வெள்ளி, 26 ஜூன், 2020

ஆன்மாவை இழந்து உலகத்தையே வென்றாலும் மனிதனுக்கு கிடைக்கப் போகும் லாபம் தான் என்ன ?]




                                                                          கபீர்

உண்மையிலேயே வாழ்க்கையில் வெற்றி தோல்வி என்பது என்ன என்ற கேள்வி நம்மில் பெரும்பாலருள் எழுகிறது.
உலகத்தவர் பார்வையில் பெரும் தனம் தேடியவன் வெற்றி பெற்றவன். புகழ் அடைந்தவன் வெற்றி பெற்றவன். அதிகாரங்களை அடையப் பெற்றவன் வெற்றி பெற்றவன்.
ஆனால் ஞானிகள் இந்த கருத்தின் அடிப்படையையே தவறு என்று கருதுகின்றனர் போலும். 
கபீர்தாஸ் சொல்வதைப் பாருங்கள்.
"நன்று அடியார்க்கு தோல்வியே, புவியோர்க்கு சேரட்டும் வெற்றியே
வென்றவர் போவார் எமபுரமே, தோற்றவர் அடைவார் அரியிணையே".  
 அரியிணை =ஹரியின் இணையடி; எமபுரம் = பிறவிச் சுழல்]கபீர்தாஸரின் கருத்தை பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வசித்த புனித இக்னேஷியஸ் லயோலா என்ற கிருத்துவ போதகரும் வலியுறுத்தினார். அவர் கிருத்துவ மதத்தில் ஜெசுயிட்(Jesuit) வழிமுறையை பாரீஸ் பல்கலைக் கழகத்தில் துவக்கியவர். ஸ்பெயின் தேசத்து போரில் தன் கால்களை இழந்து பின்னர் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியவர். மண் ராஜ்யத்தை விட்டு விண் ராஜ்ஜியத்திற்கான தன் போராட்டத்தை ஆரம்பித்தவர்.
அவரை விட இளையவரான கல்லூரி ஆசிரியர் பிரான்ஸிஸ் சேவியரிடம்(1506- 1551) அடிக்கடி சொல்வதுண்டாம்.
“Master Francis! What shall it profit a man if he gains the whole world and loses his own soul?"
[பிரான்ஸிஸ் பெருந்தகையே! ஆன்மாவை இழந்து உலகத்தையே வென்றாலும் மனிதனுக்கு கிடைக்கப் போகும் லாபம் தான் என்ன ?]

அறிவு கூர்மை மிகுந்தவர் பிரான்ஸிஸ். அவருடைய பேருரைகளை கேட்க பல்கலை கழகத்தில் மக்கள் திரளாகக் கூடினர். அவர் ஒரு பன்மொழி வித்தகர். வாலிப வயதினரான அவருக்கு மிக நல்ல எதிர்காலம் காத்திருந்தது. நல்ல குடும்பம், செல்வம், புகழ் என்பன போன்ற வெற்றி அவருடைய காலடியிலே கிடந்தது என்றும் சொல்லலாம்.
ஆனால் இக்னேஷியஸ் லயோலாவின் கேள்வி பிரான்ஸிஸ் சேவியரின் மனதில் ஆன்மீகக் கனலை கொழுந்து விட செய்தது.
லயோலாவுடனான சத்சங்கம் அவரை இறைவனின் சேவைக்கென தன்னை அர்ப்பணித்துக் கொள்ளத் தூண்டியது. தம் பதவியை துறந்தார். இக்னேஷியஸ் லயோலாவை தமது குருவாகக் கொண்டு பிரார்த்தனையிலும் தியானத்திலும் நேரத்தை செலவிட்டார். தனது செல்வத்தையெல்லாம் ஏழை எளியவர்க்கு வழங்கி விட்டு கால்நடையாக ஜெருசலேமுக்கு தலயாத்திரை மேற்கொண்டார். ஏசுவின் புகழை சென்ற இடமெல்லாம் பரப்பினார். எவரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை. தனக்கு பிறர் கொடுக்க முன் வந்த வெகுமதிகளை வாங்க மறுத்தார். அவருடைய தன்னலமற்ற இந்த பண்பு மக்களை அவர் பக்கம் ஈர்த்தது.

