வியாழன், 19 நவம்பர், 2020

மெய் ஞானம் எனும் விஞ்ஞானம்

மௌனமே வடிவான ஆதிப் பரம்பொருளின் மௌனம் கலைந்த போது விளைந்த சலனத்தில் முதன் முதலில் எழுந்து விரிந்த ஒலி அலையே பிரணவம், என்பது வேதம் உணர்ந்த ஞானிகள் வாக்கு. மௌனத்தின் அலைகளாகிய பிரணவம் விரிந்து எல்லாமாய் உருவானதாலோ என்னவோ, பிரணவம் குறித்த ஞானிகளின் தத்துவக் கருத்துகளும் விரிந்து கொண்டே இருக்கிறது. அவ்வாறாகிய ஒரு கருத்தை கண்ணுற்ற போது அதை உங்களோடு பகிர்ந்து கொள்ள மனம் விரும்ப, விருப்பம் கருத்தாய் விரிகிறது. மனம் புலன்களைக் கடந்து விரிவடையும் போதுதான் பரத்தில் ஒடுங்குகிறது. மௌனத்தில் அடங்குகிறது. ஞானத்தில் திளைக்கிறது. ஒடுங்கியது விரிகிறது, விரிந்தது ஒடுங்குகிறது. இது ஒரு சுழற்சி. எனவே சுழல்வது என்பது அணுவுக்கும், அணுவிலிருந்து விளைகின்ற அனைத்திற்கும் இயல்பாயிருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில் எல்லாம் சுழன்று கொண்டே இருக்கிறது. ஆகவே நம் உடலில் உள்ள நாடிகள் சக்கரங்கள் எல்லாம் சுழல்கின்றன.
நாடிகள் மொத்தம் 72,000 எனச் சொல்லப்படுகிறது. அவற்றில் முக்கிய மையங்களாக விளங்கும் 1008 எடுத்துக் கொண்டார்கள். அந்த 1008 ல் முக்கியமானது சகஸ்ராதார நாடியாகும். இந்த சகஸ்ராதாரம் என்று குறிப்பிடப்படுவது சகஸராரச் சக்கரமே ஆகும்.
ஆதாரங்கள் அல்லது சக்கரங்கள் எண்ணிக்கை குறித்து பலதரப்பட்ட கருத்துக்களை நம் முன்னோர்கள் சொல்லியிருந்தாலும் ஏழு முக்கிய ஆதாரங்களே பெரும்பாலான யோக நூல்களில் முக்கியத்துவம் பெருகின்றன. எல்லா நாடிகளும் சக்கரங்களே என்றாலும், அவற்றின் இயக்க ஆற்றல், உருவம் இவற்றை முன்னிலைப் படுத்தி ஏழு சக்கரங்களும் தலைசிறந்த ஆதாரங்களாகக் குறிப்பிடப்படுகின்றன. இப்போது இந்த 1008ல் தலைசிறந்து விளங்கும் சகஸராதார நாடியானது உச்சந்தலையில் ஒரு தாமரை மொட்டு தலைகீழாக தொங்குவது போல இருக்கும். அது ஞானம் அடையாதவரை தலைகீழாகவேதான் இருக்கும். ஞானிகளுக்கு அது நிமிர்ந்து விரிந்து இருக்கும். மற்ற நாடிகளும் சற்று சுருண்டு காணப்படும். அவற்றை நிமிர்த்தி விரியச் செய்தால் கடைசி நாடியும் விரியும்.
ஒவ்வொரு நாடிகளுக்குள்ளும் பிரணவம் ஒவ்வொரு அக்க்ஷரமாக விரிந்து ள்ளது. அந்த அக்ஷரங்களை ஞானத்தால் உணர்ந்த நம் முன்னோர்கள், அவற்றை அடிப்படையாகக் கொண்டு பெயர்களை உருவாக்கினார்கள். 1008 நாடிகளின் அக்ஷரங்களில் உருவானதே சகஸ்ரநாமம் எனப்படுகிறது. அந்த நாமங்களை உச்சரிப்பதன் மூலம் அந்தந்த நாடிகளில் அதிர்வை உருவாக்கி அவற்றின் அவற்றின் இதழ்களை விரியச் செய்வார்கள். அடுத்த படியாக அதிமுக்கியமான 108 நாடிகளின் அக்ஷ்ரங்களில் உருவானதே அஷ்டோத்ர நாமங்கள். 108ல் முக்கியமான 18 கேந்திரங்களை கண்டு அவற்றில் விபூதி தரிக்கச் சொல்கிறார்கள். இன்னும் நுணுக்கமாக ஆராய்ந்து 12 நாடிகளைக் கண்டு அவற்றில் நாமம் இடச் சொல்கிறார்கள். அந்த 12 ஐயும் சுருக்கி 8 ஆக்க விளைந்ததே அஷ்டாச்சரம். 
