங்குகள் போன்றவற்றாலும் -ஆதிபௌதிகம்) தவன (தாபம்) மூன்று அடைந்து, வெயில் சகித்திடா புழு போல் வெம்பி பவம் அறு (பிறவி நீக்கும்) ஞான தீர்த்தம் படிந்திட (மூழ்க) பதறினானே (விரைந்தானே).

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

பிரம்மம் என்ற சொல்.....

பிரம்மம் என்ற சொல்லிலிருந்து வடமொழியில் பயன்படுத்தப்படும்
சொற்றொடர்கள் சில தமிழிலும் அப்படியே நூல்களில் வழக்கில் உள்ளன.
அவைகளில் முக்கியமானவை:
‘பிரம்மஞ்ஞானி’: பிரம்மத்தை நேர்முகமாகவே அறிந்தவர்.
 இவர் பிரம்மமாகவே ஆகிறார் என்பது உபநிடத-வாக்கியம்.

‘பிரம்மஞ்ஞானம்’: பிரம்மத்தைப் பற்றிய நேர்முக அறிவு.

... ‘பிரம்ம-நிர்வாணம்’: பிரம்மமாகவே ஆகிவிடல்.

‘பிரம்மச்சாரி’: பிரம்மமாகிற வேதங்களை கற்பதொன்றே குறியாயிருப்பவன்.

‘பிரம்மார்ப்பண்ம்’: பிரம்மத்திற்கு அர்ப்பணம்.

‘பிரம்மானுபவம்’: பிரம்மத்தை நேர்முகமாகக்கண்ட அனுபவம்.

‘பிரம்மபாவம்’: பிரம்மமாகவே பார்க்கும் நிலை.

‘பிரம்மோபதேசம்’: பிரம்மமாகிற வேதத்தின் உயிர் மூச்சாகிய காயத்ரீ மந்திரத்தை முறையாக உபதேசித்தல்.

‘பிரம்ம சூத்திரம்’ : பிரம்மத்தைப்பற்றிய பொருளனைத்தும் 555 சூத்திரங்களில் உள்ளடக்கிய பிரமாண நூல்.

வியாழன், 24 மார்ச், 2016

சனீஸ்வரனின் தொல்லைகள் நீங்க....

சனிக் கிரகத்தினால் ஏற்படும் ஏழரைச் சனி, அட்டமத்துச் சனி மற்றும் கண்டச் சனியினால் பாதிப்புக்கு ஆளாயிருப்பவர்கள் இந்த பதிகத்தை தினம் தோறும் இடை விடாது படித்தால் சனிதிசையின் தாக்கம் முற்றிலும் நம்மை அண்டாது என்பதில் ஐயமில்லை..     
 திருச்சிற்றம்பலம் 
போகமார்த்த பூண்முலையாள் தன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண்வெள் ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையன் கோவண ஆடையின்மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 1
தோடுடைய காதுடையன் தோலுடை யன்தொலையாப்
பீடுடைய போர்விடையன் பெண்ணுமோர் பாலுடையன்
ஏடுடைய மேலுலகோ டேழ்கடலுஞ் சூழ்ந்த 

நாடுடைய நம்பெருமான் மேயது நள்ளாறே. 2
ஆன்முறையா லாற்றவெண்ணீ றாடி அணியிழையோர்
பான்முறையால் வைத்தபாதம் பத்தர் பணிந்தேத்த
மான்மறியும் வெண்மழுவுஞ் சூலமும் பற்றியகை
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே. 3
புல்கவல்ல வார்சடைமேல் பூம்புனல் பெய்தயலே
மல்கவல்ல கொன்றைமாலை மதியோ டுடன்சூடிப்
பல்கவல்ல தொண்டர்தம்பொற் பாத நிழல்சேர
நல்கவல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே. 4
ஏறுதாங்கி யூர்திபேணி யேர்கொள் இளமதியம்
ஆறுதாங்குஞ் சென்னிமேலோர் ஆடர வஞ்சூடி
நீறுதாங்கி நூல்கிடந்த மார்பில் நிரைகொன்றை
நாறுதாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே. 5
திங்களுச்சி மேல்விளங்குந் தேவன் இமையோர்கள்
எங்களுச்சி யெம்மிறைவன் என்றடி யேயிறைஞ்சத்
தங்களுச்சி யால்வணங்குந் தன்னடி யார்கட்கெல்லாம்
நங்களுச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே. 6
வெஞ்சுடர்த்தீ யங்கையேந்தி விண்கொள் முழவதிர
அஞ்சிடத்தோர் ஆடல்பாடல் பேணுவ தன்றியும்போய்ச்
செஞ்சடைக்கோர் திங்கள்சூடித் திகழ்தரு கண்டத்துள்ளே
நஞ்சடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 7