முதன் முதலாக இறைப்பணிக்கென 1542 -ல் கடற்பயணம் மேற்கொண்டார். கப்பலில் சீமான்களோடு அமர்ந்து உணவு அருந்த வேண்டியவர் சாமானியர்களோடு அமர்ந்து உணவு உண்டார். நோயுற்றவர் அருகிலிருந்து சிகிச்சை அளித்தார். தமது முப்பத்தி ஆறாம் வயதில் மேற்கு கடற்கரையில் கோவாவில் வந்திறங்கினார். நீண்ட பயணத்தினால் உடல்நலம் மிகவும் குன்றியிருந்தது. ஆனால் உற்சாகம் குறைந்திருக்கவில்லை.
பொது இடங்களில் எல்லாம் அவருக்கு வரவேற்பு என்பது கிடையாது. அன்னியராகக் காணப்படும் ஒருவரிடம் எவரும் நெருங்கிப் பழகத் தயங்குவர். கூடவே புதுப் புது மொழிகள் அதனால் வரும் பிரச்சனைகள். இந்தியா தவிர இலங்கை, சீனா ஜப்பான் என பல நாடுகளிலும் இறைத் தூதர் ஏசுவின் புகழ் பாடி இருபது ஆண்டுகள் பல இன்னல்களுக்கிடையே சேவை புரிந்தார்.
இப்போது சொல்லுங்கள்! அவரது வாழ்க்கை வழிமுறை வெற்றிக்கானதா தோல்விக்கானதா?
சாமானியர்கள் பார்வையில் பிழைக்கத் தெரியாதவர், ஆனால் கபீரின் பார்வையில் அவரே வென்றவர். விண்ணுலகை சொந்தமாக்கிக் கொண்டவர். தன்னலம் பாராது பிறர் மேன்மைக்காக உழைக்கும் எவருக்கும் இறைவன் தன் கதவுகளை திறந்து வைத்துக் காத்திருக்கிறான்.

இறைவன் அருள் வேண்டுமானால் முதலில் பணிவு மனப்பான்மை வேண்டும். தமக்கு வருவதை எல்லாம் அவனருளாகக் கொள்ளும் மனப்பக்குவம் வரவேண்டும். அப்படி ஒரு நிலைக்காக எப்படி நம்மை இறைவன் வழிப்படுத்துகிறான் என்பதை இந்த ஆங்கிலக் கவிதை அழகாக சொல்கிறது
I asked God for strength, that I might achieve
I was made weak, that I might learn humbly to obey..
I asked for health, that I might do great things
I was given infirmity, that I might do better things..

I asked for riches, that I might be happy
I was given poverty, that I might be wise..
I asked for power, that I might have the praise of others
I was given weakness, that I might feel the need of God
I asked for all things, that I might enjoy life
I was given life, that I might enjoy all things


இந்த உண்மையை அறியாது உலகை வெற்றி கொள்ள முயலுவோர் போக்கை பகவத்கீதை வெண்பா சிறப்பாக சித்தரிக்கிறது.
நினைத்ததை அடைந்தேன் இன்று, நில்லேன், வேறொன்றை
நினைத்து அதை அடைவேன், இன்னும் நிசம் காண்- எனக்கோ
அதுவுண்டு இதுவுண்டு, எது பெரிது எங்குண்டோ
அதுவும் எனக்கே உடைமையாம் (16:13 )
எண்ணம் பல மனதில், என்றும் ஒரே குழப்பம்
மண்ணில் மயக்க வலைப்பட்டே- கண் தெரியார்
ஆழ்வர், இவர் காம அனுபவத்திற் சிக்குண்பார்
பாழ் நரகமே சம்பளம்
. (16: 16)

