திங்கள், 24 ஜூன், 2013

பிறப்பென்னும் பேதமை

பிறவி என்பதே துன்ப மயமானது என்பதை யாவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் உணரத் தொடங்குகிறோம்.
தாயுமானவர் கூற்றின்படி சொல்ல வேண்டுமானால்
....மெய்ஞான சுகநிட்டை சேராமலே
சோற்றுத் துருத்தியை சதமெனவும் உண்டுண்டு
தூங்க வைத்தவர் ஆர்கொலோ
தந்தைதாய் முதலான அகிலப் பிரபஞ்சம்
தனைத் தந்தது எனது ஆசையோ
தன்னையே நோவனோ பிறரையே நோவனோ
தற்காலமதை நோவனோ
பந்தமானது தந்த வினையையே நோவனோ
பரமார்த்தம் ஏதுமறியேன்
...... (பரிபூர்ணானந்தம் -7)
(பரமார்த்தம் =பரம அர்த்தம், உட்பொருள்)
சோற்றுத் துருத்தி என்று இந்த உடலை வருணிக்கிறார் தாயுமான சுவாமிகள். இதை நிலையானதாகக் கருதி உண்பதும் தூங்குவதுமாக மெய்ஞானத்தைப் பற்றிய சிந்தையின்றி பொழுதை கழிக்கிறேனே; இந்த உடலை எடுப்பதற்கு காரணம் என்று நான் எதையெதையெல்லாம் நொந்து கொள்வது என்று பரிதவிக்கிறார்.
இதே பரிதவிப்பை கபீரின் வரிகளிலும் காணலாம்.

பாதாதி கேசம் என்னுள் பேதமை,தந்ததே பிறவி என்னும் மாமை
தாதா! நீயும் தீ்ர் என் துன்பம்,தொலைத்திடு இத்துயர் தரும் சென்மம்
(மாமை =துன்பம் ; தாதா= பெருங்கொடையாளன்,அளவின்றி தருபவன்)'காலிலுள்ள நகக்கண் முதல் சிரம் வரையிலும் ஒவ்வொருவரு திசுவிலும் என்னுள் அறியாமை பொங்கி வழிகிறது. அப்படி இருக்கும் பொழுது பிறவியை ஒழிக்கின்ற ஞான்ம் எங்கிருந்து வர சாத்தியம்' என்ற தன் இயலாமையை குறிப்பால் உணர்த்தி அதற்கானத் தீர்வையும் இறைவனிடமே விட்டு விடுகிறார் கபீர்.'எல்லாவற்றையும் அருளக்கூடிய அருளாளா ! இந்தப் பிறவித்துன்பத்தையும் போக்கிடுவாய்' என்று சரணடைகிறார்.
அருணகிரிநாதரும் கந்தரனுபூதியில் இதைப் போன்றே
மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ அடியேன் அலையத் தகுமோ ...25
('மெய்யே என'= உண்மையானது என்று; உகந்து =மிக்க விருப்புடன்)
மின்னே நிகர் வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?.....27
(மின்னே நிகர் = மின்னலைப் போன்று தோன்றி மறைவது)
பாழ்வாழ்வெனும் இப்படுமாயையிலே
வீழ்வாயென என்னை விதித்தனையே
தாழ்வானவை செய்தன தாம் உளவோ .... 31
விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க் கழல் என்றருள்வாய் .....35
என்று பலவாறாக பிறவியெனும் பிணிக்கானக் காரணத்தை எண்ணியெண்ணி கந்தனிடம் முறையிடுகிறார்.
'விதி காணும் உடம்பை விடா வினையேன்' என சொல்லும் கபீரின் கருத்தொற்றுமை நன்கு விளங்குகிறது.
வித்திலிருந்து மரமும் பின்னர் அதிலிருந்து பலநூறு வித்துகளும் மீண்டும் அவற்றிலிருந்து மரங்கள் உற்பத்தியாவதும் தொடர் நிகழ்ச்சி போல உடல் எடுத்ததன் காரணமாய் வினை புரிதலும் பின்னர் அவ் வினைகளே அடுத்தடுத்து பிறவிகளுக்கு காரணமாய் அமைவதையும் 'வெவ்வினை' என்று உரைக்கிறார் அருணகிரியார்.
தலைப்பட்டார் தீரத்துறந்தார் ;மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர் .....348
பிறப்பென்னும் பேதமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பதறிவு ..........358
'மயங்கி வலைப்பட்டார்' என்பதிலும் 'பிறப்பென்னும் பேதமை'என்பதிலும் வள்ளுவர் அறியாமையில் சிக்கித்தவிப்பவர்கள் நிலையை சொல்வது போலவே கபீரும் 'நக்-ஸிக் பரா விகார்' என்று உணர்த்துகிறார். பரா விகார் என்பது 'மன விகாரங்கள் நிறைந்த' என்று பொருள்படும்.
'கதி காண மலர்கழல் என்று அருள்வாய்'என வேண்டும் அருணகிரி போல் 'மேரீ கரோ ஸம்ஹார்' என்று விடுதலைக்காக இறைஞ்சுவதிலும் கபீர், ஞானிகளின் கருத்து ஒருமைப்பாட்டை புலப்படுத்துகிறார்.