சிட்டமார்ந்த மும்மதிலுஞ் சிலைவரைத் தீயம்பினால்
சுட்டுமாட்டிச் சுண்ணவெண்ணீ றாடுவ தன்றியும்போய்ப்
பட்டமார்ந்த சென்னிமேலோர் பால்மதி யஞ்சூடி

நட்டமாடும் நம்பெருமான் மேயது நள்ளாறே. 8
உண்ணலாகா நஞ்சுகண்டத் துண்டுட னேயொடுக்கி
அண்ணலாகா வண்ணல்நீழ லாரழல் போலுருவம்
எண்ணலாகா வுள்வினையென் றெள்க வலித்திருவர்
நண்ணலாகா நம்பெருமான் மேயது நள்ளாறே. 9
மாசுமெய்யர் மண்டைத்தேரர் குண்டர் குணமிலிகள்
பேசும்பேச்சை மெய்யென்றெண்ணி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றைசூடி மும்மதி லும்முடனே
நாசஞ்செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே. 10
தண்புனலும் வெண்பிறையுந் தாங்கிய தாழ்சடையன்
நண்புநல்லார் மல்குகாழி ஞானசம் பந்தன்நல்ல
பண்புநள்ளா றேத்துபாடல் பத்தும் இவைவல்லார்
உண்புநீங்கி வானவரோ டுலகி லுறைவாரே. 11
திருச்சிற்றம்பலம் 

வெள்ளி, 18 மார்ச், 2016

அங்கவை சங்கவை திருமணம்

மூவேந்தரான சேர சோழ பாண்டிய மன்னர்களும் பாரியின் புகழைக் குறித்துப் பொறாமை கொண்டனர். அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டனர். மூவேந்தரும் சேர்ந்து பறம்பு மலையை முற்றுகை இட்டனர். பல மாதங்களாகியும் பறம்பு மலையைக் கைப்பற்ற இயலவில்லை. வஞ்சனையே உருவான மூவேந்தரும் வஞ்சகத்தால் பாரியை வீழ்த்த எண்ணினர். போரை விரும்பாத பாரிவள்ளலிடம் கூத்தர் போல் வந்து வஞ்சனையாக அவன் உயிரைக் கவர்ந்தனர்.பாரி கொல்லப் பட்டதும் பறம்பு மலை மூவேந்தர் வசமாயிற்று. பாரியின் உயிர் நண்பரான கபிலர் பாரியுடனேயே உயிர் விடத் துணிந்தார். ஆனால் தன் இரு பெண்களையும் கபிலர் வசம் ஒப்படைத்து " இருந்து வருக " எனக் கூறி மடிந்த பாரியின் சொல்லுக்காகத் தன் உயிரைத் தாங்கியிருந்தார். பாரி மகளிரை மணம் செய்து தரும் பொருட்டு பலப் பல மன்னர்களைத் தேடிச் சென்றார். மூவேந்தருக்கு அஞ்சியோ வேறு யாது காரணம் பற்றியோ பாரி மகளிரை மணம் கொள்ள மறுத்தனர் சிற்றரசர்கள். மனமொடிந்த கபிலர் தன் மக்களாகக் கருதிய அங்கவை சங்கவை இருவரையும் திருக்கோவலூரிலுள்ள ஒரு பார்ப்பனரிடம் அடைக்கலமாகத் தந்து விட்டு வேள் பாரியுடன் சேர்வதற்காக தென்பெண்ணை யாற்றின் கண் வடக்கிருந்து உயிர் நீத்தார். இவர் வடக்கிருக்குங்கால் பாடிய பாடல்கள் புறநானூற்றின் கண் இலக்கியச் சான்றாகத் திகழ்கின்றது.