[பகவத்கீதை வெண்பா, மூன்றாம் பாகம்: ஏ பெரியத்தம்பிப்பிள்ளை (1976) தனலக்குமி புத்தகசாலை, சுன்னாகம், இணைய வழி தரவிறக்கம்]
பலப்பல வெற்றிகளுக்காக மதி மயங்கி, வாழ்க்கையை கழித்தோர் கடைசியில் சம்பாதித்தது ‘பாழ் நரகமே” என்பது, கபீர்வென்றார் போவார் எமபுரமே என்று சொல்வதை உறுதி செய்ததாகிறது.
இந்த இக்கட்டிலிருந்து தப்பித்துக் கொள்ள இக்னேஷியஸ் லயோலா அவர்களின் தினசரி பிரார்த்தனையை மனதில் வைத்தால் முத்திக்கு வழி தேடலாம்.
Dearest Lord,
Teach me to be generous.
Teach me to serve you as you deserve;
To give and not to count the cost;
To fight, and not to heed the wounds;
To labor, and not to seek to rest;
To give of myself and not to ask for reward,
Except the reward of knowing that I am doing
YOUR WILL.

செவ்வாய், 23 ஜூன், 2020

இறையை நோக்கிய பயணம் .....

"நீ”, “நான்” என்னும் இருமையற்ற ஒருமையில், ஒன்றுகலந்து பக்தி செய்தல் (சன்மார்க்கம்). அதுவே, மனமடங்கி, எண்ணம் அறுத்துப் பேரானந்தம் கிட்டும் நிலை ஞானம். அந்த நிலையின் பெயர், சாயுச்சியம். அதாவது, இறைவனுடன் ஒன்று கலந்து வாழுதல். நாம் முதன்முதலில் அரிச்சுவடி (LKG) படிக்கிறோம். பின்னர் முதல் வகுப்புக்கு வருகிறோம். நம் கல்வியின் திறம் மேம்படுகிறது. ஆயினும், அரிச்சுவடியில் இருப்பவனைப் பார்த்து அவனுக்கு ஒன்றும் தெரியவில்லையென இகழக்கூடாது. முதல் வகுப்பில் படிக்கும்பொழுது, மணலில் வீடு கட்டி விளையாடுகிறோம். ஆனால், ஆறாம் வகுப்பில் படிக்கும்பொழுது சீட்டுக்கட்டு அட்டையில் வீடுகட்டி மகிழ்கிறோம். அப்போது மணல் வீட்டை வீடு என ஒத்துக் கொள்வதில்லை. நிலை மேம்பட்டபொழுது, மெய்யாகவே(உடலாகவே) செங்கல் வைத்துக் கட்டியதைத்தான் வீடு என ஒத்துக்கொள்கிறோம். நிலை வேறுபடப்பட உண்மை நமக்குப் புரிய ஆரம்பிக்கிறது.

அதுபோலத்தான் ஆண்டவனையடையும் வழிமுறைகளும். முதலில் இறைவன் இருக்கிறான் எனக்காட்டவே தாய்தந்தை கோவிலுக்கு அழைத்துச் சென்று இதுதான் இறைவன் என சுட்டுகிறார்கள். அங்குதான் சரியை ஆரம்பம். சரியையில் கிரியை ஆக்கிரமிக்கிறது. புறச் சடங்குகளால் மட்டும் இறைவனை அடையமுடியும் என நம்புகிறோம். நம்பிக்கை தவறெனக் கூறவில்லை. கிரியையில் மனமொடுங்கினால் அங்கே இறையுண்டு. எங்குதானில்லை?

கிரியைக்கு அடுத்த நிலை யோகம். யோகம் என்பது பயிற்சி முறையே. அதிலும், இராசயோகம், வாசியோகம், இன்னும் பல பிரிவுகள் உண்டு. அதிலும், என் வழிதான் சிறந்தது எனக் கூறுதலாகாது. ஒரு வழியில் செல்வோரை மற்றவர் இகழக்கூடாது. பயிற்சி முற்ற விளைவு ஆரம்பம். ஞானம் முளைக்கும்.

