சனி, 7 மார்ச், 2015

நவகோடி சித்தர்களுக்கு தலைவனாகிய ஆசான் அகத்தீசனை தியானித்தால் ஏற்படும் நன்மைகள்:

திருவடியே சிவமாவது தேரில்
திருவடியே சிவலோகம் சிந்திக்கில்
திருவடியே செல்கதியது செப்பில்
திருவடியே தஞ்சம் உள்தெளிவார்க்கே
திருமந்திரம்-உபதேசம்-கவி எண்:138
திருவடிஞானம் சிவமாக்குவிக்கும்
திருவடிஞானம் சிவலோகம்சேர்க்கும்
திருவடிஞானம் சிறைமலமீட்கும்
திருவடிஞானமே திண்சித்திமுத்தியே
திருமந்திரம்-திருவடிப்பேறு-கவி எண்:1598

ஓம் அகத்தீஸ்வரா! உன் திருவடியை கோடானுகோடி ஆன்மீகவாதிகள் உருகி தியானம் செய்ததால் அவர்களுடைய முன்ஜென்மத்தில் செய்த வினைகளும் இந்த ஜென்மத்தில் செய்த வினைகளும் நீங்கி நல்வினை, தீவினைப்பற்றி புரிந்து நல்வினையை பெருக்கியும், தீவினையை நீக்கியும் ஆசிபெற்றார்கள். நல்வினை, தீவினைப்பற்றி புரிந்துகொள்வதே பேரறிவாகும்.
நல்வினையை பெருக்கிக்கொண்ட மக்கள்தான் தூல உடம்பாகிய புறஉடம்பையும், சூட்சும தேகமாகிய அகஉடம்பையும் அறியமுடியும். புறஉடம்பாகிய தூலதேகத்தையும் அகவுடம்பாகிய சூட்சுமதேகத்தையும் அறிந்துகொள்ள உமது ஆசியின்றி முடியாது என்று அறிந்துகொள்ளவும் உமது ஆசிவேண்டும். உமது ஆசியின்றி எத்தனை சாஸ்திரங்கள், வேதங்கள், படித்தபோதிலும் அதனுடைய நுட்பம் (சூட்சுமம்) உணரமுடியாது என்பதை உமது திருவருள் கடாட்சத்தால் அறிந்துகொண்டேன்.
உன்திருவடியைப் பற்றி உருகி தியானிக்க நினைக்கிறேன். ஆனால் நான் செய்த பாவங்களோ என்னை தியானிக்க முடியாமல் தடை செய்கிறது. அந்த தடையை நீரே உடைத்து நாயினும் கடையேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதித்து என்னை ஏற்று அருள்செய்யும்படி உமது திருவடி பணிந்து கேட்டுக்கொள்கிறேன்.
உருகி தியானிக்க நினைக்கிறேன், முன்செய்த பாவத்தால் கல்மனம் உருகவில்லை. கல்மனம் உருகி தியானிக்க ஆசிவேண்டும். உடனே கல்மனம் உருகாது என்பது உன் திருவருளால் அறிந்துகொண்டேன். உன்னை தியானிக்க தியானிக்கத்தான் கல் மனமாகிய என் மனம் உருகி தியானிக்க முடியும் என்பதையும் உமது திருவருளால் உணர்ந்துகொண்டேன்.

1 : நன்னெறியைக் கடைபிடிக்க வெண்டும் என்றால் தலைவன் ஆசான் அகத்தீசன் தான் என்று அறிந்து பூஜை செய்யவேண்டும். பூஜை செய்தால்தான் நன்னெறி எது, தீநெறி எது என்று உணரமுடியும். எனவே பூஜை செய்தால்தான் நன்னெறியைக் கடைபிடிக்கமுடியும்.
குறிப்பு 2 : ஆசான் அகத்தீசரை பூஜிக்க பூஜிக்க வினை நீங்கும். மேலும் மேலும் பூஜிக்க பூஜிக்க தன்னை பற்றி அறியக்கூடிய சிற்பறிவு உண்டாகும். மேலும் மேலும் உருகி தியானிக்க ஆன்மா மும்மலமாகிய சிறையில் அகப்பட்ட விபரம் தெரியும். மேலும் விடாது திருவடியை பற்றி உருகினால் சிறைப்பட்ட ஆன்மா விடுபட்டு ஆன்ம ஜோதி தோன்றும். மேலும் ஜீவான்மா பரமான்வாகும் (எல்லாம் வல்ல இயற்கை நாமாகவும், நாமே எல்லாம் வல்ல இயற்கையாகவும்). அதுவே வீடுபேறு அல்லது மோட்சமாகும்.
குறிப்பு 3 : சரியை, கிரியை, யோக, ஞானம் அல்லது அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய இரண்டும் ஒன்றேயாகும். இந்த நான்கும் அறியவேண்டுமென்றால் ஆசான் அகத்தீசன் அருள் இருக்க வேண்டும். ஆசான் அருள்பெற காலை, மாலை ஓம்அகத்தீசாய நம என்று முடிந்த அளவிற்கு நாமஜெபம் செய்யவேண்டும். நாமஜெபம் செய்ய செய்யத்தான் மேற்கண்ட நான்கு படிகளையும் அறிந்து கடக்கமுடியும். நாமாக கற்றுத்தெளிவது என்பது முடியாததாகும். எனவே, ஆசான் அகத்தீசன் திருவடியை பூஜித்து ஆசிபெறுவோம், வீடுபேறு அடைவோம்.
குறிப்பு 4 : சாகாக்கல்வி என்பது - முற்றுப்பெற்ற முனிவராகிய ஆசான் அகத்தீசரிடம் இனி நான்பிறவாதிருக்க வேண்டும் என்று உருகி தியானிப்பதே சாகாக்கல்வி ஆகும்.
கடவுள் அருள் பெறுவதற்காக ஆடு, கோழி, பன்றி, எருமைகிடா போன்ற உயிர்களை பலியிடுகின்றார்கள். அப்படி பலிகொடுத்தால் இறையருள்பெற முடியாது. பாவம்தான் மிகுதியாக வந்து சேரும். உயிர்பலி கொடுக்க கொடுக்க வறுமையும், பிணியும், பகைமையும், மன உளைச்சலும் ஏற்படும் என்று ஆசான் சிவவாக்கியர் தம் பாடலில் அருளியுள்ளார்கள்.