பாரி மகளிர் திருக்கோவிலூர் பார்ப்பனரிடத்தே அடைக்கலப் படுத்த யாது காரணம்? என நமக்கு ஐயம் தோன்றுவது இயல்பு. அக்காலத்தே பார்ப்பனரிடம் உள்ள பொருளுக்கோ அவரின் அடைக்கலப் பொருளுக்கோ யாதொரு தீங்கும் செய்ய மாட்டார். மகட்கொடை வேண்டி அவரிடத்துச் செல்வதோ போர் தொடுப்பதோ செய்ய மாட்டார். எனவே அவரின் அடைக்கலப் பொருளான பாரிமகளிற்குத் தீங்கு நேராது என எண்ணினார் கபிலர்.

திங்கள், 14 மார்ச், 2016

சுவாமி சிவானந்தரின் பிரார்த்தனை

பூசிக்கத்தக்க புண்ணியமூர்த்தியே

உயிர்கள் அனைத்திலும் உறைபவனே
உனக்கு பலகோடி வணக்கங்கள்
இறைவா நீ இவ்வுலகத்தின் எல்லா பொருள்களிடத்தும் நீக்கமற நிறைந்துள்ளாய்
இதயத்திலும், மனத்திலும்,புலன்களிலும் ,பிராணன்களிலும் பஞ்சபூதங்களிலும் இடம் பெற்றுள்ளாய் .வலப்புரத்திலே ,இடப்புறத்திலே பின்புறத்திலே,மேற்ப்புரத்திலே
கீழ்புரத்திலே உள்ள எல்லா உயிர்களிடத்தும் நீ விளங்குகிறாய்
என் குருதேவர் வடிவிலும், இவ்வுலகில் உள்ள கண்ணுக்குத் தோன்றும்,
தோன்றா பொருட்கள் அனைத்திலும் நீ அவதாரம் செய்கிறாய்.
ஒ காருண்ய மூர்த்தியே,உனக்கும், உன் வண்ண தோற்றங்கள் அனைத்திற்கும் பணிபுரிய உடல்நலமும் பலமும்,,கொண்ட இன்னுமொரு நாளை நீ அளித்துள்ளாய்
ஆகவே நான் என்றும் நன்றி உள்ளவனாயும் , கடமைப்பட்டவனாகவும் இருப்பேன்.
மனித குலத்திற்கு சேவை செய்வதன் மூலம் என்னைப் புனிதப்படுத்திக்  கொள்ள அரியதொரு வாய்ப்பை நீ எனக்கு அளித்துள்ளாய்
நடத்தையிலே கண்ணியமும் பணிவும், மரியாதையும் கொண்டவனாய்
திகழ்வேனாக!
இன்றும், என்றும்,பிறர் மனம் புண்படும்படியோ கோப உணர்ச்சிக்கு ஆளாகும் படியோ என் எண்ணமோ செயலோ அமையக்கூடாது
இரக்கமே உருவான இறைவா!   என்னிடத்தில் உள்ள குற்றங்குறைகள் யாவும் என்னை விட்டு நீங்கட்டும் .
பிரம்மச்சரியம் அஹிம்சை சத்தியம் ஆகிய விரதங்களில்
நான் சிறிதும் தவறாது நிலை பெற்று இருப்பேனாக.
என் இறுதி காலம் வரை கடவுட் பாதையில் நடந்து செல்வேனாக.
என் மனசாட்சிக்கு உண்மையாக பணி புரிவேனாக.
நான் தர்மத்தின் வழி நிற்பேனாக
என் வாழ்வு முடியும் வரை தெய்வ சிந்தனை உடையவர்களின்
கூட்டுறவோடு இருப்பேனாக
.நான் உன்னை நினைக்காத நேரமில்லை.
நான் நினைப்பதெல்லாம் ஒவ்வொருவரது முகத்திலும் நீயாக காட்சியளிக்கவேண்டும்.வேறென்ன வேண்டும்? அய்யனே!
இதனைப் பெற நீ எனக்கு அருள் புரிதல் வேண்டும் ,
பொய்மையினின்றும் உண்மைக்கும் ,இருளிலிருந்து ஒளிக்கும்
அழியும் தன்மையினின்று அழியாத்  தன்மைக்கும் எனக்கு நீ வழி காட்டுவாயாக!
மீண்டும் மீண்டும் உனக்கு என் அன்பு வணக்கங்கள் உரித்தாகுக
காக்கும் கருணாகரனே ! தாழ்வுற்றோரைத் தாங்கும் தயாபரனே !
என் னைக் காப்பாற்று !கரை சேர எனக்கு வழிகாட்டு !அருளொளி கொடு .
நாமெல்லோரும் இன்புற்றிருப்போமாக
தொல்லையிலிருந்தும் , துன்பத்திலிருந்தும் விடுபடுவோமாக !
உலகெங்கும் நீங்கா அமைதியும் அன்பும் நிலவட்டும் !
வாழ்விலே வளம் சுரக்க நலம் செழிக்க , நாமெல்லோரும் நட்புணர்வோடும் ,தியாக உணர்வோடும் ,ஒன்றுபட்டு உழைப்போமாக !
நம் இதயங்கள் இணைந்து வாழட்டும்
நமது நோக்கம் பொதுவாக இருக்கட்டும் .
ஓம் அமைதி . அமைதி . அமைதி