ஈங்கு முதலில் இறைவன் யார்? எனத் தெளிதல் மிக இன்றியமயாத ஒன்று. அண்டமாகிய அகிலத்தில் உள்ளது இப்பிண்டமாகிய உடலிலும் உண்டு என ஆன்றோர் கூறியுள்ளனர். அண்டத்தையும் பிண்டத்தையும் படைத்தவன் இறைவன். இவ்வண்டத்தில் இறைவனைத் தேடுதல் எளிதோ? அல்ல, பிண்டத்தில் தேடுதல் எளிதோ?

அண்டத்தில் இறைவனைத் தேடுதல் சரியை, கிரியை.

பிண்டத்தில் தேடுதல் யோகம், ஞானம்.

இறைவன்தான் எல்லாவற்றையும் படைத்தான்; எங்குமுளான். அப்போது பிண்டத்திலும் இருக்கவேண்டுமல்லவா? எங்கே?

பரமசிவன் கைலாயவாசி; உயர்ந்த மலைமேல் உள்ளவன். பிண்டமாகிய நம் உடலின் உச்சியே மலையுச்சி.  ஆக, இறைவன் நம்முடலில்  உள்ளான். அண்டத்தில் தேடுவதை விட நம் உடலுக்குள் தேடுதல் எளிதல்லவா? நம் ஆயுளில் குறுகிய காலத்தில் காலன் வருமுன் கண்டுகொள்ளலாமல்லவா? அதிவிரைவில் இறைவனையடைய வழி ஞானமே என்பதன் பொருள் இதுதான்.

இறைவன் உருவகிக்கப்பட்டுளான். பிண்டத்தில் அறிவாகி, அறிவில் உணர்வாகி, உணர்வில் நினைவாய், நினைவில் கருத்தாகி நிற்பவனே இறைவன். நினைவைப் பிடிக்கவே யோகம், ஞானம்.


"அறிவை அறிவால் அறிவதே அறிவு !!!!!!"

"மனித வாழ்க்கை என்பது நமக்குக் கொடுக்கப்படும் கடைசிச் சந்தர்ப்பம். சரியாக பயன்படுத்தினால், ஞானி...."

வியாழன், 18 ஜூன், 2020

நான்யார்? . சுவாசம் என்றால் என்ன?.



சுவாசம் என்பது ஒரு தன்னிச்சை (Automatic)செயல். உடல், உயிர் இவை இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று பின்னி பினைந்திருக்க அவசியம் சுவாசம் தேவை. 

