சனி, 31 அக்டோபர், 2020

சித்தன் போக்கு சிவன் போக்கு.!!!

சித்தர் தமிழே அகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே உகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தழிழே மகரம் கூறும் அறிவீர்!
சித்தர் தமிழே அ+உ+ம கரஞ் சேர்ந்த ஓங்காரம்

சித்தர்களின் பாடல்களில் நிறைய ரகசியங்கள் நிரம்பி இருக்கின்றன.
சுலபமான நிரந்தரமாக குணமாக்கும் மருத்துவ முறை.
பக்தி நெறி, அருவ வழிபாடு, தன்னையுணர்தல், இறைவனின் நிலை அறிதல், இறையோடு ஒன்றுதல் என பல நிலைகளை அவர்கள் கூறியுள்ளார்கள்.

இதை விட மேலான சாகாக் கல்வி என்னும் இறவா நெறி பற்றிக் கூறியுள்ளார்கள். இதுவே சித்தர்கள் பற்றித் தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வம் கொள்ளக் காரணமாக அமைகிறது.
அவர்கள் பாடல்களில் அவர்கள் பயன்படுத்தி உள்ள வார்த்தைகளின் நேரடிப் பொருளை கொண்டு நாம் அந்த பாடலுக்கான பொருளை தெரிந்து கொள்ள முயன்றால் அது கேலிக்குரியதாக மட்டுமே இருக்கும். அவர்களது பாடல்களை நமது வெற்று அறிவை கொண்டு புரிந்து கொள்ளுதல் இயலாது.
காரணம் இந்த சித்தர் கல்வி என்பது எவர் ஒருவர் தன்னுடைய வாழ்நாளை இறை நிலையினை அடைவதற்காக செலவிடத் தயாராக இருக்கிறாரோ அவர்களுக்கானது.

உலகியல் செய்து கொண்டு சித்தர்களின் பாடல்களை படித்துப் பொருள் கொள்வது என்பது மிகுந்த சிரமமான காரியம்.
இருப்பினும் சித்தர்களின் அருள் மற்றும் விட்ட குறை இருப்பவர்கள்
பாடலுக்கான உண்மை பொருள் உணரப் பெறுவார்கள்.
சித்தர்களை கேலி செய்பவர்கள் கேலிக்குரியவர்களாக மாறுவார்கள் இது உண்மை, சத்தியம்.

நாம் நினைப்பது போல சித்தர்கள் எண்ணிக்கை வெறும் பதினெட்டு மட்டுமல்ல. சித்தர்கள் கோடிக் கணக்கானவர்கள். அதில் ஒரு சிலர் மட்டுமே பாடல்கள் எழுதி வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள்.
மற்றவர்கள் இறை நிலை அடைந்து ஜீவ சிவ ஐக்கியம் ஆனவர்கள்.
இந்த கல்வியை கற்பதற்கு நாம் கற்ற உலகியல் ஏட்டு கல்வி பயன்படாது என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

நாம் பிறந்தது முதல் அதிகபட்சமாக நூறு ஆண்டுகள் வாழுகிறோம் என்றால் அதில் அதிகபட்சமாக அறுபது வயது வரை ஒரு நல்ல வேலை செய்வதற்கு குறைந்தது இருபது முதல் இருபத்தைந்து ஆண்டுகள் ஏட்டுக் கல்வி பயில்கின்றோம். அதன் பிறகு அந்த கல்வியை வைத்து அதிகபட்சமாக முப்பது முதல் நாற்பது ஆண்டுகள் பயன் அடைகிறோம். (வேலை செய்து ஊதியம் பெறுவதன் மூலம்) பிறகு முதுமைக்குள் ஆட்பட்டு தள்ளாட்டம் எய்தி, மரணத்தை அடைகிறோம்.
இதற்கு இடையில் அந்த படிப்பைப் படித்தால் நாள் வேலை கிடைக்கும்,
இந்தப் படிப்பை படித்தால் சிறந்த வேலை கிடைக்கும் என்று ஓடி ஓடிப் படிக்கிறோம்.
இப்படி அதிகபட்சமாக நாற்பது ஆண்டுகள் பயன்படக்கூடிய கல்விக்கே நாம் இருபது ஆண்டுகள் செலவிட தயாராக இருக்கும்போது. என்றைக்கும் அழியாத நிலையினை தெரிவிக்கும் ஒரு கல்வியினை கற்பதற்கு நாம் எவ்வளவு நேரம் செலவிட தயாராக இருக்கிறோம் என்றால் பதில் பூஜ்யமாகத் தான் இருக்கும்.
ஒரு கதைப் புத்தகத்தைப் படிப்பது போல சித்தர்களின் பாடல்களைப் படித்துப் புரிந்து கொள்ள நினைத்தால் அது முடியாத காரியமாகத்தான் இருக்கும்.
ஒருமையுள் தான் கற்ற கல்வி எழு பிறப்பும் தொடரும் என்று திருவள்ளுவர் சொன்னது இந்த கல்வியைத்தான்.
ஆகவே ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து நம்மை மேல் நிலைக்கு உயர்த்தும் ஒரு கல்வியை சுலபமாக கற்றுக் கொள்ளலாம் என்று நினைத்தால் அது ஏமாற்றமாகவே முடியும்.
இந்தக் கல்வியைக் கற்பதற்குச் சீடனை தேர்ந்தெடுப்பதற்கு கூட சாதனா சாதுட்டயம் என்று சித்தர்கள் வைத்து இருந்தார்கள்.
பக்குவப் பட்டவர்களுக்கே அதை போதித்தார்கள்.
காரணம் இது தன்னை உணரும் கல்வி.
ஏம சித்தி எனப்படும் சாதாரண உலோகத்தை, மாற்று உயர்ந்த தங்கமாக மாற்றும் கலை.
சாகா கல்வி எனப்படும் கற்பப் பயிற்சி
தத்துவ நிக்கிரகம் எனப்படும் தத்துவங்கள் அனைத்தையும் விட்டு விலகும் நிலை.  கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்னும் ஜீவ சிவ ஐக்கியம்
என்னும் படிகள் உள்ளன.

சித்தர்களின் தத்துவங்களை நாம் சித்தாந்தம் என்றோ, வேதாந்தம் என்றோ, நாதாந்தம் என்றோ, போதாந்தம் என்றோ, கலாந்தம் என்றோ, யோகாந்தம் என்றோ தனி ஒரு அந்தத்திற்குள் அடக்கி விட முடியாது. காரணம் ஒவ்வொரு அந்தத்திலும் சொல்லப்பட்டவை ஒவ்வொரு அனுபவம் மட்டுமே. அதுவே முடிந்த முடிவாக இல்லை.
சித்தர்களின் வார்த்தைகளில் அனைத்து அந்தங்களும் இருக்கும் அதற்காக அவர்கள் ஒவ்வொன்றிலிருந்தும் கொஞ்சம் எடுத்துக் கொண்டார்கள் என்று பொருளல்ல. அவர்களின் உள் அனுபவத்திற்கு பொருந்துபவை மட்டுமே சொல்லப்பட்டிருக்கும். அந்த அனுபவங்கள் ஒவ்வொரு அந்தத்திலும் சிறிது இருக்கலாம். ஆகவே அவர்கள் அனுபவமே வார்த்தைகளாக் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆகவே அவர்கள் வேதாந்திகளா ? அல்லது சித்தாந்திகளா ?
என்று நாம் குழம்பி மற்றவர்களையும் குழப்ப வேண்டாம்.
இது மிகப் பெரிய ஆய்வு!