திங்கள், 29 பிப்ரவரி, 2016

கரு வளர்ச்சியின் சூட்சுமம்...

{2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)}
ஒரு பெண்ணின் கருப்பையின்
உள்ளே கருவானது எவ்வாறு உருவாகிறது
என்பதை திருமந்திரப்
பாடல்களின் வழியே கடந்த இதழில்
கண்டோம். இனி அந்தக் கரு வளரும்
நிலைகளில் என்னென்ன
நிகழுகிறது என்று திருமூலர்
கூறியுள்ள சில கருத்துக்களைக்
காணலாம்.
ஒரு கரு உருவான உடனேயே அதில்
உயிர் வந்துவிடுவதில்லை. பிராண
சக்தியும், மறுபிறவி எடுக்கும்
ஒரு ஆன்மாவும் அந்த கருப்
பிண்டத்தின்
உள்ளே நுழையும்போதுதான்,
அது செல்களின் குவியல் என்ற
நிலையிலிருந்து உயர்ந்து உயிருள்ள
ஒரு கருவாக உருவம் பெறுகிறது.

அதுவரையில் நம் உடலிலுள்ள பல
தசைகளைப் போன்றே அந்த கருவுற்ற
முட்டையும்
ஒரு தசை போன்றே கருதப்படும்.
பிராணன் எனும்
மூச்சுக்காற்று (உயிர்க்காற்று)
கருவினுள்ளே நுழைவது குறித்து கீழுள்ள
திருமந்திரப் பாடல் குறிப்பிடுகிறது.
"பூவின் மணத்தைப் பொருந்திய
வாயுவும்
தாவி உலகில் தரிப்பத்தவாறு போல்
மேவிய சீவனில் மெல்ல நீள்
வாயுவும்
கூவி, அவிழும் குறிகொண்ட போதே.'
-திருமந்திரம் பாடல் எண்-265.
தாயின் கருப்பையினுள் இருக்கும்
சிறிய கருவிற்கு உயிரூட்டுகின்ற
மூச்சுக் காற்றானது, குறிப்பிட்ட
காலம் வரும்போது ஒரு மெல்லிய
ஒலியோடு அந்த கருவின்
உள்ளே புகும் என்பது இப்பாடலின்
பொருளாகும்.
அவ்வாறு உள்ளே நுழைந்த
காற்று அந்தக் கருவின் அனைத்துப்
பகுதிகளிலும்
(அனைத்து செல்களிலும் என
வைத்துக்கொள்ளலாம்) பரவி நிற்கும்.
இதற்கு உவமையாக திருமூலர்
பூவின் நறுமணத்தைக்
குறிப்பிடுகிறார்.
ஒரு பூ மலரும்போது அதிலிருந்து வரும்
நறுமணம் காற்றோடு சேர்ந்து அந்தப்
பகுதி முழுவதும் பரவி நிற்பதைப்
போன்று, பிராணன் எனும்
மூச்சுக்காற்றும் கருவின்
உள்ளே நுழைந்து பரவி நிற்கும்!
எவ்வளவு அற்புதமான ஒரு உவமை!
இந்த மூச்சுக்காற்று சரியான
வேளையில்
உள்ளே நுழைந்து கருவுக்கு உயிரூட்டினால்
மட்டுமே, அந்தக் கரு முறையாக
வளர்ந்து ஒரு குழந்தையாக உருமாற
முடியும்.
மூச்சுக்காற்று உள்ளே நுழைவதில்
தாமதங்கள் அல்லது தடைகள்
ஏற்பட்டாலோ அல்லது உள்ளே நுழைந்த
மூச்சுக்காற்றின் இயக்கங்கள் சரிவர
இல்லாது போனாலோ கருவின்
வளர்ச்சி பாதிக்கப்படும்.
கருச்சிதைவும் ஏற்படலாம்.
இதை அடுத்த பாடலில் திருமூலர்
விளக்குகின்றார்.
"போகின்ற எட்டும் புகுகின்ற
பத்தெட்டும்
மூழ்கின்ற முத்தனும்
ஒன்பது வாய்தலும்
நாகமும் எட்டுடன் நாலு புரவியும்
பாகன் விடாவிடின் பன்றியும் ஆமே.'
-திருமந்திரம் பாடல் எண்-266.
இந்த நான்கு வரிகளில் பல
அற்புதமான சூட்சும உண்மைகள்
பொதிந்து கிடக்கின்றன.
ஒவ்வொரு வரியாக
சற்றே விளக்கமாகக் காணலாம்.
முதல் இரண்டு வரிகளில்,
மூச்சுக்காற்று உள்ளே நுழையும்
முன்னர் அந்தக்
கருவினுள்ளே என்னென்ன உள்ளன
என்பதைப் பட்டியலிடுகிறார்.