உடலுள் உயிர் இருக்கின்றதா? உயிருள் உடல் இருக்கின்றதா? என்பதை அவரவர் அனுபவத்தின்கண் கண்டறியலாம். மனிதன் ஒரு பொம்மைக்கு சாவி கொடுத்து இயங்க செய்கின்றான் என்று வைத்துக்கொள்வோம். அவன் கொடுத்த சாவியின் வேகம் குறைந்ததும் பொம்மையின் இயக்கம் தன்னாலே நின்றுவிடும். அதேபோன்று நம்மை படைத்த இறைவன் நமக்கும், நமது வினைகளுக்கேற்ப ஒரு குறிப்பிட்ட அளவு விசை கொடுத்து தாயின் கருவறையிலிருந்து,  பூமிப் பந்தில் இறக்கி வைத்து  இயங்க விடுகின்றான்.
அவன் கொடுத்த விசை ஒவ்வொருவருக்கும் வேறுவேறு விதமாக இருக்கும். ஒருவருக்கு ஒரு முடுக்கு விசை, மற்றொருவருக்கு இரு முடுக்கு விசை, பிறிதொருவருக்கு மூன்று முடுக்கு விசை, இதேபோன்று பலருக்கும் பல்வேறு வகையில் பலதரப்பட்ட முடுக்கு விசை கொடுத்து தன்னிச்சையாக இயங்க வைத்து வேடிக்கை பார்க்கின்றான். இதற்கு மற்றைய சுவாசித்தலைக் கொண்ட உயிரினங்களும் விதிவிலக்கல்ல. ஆனால், அவன் கொடுத்த விசையினால் தன்னிச்சையாக இயங்க வைத்ததோடுமின்றி இங்கே மனித இனங்களுக்கென்று தன்னிச்சையாக செயல்படும் புத்தியையும் கூடவே கொடுத்து இயங்க வைத்துள்ளான். அவன் கொடுத்த விசையின் (சுவாசத்தின்) காலம் முடிவதற்குள், தனக்கென்று கொடுத்துள்ள புத்தியைக் கொண்டு நாம் குட்டிக் கரணம் போடலாம், தோப்புக் கரணம் போடலாம், வீராவேசம் காட்டலாம், பிறரை அழிக்க நினைக்கலாம், அலைபேசி, கணிணி , நானோ மேட்டர், ரோபோ ,   இன்னும் என்னென்னவோ செய்யலாம். அல்லது ஏன் என்னை இப்படி விசை கொடுத்து இயங்க வைத்தாய் என்று இறைவனிடமே அழுது புலம்பி சண்டைக்கும் போகலாம். எல்லாம் செய்யலாம். கூடவே சுவாச பயிற்சியும்  செய்யலாம். 

இறைவன் கொடுத்த விசையின் காலம் முடிவதற்குள் நான் யார் என்பதை அறிந்து பரம்பொருளிடம் சரணாகதி அடைவது தான் ஒரு வழி. சித்தர்களும், யோகிகளும், ஞானிகளும் இதைத்தான் சொல்கின்றனர். அப்படி இறைவனிடம் சரண் அடையும் வழிகளில் (மார்க்கங்களில்) இந்த சிவயோகசாரம் தொடரில்  கூறப்படும் வழியும் ஒன்று. இறைவன் கொடுத்த சாவியின் விசைக்காலம் முடிவதற்குள்,  இறைவனிடம் முழுசரணாகதி அடையாவிட்டால், விசைக்காலம் முடிந்தவுடன் மீண்டும் நம்மை கையிலெடுத்து மீண்டும் விசை கொடுத்து விளையாட விட்டு வேடிக்கை பார்ப்பான் இறைவன். நிற்க, மனிதன் சராசரி ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியில் விடுகிறான் எனவும், இந்த கணக்கில் ஒரு நாளில் 21,600 முறை சுவாசிக்கிறான் எனவும் நம் முன்னோர்கள் அறிந்து கூறியுள்ளனர். எத்தனை நாள் நாம் சுவாசிப்போம் என்று யாராலும் கூறமுடியாது.(விதிவிலக்கு: சித்தர்கள்) சுவாசம் என்பது அவசியமான ஒன்று. நான் சுவாசிக்க மாட்டேன் என்று யாராலும் அடம் பிடித்து கூறமுடியாது. ஆனால் அந்த சுவாசத்தை (விசையை) முறைப்படுத்தி இறைவன் கொடுத்த விசையின் வேகம் குறைவதற்குள்(ஆயுள் முடிவதற்குள்), நான் யார் ? என்ற கேள்வியை எனக்குள் நானே கேட்டு, அதன் விடையாக,  நான் பிரம்மத்தின் சொரூபம். ஆனால் நானே பிரம்மம் அல்ல.   எனது தாயும், தந்தையும், சுற்றத்தார் அனைவரும், உலக ஜீவராசிகள் அனைத்தும் அந்த பிரம்மத்தின் சொரூபம்தான் என்பதை அறிந்து, நான் எனும் எனது ஜீவஆத்மா பிரம்மத்தோடு ஐக்கியமாக முயற்சிசெய்வேன். 

