ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

தொடக்க நிலையில் உள்ளவர்களுக்கான யோசனைகள் சில

சரியான இடம் (The Right Place):
★உங்கள் தியானத்தை உயர்த்தக் கூடிய ஓர் இடத்தை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாய், ஒரு மரத்தடியில் அமர்வது அனுகூலத்தையளிக்கும். ஒரு திரையரங்கில் அமர்வதை விட, இயற்கையை நாடிச் சொல்லுங்கள். மலைகளிலும், மரங்களிலும், ஆறுகளிலும் ‘தாவோ’ கூறும் இயற்கை ஆற்றல்களின் ஒன்றுபட்ட திறன் இருக்கிறது. அந்த சக்தியின் துடிப்பு எங்கும் பரவி நிற்கிறது.
‘சந்தடியற்றிருப்பதும்,
தன்னுணர்வின்றியிருப்பதும்
தியானமே’.
மரங்கள் நிலையான தியானத்திலிருக்கின்றன. உங்களை மரமாகும்படி நான் கூறவில்லை, ஒரு புத்தராகிவிடுங்கள்.
★ஆனால், புத்தருக்கும் மரத்துக்கும் பொதுவான விசயம் ஒன்றிருக்கிறது. அவர் மரத்தைப் போலவே பசுமையானவர், மரத்திலுள்ளது போலவே அவருள்ளும் சாரமிருக்கிறது. என்ன ஒரு வித்தியாசம். அவர் உணர்வோடிருக்கிறார், மரம் உணர்வற்றிருக்கிறது அவ்வளவுதான். மரம் தன்னுனர்வில்லாமலே ‘தாவோ’ (Tao)வில் இருக்கும், புத்தர் உணர்வுடன் ‘தாவோ’வில் இருப்பார். அது மிகப் பெரிய வேறுபாடு, வானத்துக்கும் பூமிக்கும் இடையேயுள்ள வேறுபாடு.
ஒரு மரத்தினடியில் அமர்ந்து பாருங்கள். அங்கே சுற்றிவர அழகிய பறவைகளின் பாடலும், மயிலின் ஆடலுமாய், இருக்கும். நதி நீரின் ஓடுகின்ற ஓசை அல்லது அருவி நீரின் வீழ்கின்ற ஓசை என்று எல்லாமுமாய் ஒரு சிறந்த இசை!
இயற்கையின் அமைதி குலைக்கப்படாத, மாசுபடுத்தப் படாத ஓர் இடத்தைக் கண்டுபிடியுங்கள்.

★அப்படியோர் இடத்தைக் கண்டுபிடிக்க முடியாவிட்டால், உங்கள் அறையின் கதவுகளை மூடிக் கொண்டு உள்ளே அமர்ந்துவிடுங்கள். முடிந்தால் உங்கள் வீட்டில் தியானத்துக்கென்று ஒரு பிரத்யேக அறை வைத்துக் கொள்ளுங்கள்.
சிறு மூலை போதும், ஆனால், தியானத்துக்கு மட்டுமே பயன்படுவதாய் இருக்க வேண்டும். ஏன் குறிப்பாய் தியானத்துக்கு மட்டும் என்பது? ஒவ்வொரு செயலும் தனக்கே உரிய அதிர்வுகளை உருவாக்கும். அந்த இடத்தில நீங்கள் தியானித்தால் அது தியானத் தன்மை கொண்டதாகிவிடும். தினமும் தியானிப்பீர்கள்.

★தியானிக்கிறபோது அது உங்களுடைய அதிர்வுகளை உறிஞ்சும். அடுத்த நாள் நீங்கள் வரும்போது அந்த அதிர்வுகள் உங்கள் மீதே திரும்பவும் விழும். அவை அனுகூலமாயிருக்கும், கொடுத்து வாங்கும், எதிர்ச் செயல்புரியும்.
ஒருவர் உண்மையிலேயே தியானிப்பவராகி விடும்போது அவரால் திரையரங்கிலும், இரயில்நிலைய மேடையிலும் கூட தியானிக்க முடியும்.
நான் பதினைந்து ஆண்டுகளாய் நாடு சுற்றிக் கொண்டிருக்கிறேன். தொடர்ந்து பயணந்தான். இரவும் பகலும் ஆண்டு முழுதும் பயணம் செய்கிறேன். இரயிலிலும், ஆகாய விமானத்திலும், காரிலும் பயணிக்கிறேன். எதுவும் வித்தியாசப்பட்டுவிடவில்லை. உங்கள் இருப்புணர்வில் (Being) நீங்கள் நிலைத்துவிட்டால் எந்த ஒன்றும் வித்தியாசத்தை ஏற்ப்படுத்த முடியாது. ஆனால், இது தொடக்க நிலையில் உள்ளவருக்குச் சாத்தியமில்லை.
மரம் வேரூன்றி விட்ட (நிலையாக) பிறகு காற்று அடிக்கட்டும், மழை பொழியட்டும், மேகங்கள் இடியொலி எழுப்பட்டும். எல்லாமே நல்லதுதான். அது ஒரு சீரிய நிலை (integrity)யை மரத்துக்குத் தந்துவிடும்.

★ஆனால், அந்த மரம் மிகச் சிறியதாய், மென்மையாய் இருக்கும்போது ஒரு சின்ன குழந்தையும் அதற்கு ஆபத்தை விளைவித்துவிடும். அல்லது அந்த வழியே போகிற ஒரு பசுவினால் கூட ஆபத்து ஏற்படலாம்.
-ஓஷோ