கருப்பையினுள்ளே இருக்கும் சிறிய
உடலினுள்,
-போகின்ற எட்டு (8)
-புகுகின்ற பத்தெட்டு (10+8=18)
-ஒன்பது வாய்தல் (வாயில்கள்)
ஆகியவை உள்ளன.
இவை எவையெவை என்பதைக்
காணலாம்.
போகின்ற எட்டு
1. சுவை
2. ஒளி
3. ஊறு
4. ஓசை
5. வாசம்
6. மனம்
7. புத்தி
8. அகங்காரம்
ஆகிய அருவமாக உள்ள
எட்டையே போகின்ற எட்டு என்கிறார்
திருமூலர்.
புகுகின்ற பத்தெட்டு (18)
10 வாயுக்கள் 8 விகாரங்கள்
ஆகியவற்றையே புகுகின்ற
பத்தெட்டு என்கிறார்.
பத்து வாயுக்கள்
1. பிராணன்
2. அபானன்
3. உதானன்
4. வியானன்
5. சமானன்
6. நாகன்
7. கூர்மன்
8. கிருகரன்
9. தேவதத்தன்
10. தனஞ்செயன்
எட்டு விகாரங்கள்
1. காமம்
2. குரோதம்
3. உலோபம்
4. மோகம்
5. மதம்
6. மாச்சரியம்
7. துன்பம்
ஒன்பது வாயில்கள்
1. வலது கண்
2. இடது கண்
3. வலது நாசி
4. இடது நாசி
5. வலது காது
6. இடது காது
7. வாய்
8. குதம்
9. பிறப்புறுப்பு
என உடலிலுள்ள வாசல்கள் மொத்தம்
ஒன்பது. இதையே இப்பாடலில்
"ஒன்பது வாய்தலும்'
என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
இரண்டாவது வரியில் வருகின்ற
"மூழ்கின்ற முத்தனும்' என்னும்
சொற்களும் மிகவும் அர்த்தம்
உள்ளவை
கருப்பையினுள்ளே கரு பனிநீர்
எனப்படும் ஆம்ய்ண்ர்ற்ண்ஸ்ரீ
எப்ன்ண்க் என்ற
திரவத்தினுள்ளே மூழ்கி இருக்கும்
இல்லையா? எனவேதான் "மூழ்கின்ற'
என்ற வார்த்தையை திருமூலர்
உபயோகப்படுத்தியிருக்கிறார்.
"முத்தன்' என்ற சொல்லுக்கும்
ஆழமான அர்த்தம் உள்ளது.
கடவுளுக்கும்கூட "முத்தன்'
என்றொரு பெயருண்டு. படைத்தல்,
காத்தல், அழித்தல் ஆகிய
மூன்று செயல்களையும்
முறையே பிரம்மன், திருமால், சிவன்
ஆகிய மூன்று கடவுள்களும்
செய்வதாகக் குறிப்பிட்டாலும்
மூவரும் ஒருவர்
என்பதே உயர்நிலைத் தத்துவம்.
மூன்று குணங்களை-
செயல்களை உடைய கடவுள்
"முத்தன்'.
கிறிஸ்துவ மதத்திலும் "தந்தை, மகன்,
தூய ஆவி (பிதா, சுதன், பரிசுத்த
ஆவி)' என கடவுள்
மூன்று நிலைகளில் இருந்தாலும்,
ஒரே கடவுளே என்ற
கோட்பாடு கற்பிக்கப்படுகிறது.
கடவுளுக்குச் சரி;
மூன்று நிலைகளில் ஒன்றாக
இருப்பதால் முத்தன் எனலாம்.
கருவிலிருக்கும்
குழந்தைக்கு "முத்தன்' என்ற
சொல்லை திருமூலர் ஏன்
பயன்படுத்துகிறார்?
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
மூன்று உடல்கள் உள்ளன. நாம்
கண்ணால் காணக்கூடிய
பருவுடலை ஸ்தூல சரீரம்
என்பார்கள். இது தவிர சூட்சும சரீரம்,
காரண சரீரம் என மேலும்
இரு உடல்கள் ஒவ்வொருவருக்கும்
உண்டு. இவை சக்தி நிலை உடல்கள்
(Energy Bodies). சூட்சும சரீரம்,
ஸ்தூல சரீரம், காரண சரீரம் ஆகிய
மூன்றும் இணைந்தே மனிதன்
உருவாகிறான். கருவிலிருக்கும்
குழந்தைக்கும் இது பொருந்தும்.
மூன்று உடல்களால் உருவாவதால்
கருவையும் திருமூலர் "முத்தன்'
என்கிறார்.
இனி பாடலின் அடுத்த
இரண்டு வரி களுக்கு வருவோம்.
முதல் இரண்டு வரிகளில் கருவில்
என்னென்ன உள்ளன என்பதைப்