ஒருக்கால் விசை முடிவதற்குள் என்னால் இறைவனோடு ஐக்கியமாக முடியாவிட்டால், ஒன்றும் கவலைப்படமாட்டேன். மறுபடியும் இறைவனிடம் வாய்ப்பு கேட்டு, விசை கொடுக்கச் சொல்லி மன்றாடி கேட்டுப் பெற்று (நீ விளையாடற ஆட்டம் எனக்கு தெரியும். இந்த தடவையாவது நான் ஜெயிக்கிறேன்னு சொல்லி) மீண்டும் இந்த பூமியில் விளையாட வருவேன். 
உண்மையை சொல்லப்போனால்  84 இலட்ச்சம் உயிரினங்கள், உப பிரிவுகள், மரமாக பிறந்தால், ஆயிரக் கணக்கான வருடங்கள்,  மலைப்பிரதேசத்தில் பிறந்தாலும்  நூற்றுக்கணக்கான வருடங்கள், 
இப்படியாக,  மனிதப் பிறப்பை திரும்ப எப்போ கிடைக்கப் பெறுவோம் என்பதே தெரியாத தருணத்தில், இந்த கிடைத்தற்கரிய மனிதப் பிறப்பை, நம் பிறப்பு அறுப்பதற்கு   ,சரியான குருவைத் தேர்ந்தெடுத்து பிறப்பை அறுப்பதே உங்கள் பிறப்பின் நோக்கமாக கொள்க. 


மீண்டும் தொடர்கிறேன்.....

புதன், 10 ஜூன், 2020

மெய்யான குருவின் வழிகாட்டுதல்

ஆனமீகத்தில் தன்னையறிதலையே ஞானம் என்கிறோம். ஞானம் என்பது சலனமில்லாத பரிபூரண நிலை. இந்த ஞானம் எப்போதும் நமக்குள்ளேயே தான் இருக்கிறது. அதை உணரவைத்து, உற்று நோக்கி குறையவும் தெளியவும் மெய்யான குருவின் வழிகாட்டுதல் அவசியமாகின்றது.
 இந்தப் பரிபூரண நிலையே சித்த நிலை அல்லது சமாதி நிலை என்கிறோம். சித்த  நிலை என்பது எதிர்பார்ப்பில்லாதது. கருணையும், அன்பும் பெருகிய ஒரு நிலை. தாமே அதுவாக உணர்ந்த உயரிய நிலை. இந்த நிலையை எய்தியவர்கள் எவரும் தங்களைத் தாங்கள்  ஞானம் அடைந்தவர் என்று சொல்லிக் கொள்வதில்லை, . 

ஞானத்தேடலை உணர்ந்தவர்களை, மெய்யான குரு அவர்களைத் தேடி வந்து ஆட்கொண்டு வழி நடத்துவார். அப்போது அந்த மேலான குருவின் பாதங்களை கள்ள மனமின்றிப் பற்றிப் பணிந்து பயன் பெற வேண்டும் என்கிறார் பாம்பாட்டிச் சித்தர்,
 
உள்ளங்கையிற் கனிபோல பொருளை
உண்மையுடன் காட்டவல்ல உண்மைக்கு குருவைக் 
கள்ளமனந் தன்னைகத்   தள்ளிக் கண்டு கொண்டன்பாய்க்  களித்துக்  களித்து  நின்று ஆடுபாம்பே!

பாம்பாட்டிச்சித்தர்.

வெள்ளி, 5 ஜூன், 2020

மகாகவி காட்டும் மரணத்தை வெல்லும் வழி


இடம் : புதுச்சேரி
பாரதியும், குவளைக்கண்ணன் சுவாமிகளும் உரையாடுகிறார்கள்:

பாரதி : கண்ணா, ஆழ்வார்கள் எத்தனை பேர்?
குவளையார் : பன்னிரெண்டு பேர்
பாரதி : ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எத்தனை?
குவளையார் : நாலாயிரம்
பாரதி : அப்படியா, அவர்கள் பன்னிரெண்டு பேர், நாலாயிரம் பாடினார்கள்.
நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் பார்!


