திங்கள், 6 ஜனவரி, 2014

குரு என்கின்ற பந்தம்!

 எது நிகழ்ந்தாலும் மாறாதது குருவின் அருள் நிறைந்த இறை நிலையே.
வெற்றி, வேதனை என்ற இரண்டும் இல்லாத நிலை அது.
எந்த இரண்டு மனிதனின் நட்பை விட, சீடன் குருவிடம் கொள்ளும் மன அலைத்தொடர்பே உயர்ந்தது.
எப்போதும், கருணையை, இறை நிலையை உணர்த்துகிற ஒரு இடம் தான் குருவின் மீதான தொடர்பு.
இந்த உடலுக்கு உள்ள அனைத்து பந்தங்களிலும் கூட நமக்கு இறையை போதிக்கிற ஒரே பந்தம் குரு பந்தமே.
எந்த நிலையிலும், குருவின் மீதான மன அலை தொடர்பு என்பது அந்தந்த அலை இயக்கத்திலே இருந்து நமக்குத் தேவையான அனைத்து உயர்ந்த அனுபவமும் கிட்ட உதவுகிறது.
குரு என்ற ஒருவர் உடலைக்கொண்டு இருக்கலாம். ஆனால் சீடன் குருவை உடல் என்ற எல்லையைக் கொண்டு பார்ப்பது அந்த சீடனின் உயர்வை மட்டுப்படுத்தும்.
குரு தனது உடலைக் கடந்த அறிவிலே நிலைத்து இருந்து கொண்டே இருப்பதால், குருவின் மீதான எண்ண அலையானது எண்ணத்தை உயர்த்தி இறை வரை கொண்டு போகிறது.
குரு என்ற ஒருவர் உடலைக் கொண்டு இருந்தாலும், உடலைத் தாண்டிய சமாதியில் இருந்தாலும், அண்டுகிற சீடனுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைத்துக்கொண்டே தான் இருக்கும். குருவின் இந்த உதவியானது அவரது உடலைக்கொண்டு செய்வது அல்லவே!
இறை அறிவிலே ஒன்றானால், அவரும் நாமும் ஒன்றாகிற போது நமக்கு அங்கே உடல் எங்கே இருக்கும்? உதவுகிற குருவென்ற அருளுக்கு ஏது உடல்? யாருடைய உடலைத் தேடுகிறாய் சீடனே? அருள் என்ற நிறையிலே உனக்கேது உடல்?
அருள் மட்டுமே நீடித்து விளங்கும்போது, அங்கே பொருளென்று கொள்ள முனைவோருக்கு இடமேது?
தவ நிலையிலே தான் ஆதிக்கு சமமான சமாதி நிலையை மனிதன் எட்டமுடிகிறது என்கிற போது, இருப்பாகிய இறை நிலை சதாசிவமாக எப்போதும் தியானனிலையை விட்டு நீங்காது விளங்குகிறது என்பது தெளிவாகிறது.
எது நிலையானதோ அங்கே குருவின் இயக்கத்தைத் தேடிப்பார்த்தால் அங்கே சீடனின் இயக்கம் நின்று விட்டிருக்கும்.ஆதியோடு ஒன்றாகி இருந்து விட்டிருக்கும்...
இந்த உடலை மட்டும் பிடித்துக்கொண்டு அறிவாக உள்ள குருவைப் பார்ப்பது என்பது, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் பயன் தராது.
எது நிலைக்குமோ அதுவே குரு. எது நீடிக்குமோ அது குரு.
இந்தக்கணத்திலே உடலை விட்டு உயிர் பிரிந்தாலும், தங்கு தடை இன்றி அந்த ஈர்ப்பிலே கலந்து இறையோடு சென்று சேர வேண்டும் இந்த உயிர். அதற்கு குருவென்ற உதவியை தொடர்ந்து பற்றுதல் முக்கியம்.
எந்தகோணத்திலே ஆராய்ந்தாலும், எத்தனை புத்தகத்தைப் படித்தாலும் குரு இல்லாமல் இந்த வாழ்விலே அருள் என்ற ஒன்றை பெறுதல் சாத்தியமே இல்லை.