பட்டியலிட்ட திருமூலர், அடுத்த
இரு வரிகளில்,
"இவை அனைத்துமே ஒரு கருவில்
இருந்தாலும், குண்டலினி சக்தி,
பிராண சக்தி ஆகிய
இரு சக்திகளை இறைவன் சரியான
நேரத்தில் கருவுக்குள் செலுத்தினால்
மட்டுமே, அந்தக்
கரு வளர்ந்து ஒரு குழந்தையாக
மாறும். அது நடைபெறாவிடில்
கரு பாழாகிப் போகும்' என்கிறார்.
"நாகமும் எட்டுடன் நாலு புரவியும்'
என்ற
மூன்றாவது வரியை சற்றே அலசிப்
பார்க்கலாம்.
குண்டலினி சக்தியையே "நாகம்' என
குறிப்பிடுகிறார் திருமூலர்.
நமது உடலில் மூலாதாரச்
சக்கரத்திற்கு அருகில் உறங்கிக்
கிடக்கும் அற்புதமான
சக்தியே குண்டலினி சக்தியாகும்.
சமஸ்கிருத மொழியில் "குண்டலா'
என்றால்
குவிந்து கிடப்பது அல்லது சுருண்டு
கிடப்பது என்று பொருள்.
பாம்புகள் ஓய்வாக
இருக்கும்போது சுருண்டே இருக்கும்.
எனவேதான் வடமொழி யில்
பாம்புக்கு "குண்டலா' என்ற பெயரும்
உண்டு. தூக்கத்தில்
சுருண்டு கிடக்கும் பாம்பைப்
போலவே நமது குண்டலினி சக்தி தூங்கிய
நிலையில் மூலாதாரத்தின்
அருகே சுருண்டு கிடக்கிறது. இந்திய
மரபுப்படி சக்தி என்பதைப்
பெண்பாலாகவும் தேவியாகவும்
உருவகப்படுத்துவர். எனவேதான்
சுருண்டு கிடக்கும்
சக்திக்கு குண்டலினி,
குண்டலினி தேவி எனப் பெயரிட்டனர்.
எதையும் நேரடியாகக் கூறாமல்
சங்கேத வார்த்தைகளால்
கூறுவது சித்தர் மரபு. எனவேதான்
திருமூலர் குண்டலினியைக் குறிக்க
"நாகம்' என்ற சங்கேத மொழியைப்
பயன்படுத்தியுள்ளார்.
அடுத்து வரும் "எட்டுடன்
நாலு புரவியும்' என்பதுவும் சங்கேத
வார்த்தைகளே. நேரடி யாக அர்த்தம்
கொண்டால் "12 குதிரைகள்'
என்றே அர்த்தம் வரும். ஆனால்
திருமூலர்
இங்கே மூச்சுக் காற்றையே புரவி என்ற
சங்கேத மொழியில் கூறுகிறார்.
சாதாரண
மனிதர்களுக்கு மூச்சுக் காற்று கண்டத்திற்குக்
கீழே எட்டு விரற்கடை பரவி நிற்கும்.
யோகிகளுக்கு கண்டத்திற்கு மேலே நான்கு
விரற்கடை பரந்து நிற்கும்.
இதையே எட்டுடன் நாலு புரவியும்
என்று சங்கேத மொழியில் கூறுகிறார்.
கடைசி வரியில் வரும் "பாகன்' என்ற
சொல் கடவுளைக் குறிக்கும்
(சிவனை) சங்கேதச் சொல்லாகும்.
"பாகன்' என்பதற்கு செலுத்துபவன்,
கட்டுப்படுத்துபவன் என பல
அர்த்தங்கள் உண்டு.
குண்டலினி சக்தியையும்
மூச்சுக்காற்றையும் கருவின்
உள்ளே செலுத்து பவனாகையால்
கடவுள் இங்கே "பாகன்' ஆகிறார்.
இவை இரண்டையும் பாகனாகிய
கடவுள் அந்தக் கருவின்
உள்ளே செலுத்தா மல் போனால்
அந்தக் கரு வளர்ச்சியடையாது.
வீணாகப் போய்விடும்.
ஐயன் வகுத்த
திருக்குறளை சிறு அடிகளில் பெரும்
உண்மைகளை விளக்கும்
சிறப்பு வாய்ந்த நூலாகக்
கொண்டாடுகிறோம். "கடுகைத்
துளைத்து, ஏழ் கடலைப்
புகுத்தி குறுகத் தரித்த குறள்'
என்று புகழ்வார்கள். திருவள்ளுவரின்
திறமைக்குச் சற்றும் குறைந்ததல்ல
திருமூலரின்
திறமை என்பதற்கு திருமந்திரப் பாடல்
சான்றாக உள்ளதல்லவா?
நான்கு வரிகளில்
எத்தனை எத்தனை சூட்சுமங்கள் ?