பாரதியின் மனோதிடத்தை என்னென்று சொல்வது. இப்புவியின் மீதேறி, அதன் நடுவில் ஒரு சிம்மாசனம் வைத்து, அதன் மீது அமர்ந்தவனாயிற்றே. என்ன, அவ்வாறு அவனால் நெடுநேரம் அமர முடிவதில்லை. அவனியிலே மாந்தர் படும் அல்லல் கண்டு ஓடோடி வந்து விடுகிறான். இங்கே, நாலாயிரம் போல், நானொரு ஆறாயிரம் படைப்பேன், நான் ஆறாயிரம் படைத்தால், அந்த ஆழ்வார்கள் படைத்த நாலாயிரம் போல வரும் என நினைத்தானோ!ஆறாயிரம் பாடுகிறேன் பார் - இப்படிச் சொல்லி முடித்த உடனேயே ஆறாயிரம் பாடும் சங்கற்பத்தினை மேற்கொண்டார். அன்றே பாரதியார் மௌன விரதத்தினைத் துவங்கினார். நாற்பது நாளாக தொடர்ந்தது. எப்போதும் ஏதாவது பாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும் பாரதி, மௌனத்தில் இருந்தார்!. மாங்கொட்டைசாமி மற்றும் குள்ளச்சாமி எனுப்படும் சித்தர் - அவரையே பாரதி - தன் மோனகுரு என்கிறார். அதோடு கோவிந்தசாமி மற்றும் யாழ்ப்பாணத்துச்சாமி ஆகியோரின் தாக்கமும் இருந்திருக்கிறது. இவர்கள் மூவரின் நேரடித் சந்திப்புகளும், அரவிந்தரின் அருகாமையும், புதுவையில் பாரதியின் சுதந்திர வேட்கையைத் தணித்து, ஆன்ம தாகத்திற்கு உரமூட்டின.
தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தனைமுடிமீதேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே. (19)
என குள்ளச்சாமியைப் புகழ்கிறார் பாரதி. இதேபோல், கோவிந்தசாமியையும், யாழ்ப்பாணத்து சாமியையும் புகழந்து பாவிசைக்கிறார் இந்தப் பகுதியில்.

மௌனவிரதம் முடித்து, ஆறாயிரம் எழுதத் துவங்குகிறார். ஆனால், அந்தோ, அது அறுபத்தாறோடு நின்றுவிடுகிறது. இதற்கு காரணம் தன் ஆத்ம சக்தியினை வைத்து, விடுதலை பெற்றுத்தருகிறேன் பார், என்கிற வீராவேசமாக புதுவையை விட்டுக் கிளம்பியதாக இருக்கலாம். எனினும் அந்த 66 பாடல்களில் நமக்குத் தரும் அருஞ்செய்திகளில் இருந்து சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.

'எனக்கு முன்னே பல சித்தர்கள் இருந்தனர், யானும் வந்தேன் - ஒரு சித்தன் இந்நாட்டில்' என்று தன்னையும் ஒரு சித்தனாக அறிமுகப்படுத்திக் கொண்டு துவங்குகிறார். கடவுள் வாழ்த்தாக, பாராசக்தியைத் துதிக்கிறார். அடுத்ததாக,

மரணத்தை வெல்லும் வழி என்னும் தலைப்பிட்டுச் சொல்கிறார்:

பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ? (4)
பொன்னான திருவடிகளே சரணம் எனப் போற்றியபின், அறிவேன் இந்த உண்மையெல்லாம்,
எந்த உண்மையெல்லாம்?
என் முன்னோர்கள் 'எவ்வுயிரும் கடவுள்' என்றதை.