இறுதியாக ஆறு ஆதாரங்களையும் அடிப்படையாகக் கொண்டு அந்த அக்ஷ்ரங்களில் இருந்து வந்ததே ஷடாச்சரம். அடுத்தது பஞ்சாட்சரம். இவ்வாறாக மூலாதாரத்தில் உள்ள நாடியை சகஸராரத்துக்கு செலுத்தினால் உண்டாகும் வடிவத்தை நிமிர்த்துப் போட்டால் ஓம் என்ற தோற்றம் காணப்படும். இதுவே ஓங்காரத் தத்துவம். எனவே பிரணவ மந்திரத்தை இடைவிடாது எல்லா நேரத்திலும் மனதுக்குள் சத்தமாக உச்சரித்துப் பழகி வரும் போது இயல்பாகவே ஞானவாசல் திறக்கும்.
எட்டிரண்டு என்று சித்தர்கள் குறிப்பிடுவது அ,உ என்ற எழுத்துக்களையே. ஆங்கிலம் வருவதற்கு முன் நம் தமிழ் எழுத்துக்களே நடைமுறையில் இருந்தன.
1க்கு க, 2க்கு உ, 3க்கு ங, 4க்கு ச, 5க்கு ரு, 6க்கு கா,7க்கு எ, 8க்கு அ, 9க்கு சு, 10க்கு ய என்பதாகும் அவை. இதில் எட்டுக்கு அ வும், இரண்டுக்கு உ வும் இருப்பதையும், அவை மந்திர அட்சரங்களான அ, உ என்ற உயிர் எழுத்துகளை குறிக்கவே எட்டிரண்டு என்றுசித்தர்கள் பாடல்களில் மறைபொருளாகச் சொல்கின்றனர். இதனை அகாரம், உகாரம் எனப் பெயரிட்டு, இந்த அ, உ என்ற எழுத்துகளே பல தத்துவங்களுக்கும் அடிப்படையாக உள்ளதால் அதனை மறைவாக எட்டிரண்டு என்றனர். 
இந்த அகார உகார நாதத்தில் இருந்துதான் அனைத்தும் தோன்றி மறைகின்றது. ஓம் என்ற ஓங்காரத்தில் உள்ள அ,உ இல்லாத மொழிகளே இவ்வுலகில் இல்லை. பிறந்த குழந்தையின் முதல் மொழியே ஊ, ஆ (குவா) என்ற அழுகுரல்தான். உன்னிப்பாகக் கவனித்துக் கேட்டால் பறவைகள், விலங்கினங்கள், உலக உயிரினங்கள் அனைத்தின் சப்தத்திலும் இந்த அகார உகார ஓசை அடங்கியிருப்பதை அறிய முடியும். கடலோசை, மழையோசை, இடியோசை, புயலோசை, தீயோசை மற்றும் இயற்கையின் எல்லா ஓசைகளும் இந்த சப்தத்தால் சக்தி பெற்று இயங்கி வருவதை உணரமுடியும்.
வேதம், இசை, மந்திரம், தந்திரம், யந்திரம் என அனைத்திலும் இந்த எட்டிரண்டு ரகசியமாய்ப் பொருந்தியுள்ளது. இந்த அகார உகாரமே நாத விந்தாகவும், சூரிய சந்திரனாகவும், சிவசக்தி யாகவும் இருப்பதை சித்தர்கள் உணர்ந்தனர். எனவே இவ்வட்சரத்தைப் பற்றியும் இயக்கும் முறைமையை அறிந்து கொள்ளவும் வலியுறுத்தி எட்டிரண்டு என்று மறைவாகவே சொல்கிறார்கள்.
அ, உ, ம் என்ற அட்சரங்களே ஓம் எனும் பிரணவ மந்திரத்தில் உள்ளது.அனைத்து மந்திரங்களுக்கும் மூலமானதும் இந்த ஓங்காரம் எனும் பிரணவமே. நாதமாகிய ஒலியும் விந்தாகிய ஒளியும் இணைவதையே 'நாத விந்து கலாதி நமோ நம' என்பார் அருணகிரி நாதர். பஞச இந்திரியங்களால் அறியப்படுவது அகாரம், மனதினால் அறியப்படுவது உகாரம், ஞானத்தினால் மட்டுமே அறியப்படுவது மகாரம். இனறைய விஞ்ஞானம் கண்ணுக்குத் தெரியாத அணுவில் கூட நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் எனும் மூவகைச் சக்திகள் உள்ளதாக கண்டறிந்துள்ளது குறிப்பிடத் தக்கது. 
இதையே குணங்களாக சத்துவம், தமோ, ராஜோ எனபர். அதாவது இதுதான் விஞ்ஞானத்தால் முறையே நேர்நிலை இயக்கம்,எதிர்நிலை இயக்கம்,நடுநிலை இயக்கம் என்று கூறப்படுகிறது. ஆராய்ந்து தோண்டிக் கொண்டே சென்றோம் என்றால் விஞ்ஞானத்தின் வேர்கள் மெய்ஞானத்தில் பரவி படர்ந்திருப்பதைக் காண முடியும்.. 
தொட்டுக்  காட்டாத வித்தை, சுட்டுப்போட்டாலும் வராது  என்பார்கள். நல்ல குருவின் துணை கொண்டு இவற்றைப் புரிந்து கொள்ள  உங்களுக்காக நானும் பிரார்த்தித்து கொள்கிறேன்!.