புதன், 24 பிப்ரவரி, 2016

புண்ணிய பாவம்

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே! விழியன்பொழுக

மெத்தய மாதரும் வீதிமட்டே! விம்மிவிம்மியிரு 

கைத்தல மேல்வைத்தழு மைந்தருஞ்சுடு காடுமட்டே 

பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே! 

--பட்டினத்தார்

வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

பக்திக்கு முதல் தகுதி!

ஒரு சமயம் மேலே பறந்த பறவையை பார்த்த கண்ணன் அர்ஜுனனிடம், ""மைத்துனா! அது புறா தானே,'' என்றார். 

அர்ஜுனனும் "ஆம்' என்றான்.
"இல்லையில்லை....கழுகு மாதிரி தெரிகிறது,'' என்றார் கண்ணன்.
"ரொம்ப சரி...அது கழுகே தான்,'' என்றான் அர்ஜுனன்.
"அர்ஜுனா! சரியாகப் பார், அது கிளி மாதிரி பச்சையாக இல்லை...'' என்றதும், "அதிலென்ன சந்தேகம், அது கிளி தான், கிளிதான், கிளிதான்'' என்று மூன்று முறை அடித்துச் சொன்னான்.
"என்னடா நீ! நான் என்ன சொன்னாலும், ஆமாம் சாமி போடுகிறாயே...! அது என்ன பறவை என தெளிவாகச் சொல்,'' என்ற 
கண்ணனிடம், ""கண்ணா! என் பார்வையை விட உன் வார்த்தையில் எனக்கு நம்பிக்கை அதிகம். மேலும், அந்தப் பறவையை நான் "புறா' என்று சொன்னால், அதை கிளியாகவோ, கழுகாகவோ மாற்றிவிட, உனக்கு எவ்வளவு நேரமாகி விடும்! நீயே எல்லாம் என்றான பிறகு, எந்தப் பொருளும் எப்படி வேண்டுமானாலும் மாறுமே...! உன் சக்தியை மட்டுமே நான் நம்புகிறேன்,'' என்றான்.
பார்த்தீர்களா! பக்திக்கு தேவை நம்பிக்கை தான்! 
""புராணங்களில் அப்படி சொல்லி இருக்கிறதே... இப்படி சொல்லியிருக்கிறதே... நம்புகிற மாதிரி இல்லையே...'' என்று வாதம் செய்தால், பக்தி என்ற ஏணியின், முதல் படிக்கட்டில் கூட காலை வைக்க முடியாது.