கடவுள் எங்கே இருக்கிறார்? என்கிற தலைப்பிட்டு,

சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்'' லென்று இரணியந்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:-'தூணி லுள்ளான்
நாரா யணந்துரும்பி லுள்ளான்'என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ ? (15)
என்கிறார்.
தொடர்ந்து அடுத்தா பாட்டில் தெள்ளத் தெளிவான விளக்கம் சொல்வார்:
...
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே. (16)
அடுத்ததாக அச்சம், ஆசை, கோபம் ஆகியவை அசுர குணங்கள். மரணமில்லா பெருவாழ்விற்கு இவை மூன்றும் விலக்கல் வேண்டும் என்கிறார்.

அடுத்து,
...
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,
வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்குமினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்! (10)

நஞ்சுண்டும் சாகமல் இருப்பது கற்றால், வேறென்ன வேண்டும்?
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறனும் கொண்டு தேம்பாமல், அஞ்சாமல் வாழ்வோம் புவியினிலே.
அடுத்ததாக 'பொறுமையின் பெருமை' என்கிற பகுதியில் இடம் பெற்றுள்ள நான்கு பாடல்களில் ஒன்று,

தணிகைமலை உறையும் வேலனை பொறுமையின் பெருமையெனச் சொல்கிறார்:
திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற்றிருக்கும் அதன் பொருளைக் கேளீர்!
திருத்தணிகை என்பதிங்கு பொறுமை யின்பேர்.
செந்தமிழ்கண்டீர், பகுதி'தணி'யெனுஞ்சொல்,
பொறுத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
'பொறுத்தவரே பூமியினை ஆள்வார்'என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்.
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்! (11)
பின்னர் 27ஆம் பாடல் முதல் 36ஆம் பாடல் வரை உபதேசம் எனத்தலைப்பிட்டு பத்து பாடல்கள் எழுதி இருக்கிறார். இவையெல்லாம் சித்தர் பாடல்கள் போல் இருப்பன....
வாசியை நீ கும்பகத்தால் வலியக்கட்டி 
மண்போல, சுவர்போல வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே 
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதிற் பயனில்லை; அனுபவதாற் 
பேரின்ப மெய்துவதே ஞான மென்றான் (28)
வாசி : மூச்சு; கும்பகம் : மூச்சை அடக்கியாளும் யோகமுறை
கிணற்றில் ஆழத்தில் பிம்பமாய் ஆதவன் தெரிவதுபோலே, ஈசனை, உன் ஆன்மாவில் சச்சிதானந்தத்தின் பிம்பமதைக் காணத்தெளிவாய். இதைப்பேசிப் பயனில்லை. உன்னால் உன்னில் உணர்ந்தால் மட்டுமே அது ஞானம்.

பாரதி அறுபத்தாறு - முழுமைக்கும் இங்கே பார்க்கவும்.

சுத்த அறிவே சிவம் என்று பறைசாற்றும் பாரதி, எல்லா உயிர்களிலும், எல்லா திடப்பெருள்களிலும் இருப்பது இறைவன் என அறுதியிட்டுக் கூறுகிறார். மேலே பாரதி சொல்லும் அசுர குணங்களை அழித்து அச்சம் ஒழித்து, பொறுமையுடன் அந்த இறைவனை, பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலாவின் வண்ணத்தில் பார்க்கத் தெரிந்தவரே, மரணத்தை வெல்வார் என்பது திண்ணமன்றோ!

மரணத்தை வெல்லும் வழி சொன்ன பாரதி ஏன் மாண்டான் என்போர் சிலர். மாண்டதெல்லாம் மரணமில்லை மதியிலிகாள், மரணத்தை வென்ற பின்னே, மரணம் வருமோ பின்னே? காலனைக் காலால் மிதித்தவனுக்கு ஏது மரணம்? ஸ்தூல உடலில், பரமனைப்பார்த்த பின்னே, இந்த உடலும் ஒரு பொருட்டோ, என அதனைத் துய்த்த பாரதி, அமரன். பாரலுகில் இவனைப்போல் இன்னொருவன் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை.